பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி--சிறுகதை

2012-12-07

| | |




நீலக்கடலின் பிரமாண்டத்தின் முன் வெண் பிறை சற்று மந்தமாக தெரிந்தது.
அடிக்கும் குளிர்க்காற்று உடலுக்குள் ஊசி குத்திக்கொண்டிருந்தது. நுரை
சேரும் குருமணல்கள் ஈர பிழம்பாய் இருந்தது. இறுக்கி பிடித்து
மூடிக்கொண்டிருந்த இமை ரெண்டும் அதி உன்னதமான வாடைக்காற்றால் திறந்தது.
கண்கள் ரெண்டையும் கசக்கி விட்டுக்கொண்டேன். தூரத்தின் தெரிந்த நிலவு,
தற்பொழுது தலைக்கு மேல் கோபுரத்தின் ஊடே தெரிந்தது. தூரத்திலிருந்து
சினம் கொண்டு வந்த அலை, சிறுமணல் குன்றின் மீது ஏறாமல் அமைதியாக
திரும்பியது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். எழுந்து நடந்தேன்.
கரையின் நுனியில் கால் நனைத்தேன். கோவிலின் முன்னால் உள்ள மண்டபத்தில்
பலர் படுத்திருந்தனர். நேரம் மூன்றாம் சாமத்தை கடந்துவிட்டது. வளர்
பிறையின் உதவியால் மண்டபத்தின் அருகில் உள்ள வேப்பமரத்தனடியில் வந்து
அமர்ந்தேன். வேம்பு தன் கிளைகளை வேகமாக ஆட்டி என்னை வரவேற்றது.  தூக்கம்
வரவில்லை. சிறிது நேரத்தில் தூரத்தில் சிலர் கரையில் கிடந்த கட்டுமரங்களை
கடலுக்குள் தள்ளிக்கொண்டிருந்தனர். காலைப்பாடு செல்கிறவர்கள்.  கழுத்தில்
கல்வாரியில் தொங்கிய யேசு இடம்பிடிந்திருந்தார். மறுபடியும் தூக்கம் தழுவ
மனம் பிதற்ற ஆரம்பித்தது. கடல் கெழு செல்வி, பாண்டியன், கொற்கை, மன்னார்
முத்துக்கள், தெய்வானை, சள்ளை, சம்பை, போர்ச்சுகீஸ், கிறிஸ்துவம், மாதா,
மேசைக்காரர்கள், மெனக்கடர்கள், கம்மாகாரர்கள். பிதற்றலின் முடிவில் வாய்
கசந்தது. உதட்டோரத்தில் உப்பு உலர்ந்தது.  காலம் தெரியாத அந் நாளில் என்
தொல் வேரின் மூத்தவனாகிய செழியன் என்பவன் இக்கடலை விட்டுச்சென்றான். அவன்
 எச்சத்தைத் தேடியே நான் இக்கடற்கரைக்கு வந்திருந்தேன். அவனின்
பரிபாடல்கள் என் நினைவில் பத்திரமாய் இருந்தது. அவனின் கதைகளை நாங்கள்
தலைமுறை தலைமுறையாக தெரிந்துக்கொண்டோம். கடலின் ஓயாத இரைச்சலில் அவனின்
கதை என் கண் முன்னால் படிய ஆரம்பித்தது.
***

" பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி பரதவர்
  இருங்கழிச் செறுவின் உழா அது செய்த
  வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி..."

சுடுமணலைத்தோண்ட தோண்ட தரை தட்டுப்படவேயில்லை. ஒரு வேம்பை நட இவ்வளவு
பிரச்சினையாகும் என்று எதிர்பார்க்கவில்லை. குடிசையின் முன்னால் நன்றாக
இருக்கும்னு நினைச்சு புடுங்கிட்டு வந்தது. அம்மை கத்த ஆரம்பித்தாள்.
"ஏம்ல, செழியா... மூசு மூசுன்னு வார.. அங்கன்ன முடியலன்னா.. பொறத்தால  நட
வேண்டியதுதானே..  அது என்ன கண்ணு...?"
"இரும்மா.. கத்தாத.. வேப்பங்கண்ணு... கொடி மரத்துக்க புடுங்கிட்டு
வந்தேன்..ஒரு நல்ல எடம் பார்த்து நட வேண்டியதுதான்.. நடர வரைக்கும்
சும்மா கத்திகிட்டு இருக்காத...!"
" பெரிய பாண்டிய மகராசா வம்சம்.. வேம்பு கேட்குதோ.. " அம்மை எடத்த விட்டு
நகர்ந்தாள். கையில் சம்பைக் கூடை.
ஒரு வழியா தரை தட்டுப்பட்டு வேம்பை நட்டு, புடிச்ச மண்ணைக்கொண்டு மூடி,
தண்ணீ தெளிச்சு, கையில் பட்ட மண்ணை சாரத்தில் துடைத்துக்கொண்டு
மாதாக்கோவில் பக்கம் ஒடினேன்.  வேம்புவின் சிறிய இலை என்னை பார்த்து தலை
ஆட்டியது.

***

கரையில் உள்ள மரம் கடலுக்குள் இறங்க மறுத்தது. ஒரு பெரிய கூட்டமே
தள்ளிக்கொண்டிருந்தது.  மரத்துக்கு சொந்தக்காரன் பலமா தள்ளினான். கையில்
புஜம் உயர்ந்து இறங்கியது. என் கையை மடக்கி புஜத்தை தொட்டுப்பார்த்தேன்.
சிறியதா இருக்கிற வரைக்கும் கடலுக்கு போக முடியாது. சீக்கிரம் கடலுக்கு
போகனும் வெறி வந்தது. ஒரு வேகத்தில் கூட்டத்துடன் நானும் சேர்ந்து
கட்டுமரத்தை தள்ளினேன். என் கைப்பட்டவுடன் மரம் கடலுக்குள் இறங்கியது.
ததும்பி வந்த சந்தோசம் அலையை விட ஆர்ப்பரித்தது. ஓவென்று கத்திக்கொன்று
கரையில் ஒடினேன். பெரிய கம்புத்தட்டி விழுந்தேன். முன் பல் உடைந்து
குருதி வழிந்தது. தட்டுன கம்பின் மீது பெருங்கோபம் வந்தது. பெருவிரல்
திரும்பியதால் நொண்டி நொண்டி முயற்சித்தேன். முடியவில்லை. பெருங்கம்பு
பக்கத்தில் சிறு கம்பு ஒன்று கிடந்தது. சிறுகம்பின் உதவியால்
அலைத்தண்ணீரினால் ஒடைந்த பல்லை கழுவினேன். பல்லை தூக்கி கடலுக்குள்
எறிந்தேன். அது சுறாக்கு பல்லாக மாறக்கடவது என்று வேண்டிக்கொண்டு
குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். சிறு கம்பு எனக்கு பெரும்பலத்தைக்
கொடுத்தது. கொஞ்ச நாள் கம்பின் உதவியால்தான் நடக்க முடிந்தது.
பின்னாட்களில் கம்பை விட மனசு வரவில்லை. கையில் வைத்துக்கொண்டே
அலைந்தேன். கம்பை வேல் மாதிரி சீவிக்கொண்டேன். மீனைக்குத்தி
பிடிப்பதற்காக. வேல் கம்பு எனக்கு உற்ற தோழனாக மாறினான். நானும் அவனும்
கரைக்கு பக்கத்திலே நின்றுக்கொண்டே வேட்டையாடினோம். வலை வீசும் படலத்தை
விட வேலுடன்  வேட்டையாடுவது பிடித்திருந்தது. ஓட்டைப்பல் முளைத்து
விட்டது. கையில் வேலோடு சுத்துவதால் என்னை எல்லாரும் வேலா என்றும்
அழைத்தனர். செழியனை விட எனக்கு அந்தப்பெயர் பிடித்திருந்தது.
***

   " கடலில் இறங்கிய  முதல் பெண்.. தென் குமரி.."

எல்லாரும் அவளை ஊமைக்கிறுக்கி என்றுதான் சொல்வார்கள்.  அவளைப்பற்றி
பலக்கதைகள் உண்டு. பேய் பிடித்ததால் பக்கத்து ஊரிலிருந்து கோவிலில்
விட்டுச் சென்றுவிட்டதாக கூறுவர். ஒரு சிலர் அவள் பேயோ பிசாசோ இல்லை.
அவள்தான் நம்மக்க ஊரு காவல் அன்னை என்று. எங்களுக்கு அவள் எப்பொழுதும்
ஊமையன்னை.  அவளுக்கு மீன் அதிகம் பிடிக்கும். எல்லார் வீட்டிலும் மீன்
வாங்கி சாப்பிடுவாள். மீன் மட்டும்தான். தாகம் எடுத்தால் கடல் நூரையுடன்
கூடிய நீரை அருந்துவாள். தாகம் அடங்கியது பெருமூச்சு விட்டு அழுவாள்.
சிறு கண்ணீர் திவளைகள் மார்பு வழியாக இறங்கும். கோவில் மணி அடிக்கும்
பொழுது காதை பொத்திக்கொண்டு ஒடுவாள். சிறு உளறல் மட்டும் கேட்கும். பெரு
அலையைக்கண்டு கைத்தட்டுவாள். இவ்வளவு அழகானவளா என்று நினைக்கத்தோன்றும்.
பெரு அலையின் மேல் அவளுக்கு இருந்த ஆர்வம் ஊர்மக்களுக்கு வியப்பை தரும்.
கன்னி மரியாளின் உருவச் சிருவத்தை கெபியின் முன் நின்று பார்ப்பாள். அவளை
அறியாமல் முனகல் வரும். நான் ஒரு நாள் அவளிடம் பேச முற்பட்டேன். என்
தலையைத் தொட்டு ஆசிர்வதித்தாள். கடலைக் கை காட்டி என்னிடம் ஏதோ சொல்ல
முன்வந்தாள். அவளால் வார்த்தை வரவில்லை. ஆ,உ,ம் என்ற சத்தத்தை தவிர எதும்
வரவில்லை. என்னுடன் பேசிய சில நாட்களுக்கு பிறகு ஊமை அன்னையை காணவில்லை.
அந் நாட்களில் மட்டும் அலை தனது ஆர்ப்பரிப்பை நிறுத்தி வைத்தது. சில
பெரியவர்களுக்கு வருத்தம். நம்ம தெய்வம் நம்மை விட்டு போயிட்டது என்று.
அவள் போனதிலிருந்து எங்களூர் மாதா சுரூபம் மிக பிரகாசமாக மாறியது. எங்கள்
மாதாவின் மகிமை எல்லா ஊருக்கும் பரவியது. மெல்லிய புன்னகையுடன் கன்னி
மாதா எங்களூரில் மிகவும் பிரகாசிக்க ஆரம்பித்தது ஊமை அன்னை
மறைந்துப்போனதுக்கு அப்புறம்தான். கடல் கொந்தளிக்காத பொழுதெல்லாம் அரிசி
மாவை இடித்து கன்னி மாதாவுக்கு படைத்தோம். எங்கள் கானலம் பெருந்துறைக்கு
அவள் தெய்வமானாள்...

***
    "நாள்வலை முகந்த கோன்வல் பரதவர்"

கடல் முழுவது குருதி வழிந்தோடியது மாதிரியிருந்தது. பெரிய சுறா ஒன்று தன்
குருதியை கொட்டி தீர்த்ததாக நான் நினைத்தேன். அந்த அளவுக்கு செங்கடலின்
வியப்பு என்னை ஆழ்த்தியது. கரையில் ஆட்டம் போடும் அலை. நடுக்கடலில் குளம்
போல் காட்சியளித்தது. முதல் கடல் பயணம். பெரு வலையின் சிறு முனை என்
கையில் கொடுக்கப்பட்டிருந்தது. மறு கையில் என் வேல்.
வேலைக்கொண்டு கடல் மேற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த திருக்கயை
குத்தினேன். என் வேலில் மாட்டிக்கொண்டது. அலைக்கடல் தன் ஆர்ப்பரிப்பை
நிப்பாட்டி விட்டு என்னை வாழ்த்தியது. எங்கிருந்தோ வந்த ஊதக்காற்றின்
சத்தம் ஆ,உ,ம் சத்தத்தை உண்டு பண்ணியது. ஆம் என் ஊமை அன்னை என்னை
வாழ்த்தினாள்.
***

" பழந்திமில்  கொன்ற புதுவலைப்பரதவர் "

" ஆண்டவனே உன்ன நம்பி
  ஏலேலோ
அலைக்கடல் ஏறி வந்தோம்
 ஏலேலோ
பெருமாளே உன்ன நம்பி
 ஏலேலோ
பெருங்கடல் ஏறி வந்தோம் "

அம்பா பாட்டு பாடிக்கொண்டே கொண்டல் காற்றுக்கு ஒத்துசைந்து நீலக்கடலை
கிழித்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தோம். கட்டுமரத்தினுள் வலை,
தூண்டில்,உளி  போன்றவை கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. சில மீன் களை
உளியைக்கொண்டு எறிந்து பயன்படுத்தலாம். நான் என் வேல் கம்பை கரையில்
வைத்து வந்துவிட்டேன். உளியை  எடுத்துப்பார்த்தேன். கூடவே பனை
ஓலைப்பெட்டி. இதை நாங்களே முடைந்துக்கொள்வோம். மீன்கள் ஓலைப்பெட்டிக்குள்
துடிப்பதை ரசித்துப்பார்த்துக்கொள்வேன். என் பெரியப்பன் தான் எங்கள்
நடைக்கு தலைமை. கொடிய முடிச்சுக்களை உடைய ஒருவிதமான நாரினால் ஆன வலையை
என் பெரியப்பன் கடல் நீவாட்டுக்கு ஏற்ப கடலில் வீசிக்கொண்டே வந்தான்.
விடி வெள்ளி உச்சியில் இருந்தது. சிறிது நேரத்துக்கு நானும் என்னைப்போன்ற
கையாட்கள் தூங்குவோம். பின்னர் ஒரு வெள்ளி கிழக்கே சாய்ந்ததும் என்
பெரியப்பன் எழுப்புவான். மட மடவென்று வலையை உள் வாங்குவோம். கூட்ட
கூட்டமாக மச்சாதுகள் எங்கள் மரத்துக்கு தாவும். மன நிறைவுடன்
பாயைத்திருப்பி கரை விட்டோம்.  ஒரு நாள் படகை திருப்பி விட்டு பாசி,
கழிப்பு போன்றவற்றை எடுத்து பழுதுச்சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது
உயர்ந்த மணல் குன்றின் அலையால் ஒதக்கப்பட்ட சுறா மீன் ஒன்று வந்து
ஒதுங்கியது. அதைப்பார்த்த நான் ஒடிச்சென்று பார்த்தேன். என்னைப்போன்ற
கடலாடிகளுக்கு சுறாவை உளியால் வீசி உயிரோடு பிடிப்பது ஒரு பெரும்வீரம்.
ஆனால்  இந்தமாதிரி கரை ஒதுங்கிய சுறாவை கொன்று பங்கு போடுவது
வீரமல்லாததுதான். இருந்தாலும் எனக்கு ஒரு பங்கு கிடைத்தது. எடுத்துகொண்டு
குடிசையை நோக்கி நடந்தேன். பாதி சுறா கோவிலுக்கு தசம பாகமாக
கொடுக்கப்பட்டது.

***



" அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே."

திருமந்திரை  நகரில் சித்திரை மாதங்களில் முத்துக்குளித்தல் நடைபெறும்.
எங்க கடற்கரையிலிருந்து சிலர் செல்வர். திருச்சீரலைவாய் தாண்டும்போது
தெய்வானையை வல்லத்தில் நின்றுக்கொண்டே வேண்டுவர். இதை மாதிரி மலையாள
நடைக்குச் செல்லும்போதும் குமரி அன்னைக்க்கு ஒரு வேண்டுதல் இருக்கும்.
தெய்வானைக்க்கும் குமரி அன்னைக்கும் நடுவேத்தான் எங்கள் வாழ்க்கை. எங்கள்
ஊரின் கன்னி மரியாள் இவர்களின் மறுபிரதிபலிப்புதான் என்பது எங்கள்
நம்பிக்கை. நாங்கள் எங்களூரில் சங்கு குளிப்போம். புரட்டாசியிலிருந்து
சித்திரை வரை குளிப்போம். கரையிலிருந்து ஏழு முழம் தூரத்தில் கடலில்
ஐந்து முழம் ஆழத்திலிருந்து முப்பது அடி ஆழம் வரைக்கும் சங்குகள்
காணப்படும். சங்கு குளித்தல் முடித்த பின் பிடிக்கப்பட்ட சங்குகளை
கரைக்கு கொண்டு வருவோம். அவைகளை இரண்டு அங்குலம் குறுக்களவு கொண்ட மரத்தா
ஆன ஒரு கருவியால் பரிசோதிக்கப்போம். அதன் தூவாரத்தில் வழியாக நுழையும்
சங்குகள் பிரயோசனமற்றவையாகக் கருதப்பட்டு கடலுக்குள் திருப்பி
எறிந்துவிடுவோம். வரும் வழியிலே சங்கின் உள் சதைகளை அறுத்து விடுவோம்.
சங்கு கறியை அம்மைக்கு கொண்டு கொடுப்பேன். அவை ஆகாரத்துக்க்கு நன்றாக
இருக்கும். சங்கு அறுத்து வளையல் செய்வோம். சங்கு வளையலை
மச்சுவந்தினிக்கு கொண்டு கொடுப்பேன். கருத்த கைகளில் வெண் சங்கு அழகா
இடம்பிடிக்கும்.
எனக்கு இக்கடற்துறைகளில்  மிகப்பிடித்த பெண் மச்சுவந்தினி. எனக்கும்
அவளுக்கு உண்டான அன்பு சிறு வயதிலே ஏற்பட்டது. உப்புக்காற்று பட்டு
காய்ஞ்சுப் போன என் தலை முடியை அன்பாக கோதி விடுவாள். ஒரு விடியறையில்
மெல்லிய வெளிச்சத்தில் அவள் உதட்டை கடித்தேன். உப்பு கச்சி கிடந்தது.
மெல்லிய உவர்ப்பு இனிமையாக இருந்தது.  மச்சுவந்தினி அப்பா ஒரு மீன்
வியாபாரி. அவர் கடலுக்கெல்லாம் செல்ல மாட்டார். அவளுடைய அம்மை மிஞ்சிய
மீனை கருவாடாக்கி பக்கத்து ஊருக்கு சென்று விற்றுவருவாள். என் அம்மையும்
அவளும் எப்போதும் கருவாட்டை காய வைக்க சண்டை போட்டுக்கொண்டே
இருப்பார்கள். ஆளுக்கு ஒரு உள் ஊரைப் பிடித்துக்கொண்டு வியாபாரம்
பண்ணுவார்கள். மச்சுவந்தினி அப்பா சாஸ்தான் குளம் தாண்டி மாட்டுவண்டியில்
சென்று மீனையும் கருவாடையும் விற்றுவருவார். அந்த உள்ளூரிலே குடிசையைப்
போட்டு உட்கார்ந்துருலாம் என்று யோசித்தார். இந்த விசயத்தை மச்சுவந்தினி
என்னிடம் சொன்னதும் அவளை நான் பிரிஞ்சிருவமோன்னு பயமா இருந்தது. ஒரு
நாள் நான் நினைத்த மாதிரியே அவர்கள் அந்த உள்காட்டுக்கு குடிபெயர்ந்தனர்.
அவள் போன மாட்டுவண்டியை தேரிக்காடு வழியா ஒடிப்போய் வழிமறிக்கலாமுன்னு
ஒடினேன். தேரிக்காடு முழுவதும் ஓடியும் மாட்டுவண்டியைக் காணவில்லை.
அலைக்கடல் பாறை மேல் மோதி பாறை கரைந்ததுப் போல் மச்சுவந்தினியை ஏங்கி என்
மனம் கரைந்தது. சுட்ட மீனும் கள்ளுமாக என் பகல் பொழுது கழிந்தது.
மச்சாதுகள் ஒரு பொழுதும் கண்ணை மூடுவதில்லை. கண்ணை திறந்துக்கொண்டேதான்
கடலுக்குள் தூங்கும். எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் என் உரமேறிய
உடல், அவள் பிரிவால் இறங்கத்தொடங்கியது.
" வருவாள் நல்ல அல்லில்லா வருவாளெண்டு
  வழிகாத்து அல்லில்லா நானிருந்தேன்
  நடக்க நல்ல அல்லில்லா முடியுதில்லை
  நாயகியே அல்லில்லா பழக்கமில்லை "
என் அம்மைக்கு ஏதோ உரைத்திருக்க வேண்டும். மச்சுவந்தினி அப்பா  மீன்
எடுக்க வரும்போது பேசினாள்.
" கடலுக்கு போறவனுக்கு உயிர் உத்தரவாதமில்லை.  அவன வேணாம் பாடு போறத
நிப்பாட்டி என் கூட உள் காட்டுக்கு வரசொல்லு... இந்த வியாபாரத்தை
பார்க்கச்சொல்லு.. அங்க ஒரு புஞ்சையை வாங்கிட்டேன்.. எத்தன
நாளுக்குத்தான் ஒளக்க சள்ளைக்கு ஒளக்க நெல்லு வாங்குவது... நானும் நெல்லு
சம்பாதிக்க போரேன்.. உனக்க விருப்பமிருந்தா சொல்லு.. பேசிப்பார்ப்பும்.."
அம்மை பதில் சொல்லாமல் திருப்பி வந்தாள். எனக்கு என் அம்மையை விட
கடல்தான் பெரிய அம்மை.
கடலம்மையின் மடியை விட்டு விலகி செல்ல விருப்பமில்லை. கடற்கரையில் எவனாது பாடுவான்.
" வேளாக் கடலில்
  விள மீன் பிடிப்பேன்
  வீட்டில வந்தா
  விளக்கெண்ணெய் எரிப்பாள்
  சாய்வாள் சரிவாள்
  சந்தணம் தருவாள் "
இன்னொருத்தன் எசப்பாட்டு எடுப்பான்.
" நானெடுப்பான் பருமரக்கோல்
 அவளிருப்பாள் கும்பனிலே
 கும்பத்து அழகியவள்
 குணமான செல்லியவள்"
இதைக்கேட்கும்போது மச்சுவந்தினி ஞாபகம் வந்து மீட்டும். மச்சுவந்தினியின்
உடம்பு வாசனையை   நுகர்ந்ததை நினைக்குபோது அவளையும் அவள் உடம்பயையும்
தேடும்.  ஒரு நாள் நானும் அவளும் கடற்கரையில் உறவாடிக்கொண்டிருந்தோம்.
காதல் வேகத்தில் என் கை அவள் சிறு மார்பில் பட்டுவிட்டது. அவள் பயந்து
ஒதுங்குகிறாள். நான் ரோசம் வந்தவனாய் அவளை இறுக்கி அணைக்கிறேன். எங்கள்
மூச்சுக்காற்று  அலைக்காற்றுடன் போட்டி போடுகிறது. தீடிரென்று
திமிறிவிட்டு  அப்பாவுக்கு பயந்து ஒடிவிட்டாள். என் தொண்டையிலிருந்து
குரல் பிறீடுகிறது.
" மருகனைய குழல் சரிய
  மகுடகும்பம் தன்மசைய
  தனத்தை தொட்டா உனக்கென்னடி
  தமயன் கண்டா வரச்சொல்லடி
 மார்பைத் தொட்டா உனக்கென்னடி
 மாமன் கண்டா வரச்சொல்லடி."
ஒடிச்சென்றவள் திரும்பி வந்து உதட்டணைக்கிறாள். பிண்ணி பிணைகிறோம்.

***
" கல்பொரு சிறு நுரை போல
  மெல்ல  மெல்ல இல்லாகுதுமே.."

எளிய திருப்பலியுடன் மச்சுவந்தினியுடன் இணைந்தேன். இருவரும் மெல்லிய
அலங்காரத்துடன் ஊருக்குள் ஊர்வலமாகச் சென்று மாதா சுரூபத்தில்
விளக்கேத்தினோம். என் மனசுக்குள் நெருடல். இனி கடலுக்கு செல்ல முடியாதே
என்று.  மீன் விருந்துடன் ஊரே எங்களை வழியனுப்பியது. கடல்
பெருங்கொந்தளிப்பில் இருந்தது. அம்மையும் கூட வந்தாள். வண்டிகட்டி
சென்றோம். உள் காடு பனைமரங்களால் சூழ்ந்து இருந்தது. அந்த ஊருக்கு
தோமையார்புரம் என்று பெயர் சூட்டியிருந்தனர். ஒரு சிறு தோமையார் கோவில்.
கடல் காற்றுக்கு பழக்கமான உடல், வெப்பக்காத்துக்கு கொஞ்ச நாளில் பழகியது.
அவள் அப்பாவுடன் சேர்ந்து பல ஊருக்கு சென்று கருவாடு விற்றோம். நீரில்
நின்ற கால், நிலத்தில் நிக்க முடியாதா  என்று மாமனார் அடிக்கடி சொல்வார்.
கொஞ்ச கொஞ்சமாக நில வாழ்வு எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. கடலை மறக்க
ஆரம்பித்தேன். கடலன்னை ஞாபகம் வரும்போதேல்லாம் மச்சுவந்தினியுடன்
பிணைந்தேன். ஒரு நாள் என் மாமனாருடன் கோட்டை நகருக்கு வந்தேன். அங்கே
சம்ப கடை என்று ஒரு பெரிய தெருவே இருந்தது. எல்லாம் கருவாடு வியாபாரம்.
அங்கு ஒரு கடையை முடித்து என்னை உட்கார வைத்தார். மச்சுவந்தினியுடன்
நான் அவ்வூர் வந்தேன். பல வெள்ளைக்காரர் அவ்வூரில் அலைந்தனர். அருகிலே
அந்தோணியார் இருந்தது. அங்குள்ளவர் அனைவரும் கடலை துறந்துவிட்டு வந்தவர்
என்றனர். கோட்டை என்ற பெயரிட்ட அவ்வூரில் என் முதல் விழுது பிறந்தது. "
உன் சந்ததிர்களை  கடற்கரையில் உள்ள மணல் போலவும், வானத்தில் உள்ள
நட்சத்திரங்கள் போலவும் பலுகிப்பெருகப்பண்ணுவேன். " இது கடவுள்
யூதாவுக்கு கூறிய வாக்குதத்தம். என் சந்ததியெல்லாம் கடல் வாழ்க்கையே
அறியாத அக்கோட்டையூரிலே வாழத்தொடங்கினர். கடைசியில் நான் மரிக்கும வரை
கடற்கரைப்பக்கம் செல்லவில்லை. கடல் என்னை மன்னிக்காது என்று தெரியும்.

****


  " பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே"

செழியனின் நினைவு மீண்டதும் விடியல் ஆரம்பமானது.  ஒரு கிறுக்கி
என்னருகில் வந்து " நீ செழியன் வாரிசா.." என்றாள். நான் அதிர்ச்சியுட்டு
தலையை ஆட்டுவதற்குள் அந்த கிறுக்கி ஒடிவிட்டாள். அவள் விட்ட பாதச்சுவட்டை
பின்பற்றி சென்றேன். ஒரு மணற்பாக்கத்தை சென்றடைந்தது. கடலலைகள் கோபமா
என்னருகில் வந்துசென்றது. கடல் குமுறிக் கொந்தளித்து சீறிச் சினந்தது.
நிலத்தை விழுங்க துடித்தது. ஓயாதா ஆட்டம் போட்டது.  நான் கடல் மடியில்
செல்ல ஆயத்தமானேன். என் மூதாதையரில் ஒருவனான செழியன் செய்த தவறுக்கு
பிராயசித்தமாக. நான் கடலோடு கலந்தபோது உலகு புரக்க எழுந்த ஞாயிறு ஒளி
வீசினான்..

------ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment