கிறுக்கல்கள்..

2011-12-13

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

**
அரைமணி நேரம் பேருந்து பயணத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்து இரண்டு வார்த்தை பேசியவன் கூட இறங்கும் போது போயிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போறான்..
ஆனால் ஆன்லைனில் சாட்டிங்கில் வரும் பாழ்ய நண்பர்கள் bye என்று கூட சொல்லாமல் தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.

**

கற்பனைகள் அதிகம் வளர்க்காதீர்கள்
அவை கட்டவிழ்த்து விடப்பட்டால்
அடங்குவதும் அடக்குவதும் மிக கடினம்..

**

சும்மா இருக்கும் ஒவ்வொரு கணமும்
எதாவது செய் என்று சொல்கிறது மனம்..

**
ஆழ்ந்த வேலையில் ஈடுபடும் போது
கொஞ்ச ஒய்வு எடுத்துக் கொள் என்கிறது மூளை..

**

கூடுதலா ஒன்று வேண்டுமென்று கூட்டப்பட்டு,
நெருக்கம் பெருக்கலாக நிகழ்த்தப்பட்டு,
விடை தவறானதால்
கழித்து விடப்படுகிறது...!

பெண் சிசுக் கொலை..

**
என்னைப் பார்த்து..,

அவள் முகம் சுழிக்கும் ஒவ்வொரு முறையும்
என் தற்கொலை முயற்சி நிகழ்கிறது..!

அவள் முகம் மலரும் பொழுதெல்லாம்
என் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது..!

**
தலையில் ஈரத்துண்டுடன் ,
ஆறு புள்ளி கோலம் வரைந்துவிட்டு,
விரலால் அளக்கப்பட்ட சாணியில்,
செம்பருத்திப் பூவை நட்டு விட்டு சென்று விட்டாள் அந்த தேவதை..

ஈயும் மொய்க்கிறது.. தேனீயும் மொய்க்கிறது..

**
வேர்களை விட விழுதுகளை பிடித்துக்கொள்ளுங்கள்..
எனெனில்
வேர்கள் உங்களை உருவாக்கியது..
விழுதுகள் நீங்கள் உருவாக்கியவை...!

**
உனக்கு சூரியன் உதிப்பது பிடிக்குமா..? மறைவது பிடிக்குமா..? என்று கேட்கும் நண்பனுக்கு எப்படி புரிய வைப்பேன்.
ஒளியை மறைக்க வரும் இருளை விட, இருளை விலக்க வரும் ஒளியே சிறந்தது என்று...!

**
கடல் அருகிலும் ஒரு இனம் இருக்கு,
மலை அருகிலும் ஒரு இனம் இருக்கு,
அவர்களை கண்டுகிடத்தான் ஆள் இல்லை..!

**


வாசிப்பனுபவம்..

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்








புத்தக வாசிப்பின் இனிமையை திரு. ராஜீமுருகன் இந்த வார ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு சிலிர்த்துப் போனேன். உண்மையான வாசிப்பனும் அடையும் பேரானாந்தத்தை அவர் எழுதிருப்பார்.


நாம் வாங்க நினைக்கும் புத்தகத்தை தேடி அலைந்து திரிந்து கடைசியில் கண்டடையும் போது எற்படும் மன எழுச்சி சொல்லி மாளாது.
வண்ணநிலவனின் காலம் என்ற நாவல் வாங்க நான் ஒரு வருடம் அலைந்தேன். அதைப் படித்துவிட்டு நெல்லையப்பனாக என்னை உருவகப் படுத்திக்கொண்டு பாளை வீதிகளில் அலைந்தேன்.
அதைப் போல் அவருடைய ரெய்னீஸ் ஐயர் தெரு என்ற நாவலும். முருகன்குறிச்சிப் பகுதியில் அமைந்துள்ள அந்த தெருவை பலமுறை கடந்திருந்தாலும், அந்த நாவல் வாசிப்பிற்கு பிறகு அந்த தெருவில் செல்வதை மிக பெருமையாக கருதிக் கொள்வேன். அந்த தெருவில் உள்ளவர்களுக்கெல்லாம் அந்த தெருவைப் பற்றி ஒரு நாவல் வந்துள்ளது என்று தெரியுமா என்று தெரியவில்லை..!!


கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை என்ற நாவலில் போக்குவரத்து உழியர்கள் படும் வேதனையை அத்தனை அழகாக பதிவு செய்திருப்பார். அதை படித்த பின்னர் டிரைவர், கண்டெக்டர் மேல் மரியாதை கொஞ்சம் கூடியது. ஒரு நாள் இரவுப் பேருந்து பயணத்தில் டிக்கெட் எல்லாம் போட்டு விட்டு சாகவாசமாய் என் அருகில் உட்கார்ந்த அந்த கண்டெக்டரிடம் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி கூறினேன்.
அவர் மிகவும் ஆர்வமுடன் கேட்டார்.
"எங்க பிரச்சினை பற்றிலாம் எழுதிருக்காரா சார், அந்த புக் எங்க சார் கிடைக்கும்... ப்ளீஸ் சொல்லுங்க.." என்று தன் பாதி மை தீர்ந்துப் போன பால் பாயிண்ட் பேனாவால் குறித்துக் கொண்டார் அந்த நீலச்சட்டை கண்டெக்டர். அவர் அதன்பின்னர் அந்த நாவலை வாங்கிருப்பாரா என்று தெரியவில்லை.
ஆனால் என்னை வாசகனாக பெருமைப்பட வைத்த இரவு அது.





எத்தனையோ இரவுப் பயணங்களில் ஜன்னலோர சீட்டில் தலை சாய்த்து படித்த பல நாவல்களை சிந்தித்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
ஜோ.டி.குருஸின் ஆழி சூழ் உலகு படித்துவிட்டு உவரி கடற்கரையில் போய் இறங்கினது எதற்காக...?
அந்த அந்தோனியார் கோவிலும், கடற்கரை மணலும், அந்த குளிர்ந்த காற்றும் நாவல் படிக்கும் போதும் உணர்ந்தேன்.

ஜெயமோகனின் காடு நாவல் படிக்கும் போது நீலி என்னை கொஞ்சம் பித்து பிடிக்க வைத்தாள்...

இன்னும் எத்தனையோ அனுபவங்கள் சொல்ல சொல்ல மனம் பொங்குகிறது

பனி இரவு

2011-11-01

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


பனி இரவு என்னை வேண்டா வெறுப்புடன்
கண் மூட வைத்தது.
கனவு ஜன்னல் திறக்கப்பட்டது.
பாதம் பூமியில் பட ஈரம் தலைக்கேறியது.
வயிற்றுப் பகுதியில் ஒரு கணம்.
எங்கும் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிறக்
மலையில் மூச்சு பிடித்து ஏறிக்கொண்டிருக்கிறேன்.
நீரோடை அருகில் ஒரு பெண்..!
கால் மூட்டுக்கு பின்னால் மச்சத்தை காண்பிக்கிறாள்.
தொட்டுப்பார்க்கிறேன். மறைகிறது..
சிரிக்கிறாள்..!
முழுவதும்  திறக்கப்பட்ட முதுகுக்கு பின்னால்
மச்சத்தை தொடுகிறேன். மறைகிறது..
நாணுகிறாள்..
என் கையைப்பிடித்து முன் தோளின் இறக்கத்தை காண்பிக்கிறாள்.
வழுவழுப்பான சிகரத்தின் உச்சியில் இருந்து இறங்குகிறேன்.
அவளும் மறைகிறாள்..
நான் சிரித்துக்கொள்கிறேன்..!
கரும்பாறைகளுக்கிடையே தீடிரென்று
வெள்ளிப்போல் அருவிக் கொட்டுகிறது..
தலையில் ஏறிய ஈரம் அருவியாக விழுகிறது.
நனைய மனம் இல்லை.
நாணி உட்காருகிறேன்.
பெரிய பாறைகளுக்கு மேலே மேகத்தினுள் அவள் சென்றுக் கொண்டிருக்கிறாள்..
அங்கும் இங்கும் திரும்பி பார்க்கிறேன்.
போர்வைக்குள் இருள் மட்டும் தனித்துருக்கிறது..!!


முடிவுரையிலிருந்து முன்னுரை--சிறுகதை

2011-10-21

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் தேனின் சுவையை உண்ர்ந்தான். வெயிலில் அலைந்து திரிந்து வியர்வை நெற்றிப்பொட்டில் முத்தமிட ஆரம்பிக்கும் போதே, மரத்தின் நிழல் ந்ம்மை அரவணைத்துக்கொள்வதுப் போல் ஒவ்வொரு வரியிலும் அந்த ஒட்டுதலை உணர்ந்துக்கொண்டிருந்தான்.
அந்த நாவல் ஒன்னும் காதல் கதையும் அல்ல. இவன் வாழ்ந்த பகுதியை மையமாக வைத்து வரும் கதை அது. எழுத்தாளர் சிவராமகிருஷ்ணனின்
" வேர்களாகும் விழுதுகள் " என்ற நாவலைத்தான் படித்துக்கொண்டிருந்தான்.
அவரது நாவல்கள் எப்பொழுதும் அடித்தட்டு மக்கள் மற்றும் இடைத்தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக பதிவுசெய்யும். விவசாயிகள் மட்டும்தான் வாழ்க்கையோடு போராடுகிறார்கள் என்ற நாவல் எழுதுபவர்களின் அரைத்த மாவை புளிக்க வைத்து, அவர்களை விட ஒரு இனம் இருக்கிறது அதுதான் கூலித்தொழிலாளி இனம் என்று தனது
நாவல்களில் முதன்முதலில் அடையாளம் காட்டினார். அவர் நாவல்களை படிக்கும் போது எதோ அவனது வாழ்க்கை, பக்கத்து வீட்டுக்காரனின் வாழ்க்கையை செதுக்கியதுப் போல் இருக்கும். வேர்களாகும் விழுதுகள் நாவலை பாதி அளவு படித்து முடிந்திருந்தான். படுத்துக்கொண்டும், புரண்டுக்கொண்டும் நாவலின் அத்தியாகங்களை அனுபவித்தான்.
அவன் சந்தோசங்களை கலைக்கிறது மாதிரி செல்போன் ஒலி எழுப்பியது. எடுத்துப்பார்த்தால் நண்பர் சுப்பையா.

அண்ணா.. சொல்லுங்க...!”
அப்புறம் விசயம் தெரியுமா... உங்க எழுத்தாளரு சிவராமகிருஷ்ணன் இறந்துட்டாரு தெரியுமா..?” குரல் இறங்கியிருந்தது.
ஒரு வினாடி திக்கென்று ஆகிவிட்டது.
அய்யயோ.. அப்படியா.. எப்படி தெரியும்..? “
பேஸ்புக்கில் பார்த்தேன்.. குணாலன் ஸ்டேடஸ் போட்டுருக்காரு..! முடிஞ்சா பாரு..” என்று அழைப்பை கட் செய்தார்.

ஹாயா கட்டிலில் படுத்து நாவல் படித்துக்கொண்டிருந்தவன், அதிர்ச்சி அடைந்து எழுந்து உட்கார்ந்தான். உண்மையிலே அவர் இறந்ததை நம்ப முடியவில்லை. கொஞ்ச நாள் முன்னாடிதான் தீராநதியில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். சுமார் பத்து வருடாங்களாக எழுதுவதை நிப்பாட்டி விட்டார். இப்பொழுதெல்லாம் அவரைப்பற்றி அறிவது மிகவும் கஷ்டம்.
பேஸ்புக்கில் சென்று அவர் இறந்ததை உறுதிச் செய்துக்கொண்டான்.
மனம் அவரை நோக்கிச் சென்றது. உறவினர் யாராவது இறந்தாக்கூட இவ்வளவு அனுதாபபட மாட்டான். ஆனால் இது அனுதாபம் இல்லை. அவனுள் ஒடிக்கொண்டிருந்த நரம்பை பிய்த்த மாதிரி இருக்கிறது.
அவர் இறப்பதற்கு முன்னாடி அவர் நாவலைத்தான் படித்துக்கொண்டிருந்தோம் என்று நினைக்கும் போது மனம் கிள்ர்ச்சியடைந்து வடிந்தது. சடாரென்று பரணி மேல் மூடி வைத்திருந்த அட்டைப்பெட்டியை இறக்கினான். அதில்தான் அவனது புத்தக புதையல் இருக்கும். ஒவ்வொன்றா தேடி அவரது ஆறு நாவலையும், ஒரு சிறுகதை தொகுப்பையும் எடுத்து வெளிய வைத்துவிட்டு அட்டைப்பெட்டியை மேலே எடுத்து வைத்தான். அவன் படித்துக்கொண்டிருந்த நாவல் சேர்த்து மொத்தம் ஏழு நாவல், ஒரு முழுத்தொகுப்பு.




ஒவ்வொரு புத்தகத்தையும் பிரித்துப் பார்த்தான். பின் அட்டைப்பக்கத்தில் அவரது சிரித்த முகம் படிந்திருந்தது. “ கரையாத கானகம் " என்ற நாவலின் முன்னுரையைப் படித்தான். அவனுக்கு பால்ய ஞாபகம் எல்லாம் வந்தது. வாசிப்பனுவம் என்பது நம் அனுபவத்தையும் தாண்டி அழகானது, ஆரோக்கியமானது. புத்தகத்தை அனைத்தையும் மூடி வைத்துவிட்டு ஒரு நிமிடம் சாமி போட்டா முன்னாடி பிராத்தினை செய்தான். மனக்கண்னில் அவர் முகம் மட்டும் தெரிந்தது. தனது டைரியை திறந்து அவர் அனுப்பிய லெட்டரை எடுத்து படித்தான். அதில் கூட அவரது எளிமைத்தான் வார்த்தையாக இடம்பெற்றிருந்தது. அவரது புத்தகங்கள், கடிதம் எல்லாத்தையும் எடுத்து ஒரு அவன் பேக்கில் வைத்தான். கடைசியா அவரது பேட்டி வந்த தீரா நதியில் அவரது முகவரி இருந்தது. அதையும் எடுத்துக்கொண்டான். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு செல்ல தீர்மானித்தான். அவரது முகவரி இவன் ஊரிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவசர அவசரமாய் புறப்பட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தான். பஸ் ஒரு மிகப்பெரிய எழுத்தாளார் இறந்து விட்டார் என்று தெரியாமல் அதுப்பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது.

****************************




ஜன்னோலரம் சீட். இவனுக்கு பிடித்ததுதான். ஆனால் இன்றைக்கு அது கொஞ்சம் கொடுமையாக இருந்தது. அடித்த குளிர்ந்த காற்றுக்கு முன்னால் இவனால் ர்டு கொடுக்க முடியவில்லை. கண்ணாடி ஜன்னலை மூடி விட்டு வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். பஸ்ஸில் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். எல்லாரும் முகமும் சோகம் படர்ந்திருந்ததாக உணர்ந்தான். தன் முகத்தையும் அவ்வாறு வைத்துக்கொண்டான். அவரது நாவல் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அதுதான் இவன் படித்த முதல் நாவல். அதுக்கு முன்னாடி வெறும் சினிமா கட்டுரையும், ராஜேஸ் குமார் கதைகளையும் படித்துக்கொண்டிருந்த அவனுக்கு இந்த நாவல் அவனை வேறு ஒரு உலக்த்துக்கு இட்டுச்சென்றது. நூற்றாண்டு மண்டபம் பக்கத்தில் உள்ள் சிறுவர் லைப்ரரியில் ஒரு நாள் ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான். அதில் அவன் வசிக்கும் இடங்களான தெற்குப்பஜார், மார்க்கெட், முருகன்குறிச்சி என்று இருக்க அவனுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. இரண்டு நாளுக்குள்ளே அதை படித்து முடித்தான். அவனுக்கு புது யுகம் பிறந்தது. வாசிப்பு என்பது விரியடைய ஆரம்பித்தது. அதன் பின்னரே அவருடைய மற்ற நாவல்களெல்லாம் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தான். அதில் பாதி நாவல்கள் மறுபதிப்பு இல்லாமல் பழைய பதிப்பிலே காலேஜ் லைப்ரரியில் கிடைத்தது. ஒரு நாள் மாவட்ட மைய நூலகத்தில் அவருடைய பெயரை சொல்லி அவரது நாவல்கள் இருக்கிறதா என்று கேட்டப் போது அநத லைப்ரரியன் சிரித்துக்கொண்டே
அவர்லாம் அப்ப எழுதினாரு, இப்பலாம் எழுதுரதில்லை.. அவருடைய நாவலும் எங்கேயும் கிடைக்காது.. நீங்க என்ன பிஹெச்டி பண்றீங்களா.. “ என்று நக்கலடித்தார். அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அவரைப்பற்றி தேடல்தான் பல நல்ல எழுத்தாளர்களை அவனுக்கு அறிமுகப்படுத்தியது. வண்ணநிலவன், கல்யாண்ஜி, நாஞ்சில் நாடன் போன்றவர்களை. மேலும் மேலும் தேடத் தொடங்கினான். இலக்கிய வாசிப்பில் மூச்சுமூட்ட மூழ்கினான். அக்கரை, இக்கரை என்று பாராமல் நீந்த தொடங்கினான். வாழ்க்கையைப்பற்றி நல்ல பிடிமானம் கிடைத்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகே அவருக்கு கடிதம் எழுதினான். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முப்பது பக்கத்திற்கு எழுதி அனுப்பினான். இரண்டு வாரம் கழித்து அவரிடம் இருந்து கடிதம் வந்தது. இரு பக்க க்டிதம்.
அதில் கடைசி வரி இவனை கொஞ்சம் சங்கடப்படுத்தியது
வாசிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல.. கொஞ்சம் நிஜ உலகத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்..!! “ என்று எழுதியிருந்தார்.

சில நாட்கள் அந்த கடிதம் அவனை பாதித்தாலும், அதன் பின்னர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவருக்கும் இவனுக்கும் வயது வித்தியாசம் நாப்பதுக்கு மேல் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நம்மை அடையாளம் கண்டுகொண்டதே பெருசு மேலும் நமக்கு பிடித்தமானவர்களின் அறிவுரைப் போல் நினைத்துக்கொண்டு இலக்கிய கடலில் முத்து எடுக்க ஆரம்பித்தான்.
பல விசயங்களில் வாழ்க்கையை சமரசம் செய்ய ஆரம்பித்தான். சின்னதாக ஒரு வேலை தேடிக்கொண்டான். இலக்கிய கூட்டம் திருநெல்வேலியில் எங்கு நடந்தாலும் தேடிதேடி பார்க்க ஆரம்பித்தான். ஆனால் தான் என்றைக்கும் எழுதக் கூடாது என்று முடிவில் இருந்தான். எழுத்து ஒரு கலை, அது சில பேருக்குத்தான் வரும் நமக்கு அது வராது என்ற மன நிலையில் காலத்தை ஓட்டினான். எழுத்தாளர் சிவராமகிருஷ்ணன் போட்ட கடிதத்திற்கு பிறகு அவருக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று முடிவில் இருந்தான். அவரது நாவலில் வரும் இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்ப்பான்.
இங்கத்தான் சுந்தரி, வள்ளியப்பனை செவிட்டில் அடிப்பாள்... “ என்று திருச்செந்தூர் கடலில் வைத்து நினைத்துக்கொ்ண்டான். அவரிடம் இருப்பிடம் தெரிந்தும் அவரைப் போய் பார்க்க தோணவில்லை. கடவுளை யாரும் நேரில் சென்று பார்க்க செல்வார்களா. அவர் மேல் மிகுந்த பாசம் கலந்த மரயாதை வைத்திருந்தான். தனது இலக்கிய வாசிப்புக்கு திறவுக்கோலே அவர்தான் என்பான்.

பஸ் ஒரு குலுக்கு குலுக்கிட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் நின்றது. அந்த குலுக்கலில் இவன் நினைவு மீண்டது. அவன் இறங்க வேண்டிய ஊர் வந்துவிட்டது. இறங்கி மதியம் சாப்பிட்டு விட்டு, அவரது வீட்டு முகவரி தேடி நடக்க ஆரம்பித்தான். தமிழின் மிகப்பெரிய எழுத்தாளர்க்கு மௌன அஞ்சலி செய்வதுப் போல ஊர் அமைதியாய் கிடந்தது. ஒவ்வொருத்தரிடமும் விசாரித்து வீட்டை அடைந்தான். இறந்த வீட்டுக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒருவேளை இறந்துவிட்டார் என்பது பொய்யாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. வீடு பெரிய வளவுப் போல இருந்தது. பக்கத்து வீட்டில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் கேட்கலாம் என்று தொண்டையைச் செறுமிக்கொண்டே



ஐயா, பெரியவரே... சிவராம கிருஷ்ணன் சார் வீடு எங்க இருக்கு...” என்றான்.

பெரியவரும் கண்ணை கசக்கியப் படியே

நீ எதுக்கு வந்துருக்கிங்க...அவரைப் பார்க்கிறதுக்கா..”

ஆமாம் சார்..!!” கொஞ்சம் நம்பிக்கையோடு சொன்னான்.

"அவரையெல்லாம் பார்க்க முடியாது.. அவரு இறந்துட்டாரு.. “
நேரில் இந்த வார்த்தையை கேட்டவுடன் கொஞ்சம் கலக்கம் வந்தது.

தெரியும் சார்.. அதான் வந்துருக்கேன்.. “

அவர் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே

நீங்க எழுத்தாளரா...?”

இல்லை...சார்..!!”

அப்படினா..? சொந்தக்காரங்களா..?”

இல்லைங்க ஐயா...நான் வெறும்...!!” அடுத்த வார்த்தை சொல்வதற்கு உள்ளே இருந்து குரல் வர "ஒரு நிமிசம் "என்று உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் வந்தார். கையில் சொம்பு நிறைய தண்ணீர் இருந்தது.
குடிக்க குடித்தார்.

சொல்லுங்க... நீங்க...”

நான் ஒரு வாசகன்... “என்றான்.

அவர் கண் அகல விரிந்தது. ரொம்ப ஆச்சரியத்துடன்

வாசகரா..? ஆச்சர்யமாயிருக்கு.. அவரு எழுதுற நிப்பாட்டி.. ரொம்ப நாளாச்சே.. இப்பவும் வாசகரா...!! நீங்க எதுவும் அவரைப் பற்றி ஆய்வு எதும் பண்றீங்களா.. தம்பி ?”

எல்லாரும் என் இந்த கேள்வியே கேட்காங்கன்னு நொந்துக்கொண்டான்.
இல்லை சார்.. அவர் எழுத்து எனக்கு ரொம்ப புடிக்கும்.. “

" நல்லது தம்பி..அவர் வீடு இதுதான்.ஆனால் அவர் பூர்விக வீடு இங்கிருந்து முப்பது கிலோ மீட்டரில் இருக்கிற குக்கிராமத்தில் இருக்கிறது.. அங்கத்தான் அவரை வச்சிருக்கு... நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் கிளம்புவேன்.. எப்படி நீங்க கிளம்புரிங்களா.. என் கூட வாரிங்களா..” என்றார்.





இல்லை சார்.. நான் பார்த்துக்கிறேன். . உங்களுக்கு ஏன் சிரமம்.. நான் போயிருக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வெளிய வந்தான். பஸ் ரூட்டு அவர் கூறி இருந்ததால் அந்த டவுன் பஸ்ஸை புடித்தான்.. மறுபடியும் பயணம் ஆரம்பித்தது.

*********************








அந்த பஸ்ஸில் போகிறவருக்கு தெரியுமா, ஒரு சாகித்திய அகாடமி வாங்கின ஒருவர் இந்த பஸ் போகிற ஊரில்தான் இருக்கிறார் என்று.
எதேதோ சிந்தனை மனதில் வந்து ஆழ்த்தியது. கண்டெக்டர் கூட எந்த ஊரு என்று மட்டும்தான் கேட்டார், எதுக்கு போறிங்கன்னு கேட்கவே இல்லை என்று நொந்துக்கொண்டான். பக்கத்தில் இருந்தவர்கள் யாருமே இவனை கண்டுகிடவே இல்லை. இவனாகவே பக்கத்தில் இருந்தவரிடம் அந்த ஊர் எப்ப வரும் என்று கேட்டான்.
நான் இறங்கினதுக்கு அடுத்த ஊரு..”என்று சாதரணமாய் சொன்னார்.
யாரைப்பார்க்க போறிங்க என்று கேட்பார் என்று எதிர்பார்த்தான். அவரும் கேட்க்வில்லை. ஒரு மணி நேரத்தில் போயிரலாம் என்று எதிர்ப்பார்த்த பஸ், போய் சேர இரண்டு மணி நேரத்திற்கு மேல ஆச்சு.
பஸ் விட்டு இறங்கினான். ஊர் ரொம்ப பட்டிக்காடாக இருந்தது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெட்டிக்கடையில் விசாரிச்சு அவர் வீடு செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தான். வயல் வரப்ப்புக்கிடையே நடந்தான். இந்த வரப்பில் உட்கார்ந்துலாம் எழுதிருப்பாருல என்று யோசிச்சுப் பார்த்தான்.
வானம் ஒரளவு கருத்துருச்சு. விறு விறுவென்று நடந்து அவரின் தெருவை அடைந்தான். தெரு சின்னதாக இருந்தது. வழி நடுக கிரேந்தி பூ்க்கள் துவப்பட்டிரு்ந்தது. ஒரு வேளை பாடியை எடுத்துருப்பாங்களோ என்று நினைத்துக்கொண்டே தெருவில் அந்த வழியே வந்த ஒருவரிடம் கேட்டான்.
எடுத்துட்டுப் போயாச்சு..” என்று பதில் வந்தது. மயானம் எங்கே என்று விசாரித்து போக ஆரம்பித்தான். கண்ணுகெட்டின தூரத்தில்தான் வண்டி போயிட்டு இருந்தது. தகன மேடையில் எடுத்து வைக்கவும் பக்கத்தில் போய்விட்டான். தூர நின்னு பார்த்தான் அவர் முகத்தை....பக்கத்தில் பேர் தெரிந்த எழுததாளர்கள் நின்றனர். வாயில் துண்டை வைத்து பொத்திக்கொண்டு அழுதுனர். அவனும் அவ்வாறு தன் துக்கததை வெளிப்படுத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. அவரது உடலுக்கு தீபம் ஏற்றப்பட்டு தகதகன்னு எரிய ஆரம்பித்தது. அதனை பார்க்க புடிக்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.


வழியில் கிடந்த கிரேந்தி பூக்களை அள்ளிக்கொண்டான். உடனடியாக ஒரு சிறுகதை எழுதவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. அநத வயற்பரப்பிலே உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு கிரேந்தி பூக்களையும் அவரது ஒவவொரு நாவலிலும் சொருகிக்கொண்டான். அது காய்ந்து சருகாவதற்குள் எழுதி முடிக்கவேண்டும் எனறு வேகமாக எழுத ஆரம்பித்தான். அநத சிறுகதை தான் " முடிவுரையிலிருந்து முன்னுரை..!”

************************

பிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்

2011-10-15

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


தமிழினி பதிப்பகம்  வெளியிட்ட   பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து

"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புது சாராவை. ஒரு கையணைப்புக்குள் ஒடுங்கிவிடக்கூடிய சாராவை. பகல் வெளிச்சம் எத்தனை குரூரமானதென்று தன்னுடைய இன்னொரு முகத்தை அது இளித்துக் காட்டியது. தன் கண்களை அவன் நம்பவில்லை. அவள் அவனுகிட்ட பார்வையில் தூக்கமற்ற கண்களில் நேற்றைய பின்னிரவு பந்து போல் சுருண்டிருந்தது. சிரம் தாழ்த்தி ஆமேன்று நா நீட்டி நற்கருணையைப் பெற்றுக்கொண்டு தன்னிடத்துக்குத் திரும்பினான். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் அவனுக்கு அப்பமாக வழங்கப்பட்டது."


 "ஒரு காதலனின் நிலைமை வேறு. அவன் எப்போதும் காதலுக்கு உண்மையாக இருந்தாக வேண்டும். காதலியைக் கண்டடைவது, தொட்டு சிணுங்கி அளவளாவது என கற்பனையின் எல்லா ஊற்றுகளையும் திறந்துக் கொண்டே போகவேண்டும். நிராசைகளுக்கும் நேர்மையாக ஒத்துழைக்க வேண்டும். எடுத்த காரியங்களிலெல்லாம் தொற்று வியாதிபோலத் தோல்வி தொற்றினாலும் முடியாது, கிடையாது போன்ற வார்த்தைகளை கிடப்பில் போட்டுவ...ிட்டு முன்னேற வேண்டும். மனதின் கடினப் பக்கங்களை உடைந்து போகாமல் நெகிழ்வூட்டிப் புரட்ட வேண்டும். புதுப்புது கனவுகளைத் துரத்திப் பிடித்து இரவோ பகலோ அன்புக்குள் அதை இயங்கச் செய்யவேண்டும். அவன்தான் காதலன்.!! அவனால் மட்டுமே காதலில் நீடிக்க முடியும். அருமையான ஒரு நாளில் காதலை உலகறிய நிரூபிக்கவும் முடியும். உறங்கிவிடக் கூடாது..!!"

மேலும்

"அவன் சாராவின் கண்களை தன் கட்டுப்பாட்டையும் மீறி ஏக்கத்தோடு நோக்கினான். அவை எரேமியா பதினைந்தாம் அதிகாரம் ஆறாம் வசனத்தை ஆத்திரத்தோடு உரைத்தது.
' நீ என்னை விட்டுப் பின்வாங்கிப் போனாய்
ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி,
உன்னை அழிப்பேன்.
நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப் போனேன்..!'

அவள் அலட்சியப்பார்வை அவன் கைகளை முதுகுக்குப் பின்னே கட்டி குப்புறத் தள்ளி முகத்தைத் தரையில் மூர்க்கமா உரசியது போன்ற எரிச்சலும் வேதனையுமடைந்தான்."

கன்னி நாவலை வாசித்து முடித்துவிட்டேன். பெருந்துயர் என்னை சூழ்ந்துக்கொண்டது. யாருமற்ற கடலில் அலைகளுக்கிடையே போராடுபவன் போல. நான் அலைக்கழிக்கப் படுகிறேன். அதிலிருந்து விடுபட சில நாட்களாகும்..

உலகின் உண்மையான காதலை ருசிக்க வேண்டும்.. அது மனதோடு கிளர்ச்சியை ஏற்படுத்தி, கண்ணில் கண்ணீராய் வழிந்தோட வேண்டும்..
பரிசுத்தமான அமலாவும், சாராவும் கண் இமைகளில் வந்து தீண்டுகின்றனர். தூக்கத்தை தொலைக்க வைக்கின்றனர்.

தீக்குள்
விரலை வைத்த
காதல் இன்பம்
இப்புதினம்.!



தள்ளுபடி--சிறுகதை

2011-10-01

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




ரோடு வழியா வராமல் ஏரி வழியா வந்தான் மூக்கன். ஏரி வழியா வந்தால் மரமா நிக்கும் நிழலா இருக்கும். அது தவிர வயக்காட்டுக்கும், வேற எதுக்காவது போயிட்டு வரும் பெண்களின் சாடை மாடை பேச்சு. அவங்க கூட பேசிட்டு வருவது நேரம் போவது தெரியாது. ராஜேந்திரனுடைய கரும்பு காட்டுல, டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு இருக்கும் போதுதான் இவனுக்கு வீட்டுக்கு போவதற்கு அவசரம். பொண்டாட்டி வழி சொந்தம் ஒன்னு வந்து நிக்குதாம். அத போய் பார்க்கனும். கரும்பு ஆலைக்கு நாலு மணிக்குள்ள போயிர சொல்லி முதலாளி அண்ணாதுரையிடம் இருந்து உத்தரவு. அதையும் தட்ட முடியாது. விறுவிறுவென்று நடந்தான்.காலில் போட்ட செருப்பு அருந்து விழுவது மாதிரி இருந்தது. மூக்கன், அண்ணாதுரை டிராக்டர்ல விவரம் தெரிஞ்ச நாளிலே இருந்தே வண்டிக்கு போயிட்டு இருக்கான். மூக்கனுக்கு ஒரே பையன். இப்போ ப்ளஸ் டூ முடிச்சு வீட்டில முழு மாடு மாதிரி நிக்கான். மார்க் இன்னும் வரல. வந்தா தெரியும் அவன் படிக்குதா வேணாமான்னு. ஐயாட்டத்தான் படிக்க வழி கேட்கனும். பையனுக்கு படிக்க ஆசைத்தான். உதவி கிடைச்சா படிக்க வைக்கனும். இல்லன்னா ஊர்ல உள்ள வயசு பசங்க மாதிரி டெஸ்ட் அடிச்சுட்டு சிங்கப்பூர்க்கு அனுப்பிர வேண்டியதுதான். இப்ப ஊர்ல பூரா பசங்களும் வெளி நாட்டுலத்தான் கிடக்கானுவ. போயிட்டு அஞ்சு வருசம் கழிச்சு வாரானுங்க. வந்து வீட்டக் கட்டுனாதுங்க. ஒரு கல்யாணத்தை பண்ணுதானுங்க. அப்புறம் மறுபடியும் போயிருதானுங்க. என்ன வேலையோ.. ஒரு தாலியும் தெரியலை. இங்க கட்டுனதுவளை அதுக்குள்ள கோழிக்குஞ்சை பருந்து சுத்துன மாதிரி ஒவ்வொருத்தனும் சுத்த ஆரம்பிச்சுருவானுவ. நம்ம பையனுக்குஅப்படிலாம் நடக்காது. நம்ம பையனுக்கு ஐயா உதவி பண்ணாமலையா போயிருவாரு. அதுலாம் பண்ணுவாரு. அவசர அவசரமா வீட்டுக்கு வந்தான். வந்த பொம்பளை எதோ இழவு செய்தி கொண்டு வந்திருந்தாள். பண்ருட்டி பக்கம் மூக்கன் பொண்டாட்டி சொந்தம் ஒன்னு போயிடுச்சாம். இவன் போயிதான் ஆகனும். ஐயாட்ட போயி கேட்க கிளம்பினான். இழவு சொல்ல வந்த பிள்ளையை சோறு சாப்பிட சொல்லி அனுப்பினான்.

அண்ணாதுரை வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். வீடு இப்ப கட்டினதுதான்.ரெண்டு டிராக்டர். பத்து ஏக்கர் நிலத்தில் புல்லா கரும்பு. இரண்டு பசங்களையும் நல்ல படிக்க வச்சிருந்தார். மூத்தவன் வாத்தியாரா உள்ளுரிலே இருக்கான். சின்னவனுக்கு இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சது. வெளி நாட்டுல இருக்கான். பிள்ளைகளெல்லாம் கரை சேர்த்த பெருமையை ஊர்ல எல்லாருட்டையும் அடிக்கடி சொல்லுவார். எதோ அவங்களும் பெரிய மனுசன் சொல்றானேன்னு கேட்டுட்டு போவாங்க. வீட்டு வாசலில் உட்கார்ந்தாலே தெருவிலே போறவனை கூப்பிட்டு வச்சு கதை பேச ஆரம்பிச்சுவாரு. தெருவிலே போன காமராசை கூப்பிட்டார்.
அவரும் அண்ணாதுரையும் ஒரே வயசுக்காரர்கள்.
"அப்புறம் அண்ணாதுரை.. என்ன சமாசாரம்.." பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் காமாரசு.
வீட்டு முன்னால் வேப்பமரத்தில் கட்டி போட்டிருந்த நாய் குலைத்தது. அது தவிர மரத்திலிருந்து காத்து வேற வந்தது.
" ஒன்னுமில்லைப்பா.. கல்யாணம் முடிச்சாச்சு... வீட்டை கட்டியாச்சு.. பசங்களையும் நல்ல நிலமைக்கு ஆக்கியாச்சு...வேற என்ன வேணும்.." மறுபடியும் பழைய பெருமையை அளந்தார்
"உனகென்ன அண்ணாதுரை.. குடுத்த வச்சவன் நீ...! அப்புறம் வேற என்ன விசயம்...?”

நீதான் சொலலனும்.. கட்சில பெரிய ஆளுன்னு சொல்லிட்டு சுத்திட்டு அலையுதே.. உனக்கு தெரியாத விசயமா...?”
நீயும் என்னை கிண்டல் அடிக்க பார்த்தியா...! எலெக்சன்லாம் முடிஞ்சுட்டு, இந்த வருசம் பேங்குல தள்ளுபடி வருதுன்னு சொல்றாங்க உண்மையாவா..?”
'எதுக்கு... அதான் போன தடைவையே சும்மா கோடிகளை அள்ளி அள்ளி கொடுத்தாங்களே.. அது போதாதா...?”
அது இல்லைப்பா... பேங்குலருந்து சும்மா நோட்டீஸ் மேல நோட்டீஸ் பறக்காம்.. நகை கடனை திருப்பு, பயிர்க்கடனை கட்டுன்னு.. அதாம் ஒரு வேளை தள்ளுபடி வருதுன்னால இந்த மாதிரி கணக்க குறைக்கலாம்னு பேங்குகாரங்க நினைக்காங்கன்னு பள்ளிகூடத்தெருவுல பேசிக்கிட்டாங்க..”
பேச்சு சுவாராசயமாக போயிக்கொண்டிருக்கும்போது மூக்கன் வந்து நின்னான். மண்டையை சொறிந்துக்கொண்டே...
ஐயா, நம்ம சொந்ததுல ஒன்னு தவறிட்டாம்... பண்ருட்டி பக்கம்... அதான் போயிட்டு வரனும்... கொஞ்சம் போயிட்டு வந்துட்டா நல்லா இருக்கும்யா...!” என்று கெஞ்சினான்.
என்னாப்பா சொல்லுர.. கரும்பு லோடு வேற நிக்குமே.. என்ன பண்ண...?”
அதுக்கில்லையா.. இங்க பக்கமுன்னா என் பொண்டாட்டியை அனுப்பிருவேன்... அம்மாந்தூரம் போகனும்.. அதான்யா...”என்று இழுத்தான்.
சரி சரி.. உன் பையன் என்ன பண்ணுறான்...இப்ப சும்மாத்தான இருப்பான்... அவனை வுட்டு அனுப்பிரலாமா..?”
ஐயா.. ஐயா.. அதுலாம் வேணாம்யா.. லோடு வண்டிலாம் தாங்காதுயா... அவன் சின்னப்பையன்.. வேற எதாவது ஆளை வுடுங்கயா...?”
எவன் இருக்கான்... இங்க.. எல்லா பயலுவலும் வெளிநாட்டுக்கு ஒடிட்டானுவ.. எந்த இளவட்டப் பய இங்க இருக்கான்...! அவனை வரச்சொல்லு.. இல்லன்னா நீ ஒன்னும் போக வேண்டாம்..” என்று சடாரென்று பதில் வந்தது.
மூக்கனுக்கு கண்ணுலெல்லாம் நீர் கோத்துவிட்டது.
ஐயா.. சாமி.. நீங்க நல்லா இருப்பிங்க... இந்த ஒரு தடவை வுடுங்கயா... “ என்று காலில் விழாத குறையா கெஞ்சினான்.
டேய்.. நான் சொன்னதையே சொல்லிட்டு இருக்க முடியுமா... லோடு எடுத்துட்டு ஆலைக்கு போக முடிஞ்சா போ... இல்லன்னா.. உன் பையனை அனுபபு... அப்படி இல்லன்னா அப்படியே போய் தொலைஞ்சிரு...”









மூக்கனுக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியில்லை. பேசமா காட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான். வேற வழியேயில்லை..நாளைக்கு பையனுக்கு படிப்புக்கு அவருட்டத்தான் போய் நிக்கனும். எல்லாம் நம்ம விதி. நொந்துக்கொண்டே நடந்தான். பலமா அடித்த காத்துல வேட்டி கலைந்தது. தோளில போட்டிருந்த துண்டு பறந்து பக்கத்தில் கடந்த சாணத்தில் உழுந்தது. எடுக்க மனசில்லை. இருந்தாலும் நம்ம நிலமை இந்த மாதிரிதான். என்று துண்டை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். போற வழியில் எத்தனையோ மோட்டரு அதுல கழுவுனா போச்சு. விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தான்.




காமராசு போட்டுவிட்டு போன குண்டு இப்பத்தான் வெடிச்சு, அண்ணாதுரை மனசுல புகை கிளம்ப ஆரம்பிச்சிருந்தது. குழப்பமான மன நிலையில் இருந்தாரு. ஒரு வேளை தள்ளுபடி வருமோ. வந்தா நல்லதுதான் நம்ம டிராக்டரும் தள்ளுபடியிலே போகும். போனதடவை வந்தப் போது அந்த 'மயிரு மண்ணாங்கட்டி' மாணிக்கம் மட்டும் மேனஜரை கைக்குள்ள போட்டுகிட்டு அவன் டிராகடர் லோனு, மூணு லட்சத்துக்கு மேல பயிர்க்கடனு எல்லாத்தையும் தள்ளுபடி பண்ண வச்சான். அவனும் பெரு விவசாயித்தான். அவனுக்கு மட்டும் தள்ளுபடி. நம்மளுக்கு ஒன்னுமில்லை. பிச்சைக்காரத்தனமா அம்பதாயிரத்துக்குக் நகை தள்ளுபடியாச்சு. அதனாலத்தான் இந்த டிராக்டர் லோனை நான் கட்டவேயில்லை. ஒரு தவணையோடு முடிச்சுகிட்டேன். பார்த்துரும் பேங்கு என்ன பண்ணுதுன்னு.. ஒரு மயிரும் புடுங்க முடியாது. என்று யாரிடமோ சொல்லுவதுப் போல தனியா புலம்பிக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் களத்துக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப் போது அண்ணாதுரைக்காக போஸ்ட் மேன் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார். பக்கத்தில் வந்ததும் போஸ்ட் மேன் கிட்ட யாருட்ட வந்துருக்கு என்று மெதுவா கேட்டார். அவனும் எடக்குக்கு "உங்க மாமியார் வீட்டுல இருந்தா வரும்...!! பேங்குல இருந்து வந்துருக்குயா.. சீக்கிரம் கையெழுத்து போடு.. நான் வேற ஜோலியை பார்ர்க்க வேணாம்.. உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுரது.. கேட்டா.. மதிக்கமாட்டுக்கான்பே.. “என்று லெட்டரை கொடுத்துட்டு சைக்கிளில் பறந்துட்டான்.
நம்ம மரியாதை ஒரு நிமிசம் இறங்குனதுல ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டாரு அண்ணாதுரை. சரி உடு, ஒரு கவுருமெண்ட் சர்வண்ட் தானே.. என்றாவாறு லெட்டரை கிழித்துப் படிக்க ஆரம்பித்தார்.











Agri Term Loan No : 10585
Activity : Tractor & Trailor

ஐயா,

பொருள் : தாங்கள் எங்கள் வாங்கிய கடன் தொடர்பாக ஜப்தி நடவடிக்கை.

தங்களது மேற்குறிப்பிட்ட கடன் கணக்கில் தங்களது கடன் நிலுவை தவணைத் தாண்டி உள்ளது. கடிதம் கிடைத்த 7 நாளுக்குள் வந்து கணக்கை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில்தங்கள் டிராகடர் ஜப்தி செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கனம்
கிளை மேலாளர்



படித்து முடித்து லெட்டரை கசக்கி தூக்கி எறிந்தார். வாய்க்கு வந்தப்படி மேனஜரையும், பேங்கையும் திட்ட ஆரம்பித்தார். “துக்கிருவாங்கலா.. அதையுந்தான் பார்த்துருவோம்.. என மயிரக் கூட புடுங்க முடியாது.” என்று கத்திக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து வந்த மூக்கன்
ஐயா, எம் பையன் பண்ணிருண்டாவதுல பாஸ் ஆயிட்டான்யா.. மேல படிக்க வைக்கனும்.. நீங்கத்தான்.உதவி பண்ணனும்...! “ என்று நேரம் காலம் தெரியாமல் வந்து கேட்டான்.
அதுவரைக்கும் யாரு மேல கோபத்தை காட்டலாம் என்று இருந்த அண்ணாதுரை, மூக்கனைத் திட்ட ஆரம்பித்தான்.
டேய்.. நானே இங்க என்ன பண்ணுதுன்னு தெரியாமல் நிக்குறேன்... நீ என்னனானா.. உதவி பண்ணு.. மயிரு பண்ணுன்னு.... வந்து நிக்குறே..
ஒம்பயன் படிச்சான் என்ன..? மண்ணா போனா என்ன..? ஒடுடா..?” என்று கத்த...

என்ன சொல்வதென்று தெரியாமல் நடக்க ஆரம்பித்தான் மூக்கன்
அண்ணாதுரை கோபம் இன்னும் இறங்கவில்லை. பேங்க்குக்கு போலாமுன்னு முடிவு பண்ணி கசங்கி எறிஞ்ச லெட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.






போற வழியிலே அவரு்க்கும் பேங்க்குக்கும் உண்டான உறவையும் நினைச்சுப் பாரத்தார். பேங்க் முதலில் இந்த ஊருக்கு வநத புதுசுல நாயா, பேயா அலைந்து பேங்குக்கு உதவி பண்ணினார். டெபாசிட் புடிக்கிறது. காடுகளை காட்ட கூட்டிக்கு போறது. அப்பலாம் சைக்கிளில் மேனஜரை வச்சு அழுத்திட்டுப் போவார். பேங்கு இவருக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தது. அவரு பயிர் பண்ண பயிர் கடன். வண்டி வாங்க டிராக்டர் லோனு.. இப்ப அது எல்லாம் மலையெறிப் போச்சு.

பேங்கு முன்னால் வந்து நின்னார். அவரு பேங்க்குக்கு வந்து இரண்டு வருசத்துக்கு மேல ஆகுது. எல்லாம் அந்த தள்ளுபடி பிரச்சினையில் மேனஜரை முறைச்சுக்கிட்டு வீம்புக்கு போயிட்டார். இப்பத்தான் பேங்கு பக்கம் வாராரு.

பேங்க முன்னாடி நல்ல கூட்டம். சுய உதவிப் பெண்கள் கொஞ்சம் பேர் வெளியே உட்கார்ந்து எதோ எழுதிக்கொண்டிருந்தனர். பணம் எடுக்க உள்ளே போன அம்மா எப்ப வருமென்னு பார்த்தப்படி தாத்தாவுடன் உட்கார்ந்திருந்தது ஒரு குழந்தை.
பேங்கிலிருந்து வெளியே வந்த பச்சமுத்து, அண்ணதுரையைப்பார்த்து
என்ன அண்ணாதுரை... இந்த பக்கம் எப்படி..?”
சும்மாத்தான்.. மேனஜரைப் பார்க்க வந்தேன்..நீ...?”
நானா.. கரும்பு பணம் வந்துட்டான்னு பார்க்க வந்தேன்.. ஆலையில கேட்டா அனுப்பிட்டேங்கிறான்.. இங்க வந்து கேட்டா இன்னும் வரலைன்னு சொல்றாங்க.. லோடு அனுப்பி மூனு மாசத்துக்கு மேல ஆச்சு.. பணம் இன்னும் கைக்கு வரல..நடுவுல நாமந்தான் அல்லல் படுறோம்.. சரி நான் வரேன்.. போயி மாடுக்கு தண்ணி காட்டனும்..” என்று புலம்பியவாறு நடையைக் கட்ட ஆரம்பித்தான் பச்சமுத்து.

உள்ளே போயி ஒரு பார்வை பார்த்தார். பேங்க் ரொம்ப மாறியிருந்தது. எல்லாம் புதுசுகளா இருந்தார்கள். நகை ஆசாரியும், பியூனைத்தவிர எல்லாம் புதுசுத்தான். மேனஜர் கேபினைப் பார்த்தார். அவர் அறைக்கு முன்னாடி பசங்களா நின்னுட்டு இருந்தனர். கூட அப்பாவோ, அம்மாவோ நின்றனர்.
நகை ஆசாரி இவரைப் பார்த்து வணக்கம் வைத்தார். பியூன் வந்து கொஞ்சம் நேரம் உட்காருங்க கூட்டம் கலைந்ததும் நான் உங்களை கூப்பிடுறேன் என்று சொல்லி அருகில் உள்ள சேரில் உட்கார வைத்தார்.

கொஞ்சம் நேரம் கழித்து கூப்பிடவும் மேனஜர் அறைக்குள் சென்றார்.
உட்காருங்கய்யா.. உங்க பேரு..” என்று சிரித்தப்படியே கேட்டார் மேனஜர்.
அண்ணாதுரைங்க..”
.. அந்த அண்ணாதுரையா... கேள்விப்படிருக்கேன்.. பேங்க்குக்கு முன்னாடி உதவிலாம் பண்ணுவிங்கலாமே.. என்னயா வேணும்...?”
அண்ணாதுரை லெட்டரை எடுத்து நீட்டினார்.



ஆமாயா... தவணை கட்டாத டிராக்டரை ஜப்தி பண்ண சொல்லி ஆர்டர் வந்தாச்சு.. பைனான்ஸ்ல போட்டு வண்டி வாங்குனா, ஒழுங்கா கட்டுறாங்க.. பேங்குல வாங்குனா மட்டும் கட்ட மாட்டுக்காங்க...நீங்க நல்ல கஸ்டமருன்னு நினைச்சேன்.. நீங்களுமா..?”

அதுக்கில்லையா.. கொஞ்சம் தவணை தப்பி போச்சு வாஸ்தவந்தான்...முன்னாடி உள்ள ரிக்கார்ட எடுத்துப் பாருங்க.. வாங்கி எப்படி கட்டியிருக்கன்னு...எல்லாம் இந்த தள்ளுபடியினால வந்தது.. பயந்துட்டு கட்டுறவனுக்கெல்லாம் ஒன்னுமில்லை.. திமிரா கட்டாம போட்டவனுக்கெல்லாம் லட்சம் லட்சமா தள்ளுபடி.. அதான் அப்படியே போட்டுட்டேன்...”

அப்படி சொல்லுறதைப்பார்த்தா நாங்க கொடுக்கிற லோன் பூராவும் தள்ளுபடி பண்னினா.. நாங்க எதுக்கு விவசாயகடன் கொடுக்கனும்.. அரசியல்வாதிகள் அவங்க லாபத்துக்காக எதோதோ சொல்றாங்க.. கடைசியா யார் உறவு கெட்டுப்போகுது.. நம்ம உறவு தான்.. இங்க விவசாயகடனை வாங்கிட்டு பாதி பேரு விவசாயத்துக்கு பயன்படுத்துல...வீடு கட்டுறதுக்கும்.. நகை, நட்டு வாங்குறதுக்கும்.. வட்டிக்கு உடுறதுக்குந்தான் வாங்குறாங்க..
இனிமேல் தள்ளுபடி பண்ணினா எந்த விவசாயி உண்மையிலே கஷ்டப்படுறானோ. அவனுக்குதான் தள்ளுபடி பண்ணனும்... பொத்தம் பொதுவா கொடுக்கிறதுனால பயன் அடையிரது உங்கள மாதரி பணக்கார விவசாயித்தான்.. எழை விவசாயி இல்லை..” என்று மேனஜேர் பேசிக்கொண்டிருக்கும் போது பியூன் வந்து
சார், எஜுகேசன் லோனுக்காக பசங்க நிறைய பேர் நிக்காங்க.. அனுப்பிட்டு நாளைக்கு வரச்சொல்லுட்டா.. “ என்று கேட்க

நோ..நோ.. எல்லாரையும் வெயிட் பண்ண சொல்லு.. இவங்களை மாதிரி கட்டாதவனுக்கெல்லாம் லோனு கொடுக்கிறதுக்கு பதிலா, படிக்கிறதுக்கு கொடுத்தா பசங்க வாழ்க்கையாவது முன்னேறும்...” என்று சொல்லி அனுப்பினார்.
அண்ணாதுரைக்கு முஞ்சில அடித்தால் போல் ஆகிவிட்டது.
உடனே ஆவேசம் வந்தவனாய்

என்ன சார்.. இப்படி விவசாயத்துக்கு கொடுக்காம, படிப்புக்கு மட்டும் கொடுத்திங்கன்னா.. விவசாயி நாங்க என்ன பண்ணரது...விவசாயத்தை எதிர்க்கிற மாதிரிலா இருக்கு...”

நான் விவசாயத்தையோ. விவசாயியோ எதிர்க்கலை... உண்மையிலே பண்ணுனா.. நான் கண்டிப்பா தாரேன்.. நீங்க நேர்மையாயிருந்தா உங்களுக்குத்தான் நல்லது.. படிப்பு லோனுமே நான் எல்லாத்துக்குமே கொடுக்கலையே.. உண்மையிலே யார் கஷ்டப்படுறாங்களோ.. அவங்களுக்குதான் கொடுக்கிறேன்... விவசாயி பையன் இஞ்சினியருங்கிறது உங்களுக்குதான் பெருமை... தள்ளுபடிங்கிற விசயத்தை மறந்துட்டு லோன் வாங்குங்க.. கட்டுங்க.. திருப்பி வாங்குங்க.. நான் எவ்வளவு வேணா தாரேன்...
கண்டிப்பா நீங்க அந்த டிராக்டர் லோனை அடுத்த வாரத்துகுள்ளே கட்டப் பாருங்க...”


என்று சிரித்தப்படியே சொல்லி விட்டு எழுந்து சாப்பிட கிளம்பினார் மேனஜர்.
அப்ப நான் வரேன்யா...” என்று ஒரு கும்பிடு போட்டுட்டு வெளிய வந்தார் அண்ணாதுரை..
வெளியே வெயிலில் கண்ணு கூசியது. மேனஜர் சொன்னது எதோ ஒரளவு உறுத்தியது.

அடுத்த நாளே மனைவி நகை, மருமகள் நகை பேங்குல கொண்டு அடகு வச்சு டிராக்டர் லோனை அடைத்தார். மனசு ரொம்ப நிம்மதியாயிருந்தது.

மூக்கன் மறுபடியும் அண்ணாதுரையை பார்ர்க வந்திருந்தான். இப்பவாது கோபம் தணிஞ்சுருக்கான்னு பார்த்துட்டு பையன் படிப்பு விசயமா கேட்கலாமுன்னு வந்திருந்தான்.

ஐயா... எம் பையன் விசயமா.. “ என்று இழுத்தான்.
என்னல இழுத்துட்டு நிக்குற.. ஓடு உம்பையனை கூட்டிட்டு வா... “ என்று சத்தம் போட..
ஒரே ஓட்டம் ஓடி பையனை இழுத்துட்டு வந்துட்டான்.
வாடா.. “ என்று தன் வண்டியின் பின்னால் எற்றிக்கொண்டு எஜுகேசன லோனு விசயமா மேனஜரைப் பார்க்க பேங்குக்கு கிளம்பினார் அண்ணாதுரை.
நம்ம பையன் வாழ்க்கை இனிமேல் உருப்பட்டுரும்..” என்று கண்கலங்க பார்த்துக்கொண்டிருநதான் மூக்கன். இப்போது காத்து பலமா அடித்தது. ஆனால் தூண்டு கீழ விழவில்லை. பலமா புடித்துகொண்டான்.



--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி