வசன தேவதை - - சிறுகதை

2012-02-22

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



திருநெல்வேலி பஸ் மேற்கே போனதும் வாயில பல் தெரிய சிரிச்சான் பிச்சை. கையில் நூறு ரூபாயை நோட்டை தொடடுப் பார்த்தான். அம்மாவ பஸ் ஏற்றிவிட வந்தவனுக்கு நூறு ரூபாயை கையில் திணிச்சுட்டு போயிட்டா. நூறு ரூபாயை தடவிப்பார்த்துட்டு டிக்கெட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். வீட்டில் செவனென்னு ஆதித்யா டிவி பார்த்துட்டு இருந்தான்.  பிச்சைக்கு காமெடின்னா ரொம்ப பிடிக்கும். அவசரமாய் திருநெல்வேலிக்கு கிளம்பிட்டு இருந்தவள். பிச்சையை பஸ் ஏற்றிவிட கூவி கூவிப்பார்த்தாள். இவன் காதுக்கு ஏறுகிற மாதிரி தெரியல. " ஏல மூதி.. நானும் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன்.. நீயும் அந்த டிவியைப்பார்த்துட்டு கெக்க பிக்கன்னு சிரிச்சிட்டு இருக்க..வால... இந்த மூட்டையை என்னால எப்படி தூக்கிட்டு போக முடியும்... எல்லாம் உங்க அக்காவுக்குத்தான் போகுது.. நீ கொண்டு கொடுன்னா.. பெரிய இவன் கணக்கா போக மாட்டுங்க.. " என்று புலம்பிக்கொண்டே வாசல் வரை வந்துட்டு திரும்பி பார்த்து
" பஸ் ஸ்டாண்டுக்கு வந்தா காசு தாரேன்... " என்றாள். உடனே துள்ளிகுதிச்சு டிவியைக்கூட அணைக்காமல் ஒடிவந்துட்டான்.
காசை கூடுக்கும்போது "  மத்தியானம் மட்டும் செவுடி அக்காட்ட உனக்கு சாப்பாடு கொடுக்க சொல்லிருக்கேன்.. மத்த நேரத்துக்கு கடையில சாப்பிட்டுக்கோ.. அதுக்குத்தான் இந்த ரூபாய்.. செலவு பண்ணித் தொலைச்சுக்காத... ரெண்டு நாளுல திரும்பிருவேன்.. "

நேரா சவுந்திரநாடார் கடைக்கு முன்னால் போய் நின்னான். வெளிய இருந்து இம்மானுவேலுக்கு மிஸ்டு கால்  கொடுத்தான். எதுக்குலன்னு முகத்தில் படிந்திருக்கும் மைதா மாவை துடைச்சுக் கொண்டே வந்தான் இம்மானுவேல்.
" சீக்கிரம் சொல்லு... பெரியவரு வர்ற நேரம்..."
"எப்ப வருவ... போரடிக்குது.. "
" போரடிக்குதுன்னா..ஒரு வேலைக்கு போகாத.. இப்படி ஊரு சுத்திட்டு இருந்தா..அடிக்கத்தான் செய்யும்... மூணு மணிக்கு மேல வாரேன்.. "
"சரி சரி அட்வைஸ்லாம் பண்ணாத.. எங்க மாமா பாம்பேல எனக்கு வேலை பார்த்துட்டு இருக்காரு.. வந்தவுடனே உங்க மூஞ்சில கரியைப் பூசிட்டுப் போயிருவேன்.. மிக்கேல் எங்க இருப்பான்...?"
"அவன் எங்கிருப்பான், வெல்டிங்க பட்டறையில்தான் இருப்பான்.. நீ வேணா அவன் கூடப் போய் கதை பேசிட்டு இரு... ஆனாலும் உன்க்கு இந்தப் பெருமை ஆகாதுடா.. பாம்பே மையிருன்னு... சாயங்காலம் பார்க்கலாம்..." என்று சோப்பு படம் போட்டிருந்த பனியனால் முகத்தை துடைத்துவிட்டு போயிட்டான். 
வெயில் மண்டையை பிளந்தது. பண்ணிரண்டு மணிக்கு மேல் கரெண்ட் போயிரும். வீட்டில் போய் ஒண்ணும் பண்ண முடியாது. செவுடி அக்கா எப்படியும் இரண்டு மணிக்கு மேல்தான் சாப்பாடு ரெடி பண்ணும். மிக்கேல் கடைக்கு போலாமா என்ற யோசனையிலே வெங்கடேசபுரம் பஸ்டாண்டை வட்டம் அடித்தான். ஒருவழியா முடிவுக்கு வந்து ஒரு தம் போட  பவுல் அண்ணன் கடைக்குப் போனான்.
பவுல் அண்ணனுக்கு ஊரு பக்கத்துல சாலைப்புதுர். வெங்கடேசபுரம் ஊரு பஜார்லாம் வச்சு பெரிய ஊரா இருந்தாலும் இங்க ஸ்கூலு கிடையாது. இங்க உள்ளங்க அங்கேப் போய்த்தான் படிக்கனும். இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். போற வழியில வரிசையா ஓடை மராமாத்தான் இருக்கும். ஸ்கூலுக்கு போறதுக்கு இன்னொரு வழியும் உண்டு .அது வாய்க்கால் ஒரமா வரும். அதுலத்தான் பிச்சை நடந்துப் போவான். அந்த வழியிலே பெரிய பெரிய ஓட மரமா இருக்கும் . அதன் பொந்துக்குள்ள கண்ட கண்ட புக்கெல்லாம் சொருகி வச்சுருப்பாங்க. அதைப் படிக்கிறதுக்கே பிச்சை அவன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அந்த வழியே போவாங்க. அந்த ஓடைக்காடு ஒரு திகில் பயணமா இருக்கும். அந்த வழியாத்தான் பவுல் அண்ணன் சைக்கிளில் வருவாரு. ஸ்கூலு முடிஞ்சு வருகிற பசங்கள எப்படியும் ஏற்றிக்கிட்டு வருவாரு. இப்பல்லாம் பைக் வாங்கிட்டாரு இப்பவும் ஏற்றிட்டு வருவாரா தெரியல. பவுல் அண்ணன் கடையில் ஒரு சிகரெட்டும் பாக்கும் வாங்கி கொண்டான். பக்கத்துல  கம்ப்யூட்டர் செண்டர் இருந்த இடத்தைப் பார்த்தான். ஜான்ஸி ஞாபகம் வந்தது. ஜான்ஸி கருங்கடல்காரி.. அப்பத்தான் புதுசா வெங்கடசேபுரத்தில் கம்ப்யூட்டர் செண்டர் தொடங்குனாங்க. பனகுளம் மெர்ஸி டெய்லர் தம்பி கில்பர்ட்தான் அதுக்கு ஒனர். பிச்சைக்கு கில்பர்ட்ட நல்லா தெரியும். செண்டர் ஒப்பன் பண்ணினதுல இருந்து அங்கயேத்தான் கிடப்பான். பிச்சைக்கு கம்ப்யூட்டரில் ஓண்ணும் தெரியாதுனாலும் அங்க போய் கொஞ்சம் கத்துகிட்டான். பிச்சை பத்து வரைக்கு படிச்சுட்டு பேட்டை .டி. க்கு படிக்கப் போயிட்டான். கம்ப்யூட்டர் செண்டரில் பெஞ்சை துடைக்கிற வேலைத்தான். இருந்தாலும் கம்ப்யூட்டரில் வேலை பார்க்காண்டான்னு எல்லாரும் அவன் மேல பொறாமை பட்டார்கள். முக்கியமா மளிகை கடை இம்மானுவேலும், வெல்டிங்க்டை மிக்கேலும். அங்க வச்சுதான் ஜான்ஸியைப் பார்த்தான். அவ வந்த அன்னைக்கு இவன் மட்டும்தான் கடையில இருந்தான். இவன்தான் டீச்சர்னு நினைச்சுட்டு குட் மார்னிங்க சார்னுலாம் சொல்லிச்சு. இவன் ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டான். ஜான்ஸி அன்னைக்கு வெள்ளை கலர் சுடிதாரில் வந்திருந்தாள். கையில காதுல கழுத்துல ஒன்னும் இல்லை. மொட்டையா இருந்தாள். அவளுடைய அப்பா சர்ச் பாஸ்டராம். அதான் முதல் நாளுல வெள்ளை கலரில் ஜொலித்தாள். அவளைப்பற்றி எல்லாம் விசாரிச்சு முடிக்கவும் கில்பர்ட் உள்ளே வந்தான். பிச்சை சேரில் இருந்து எழுந்ததும் கில்பர்ட் உட்கார்ந்தான். ஜான்ஸி பிச்சையை முறைச்சுப் பார்த்தாள்.  பிச்சைட்ட என்ன சொன்னாளோ அதை மறுபடியும் கில்பர்ட்டிடம் சொன்னாள்.
"என் பேரு ஜான்ஸி. எங்க அப்பா பேரு திரவியம். எங்க அப்பா சர்ச் பாஸ்டரா இருக்காரு. ஊரு கருங்கடல். எனக்கு ஒரு அக்கா. அவ பேரு மெஸ்ஸி. அவளை பழனியப்பபுரத்தில கட்டிகொடுத்துருக்கு.."
"ஏய்.. ஏய்..  நிறுத்து.. இதலாம் எதுக்கு சொல்லுற.."
"அந்த சாருதான் இப்படி சொல்லனும்னு சொன்னாரு.. " என்று பிச்சையை கையைக் காட்டினாள்.
"அவனே ஒரு எடுபிடி..நீ அவனைப் போய் சாருங்குர.." என்று கில்பர்ட் பிச்சையை தாழ்த்திபேசி ஜான்ஸிட்ட நல்ல பேர் வாங்க பார்த்தான். அடுத்த நாளுல இருந்து ஜான்ஸியைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். ஒருநாள் அவளிடம்
"எப்படிங்க இப்படி கழுத்துலயும், காதுலயும் ஒன்னு போடாம இருக்கிங்க.. அசிங்கமா இருக்காது...?"
"நான் அசிங்கமா இருக்கனா..." பிச்சை கண்ணைப் பார்த்து கேட்டாள்.
"நீங்க இல்லைங்க.. இங்க நிறைய பேரு இப்படித்தான் சுற்றிட்டு இருக்காங்க.. நீங்க தேவதைங்க.. தேவதைங்க எப்போதும் இப்படித்தான் மொட்டையா அழகா இருக்கும்... நீங்க சிரிச்சாலும் அழகா இருக்கிங்க..." என்று வழிந்தான்.
" ஒவரா பேசாதிங்க.. எங்க அக்கா என்னை விட நல்லா இருப்பா..அவளை நீங்க பார்க்கனும்.. எங்க ஊர் சர்ச்சுக்கு ஒரு நாள் வாரீங்களா.. நல்லா இருக்கும்..இந்த ஞாயிற்றுகிழமை.."
இவன் தலையை ஆட்டிட்டு வந்துட்டான். ராத்திரி பூராவும் அவள் நினைப்புதுதான்.. அம்மாட்ட கேட்டான்.
" அம்மா .. உனக்கு ஒரு மொட்டச்சி மருமகளா வந்தா ஏத்துக்கிடுவியா... "
"அடி செருப்பால..." என்ற  குரலோடு செருப்பும் பறந்து வந்தது.

கல்லறைதோட்டத்தில் வச்சு பீர் அடிச்சுட்டு இருந்தாங்க மூணு பேரும்.
" ஞாயிற்றுகிழமை படத்துக்கு போவாம..."
"நான் வரல.. எனக்கு வேலை இருக்கு..." என்று படபடத்தான் பிச்சை.
"அப்படி என்ன வேலை.."
"எனக்கு கருங்கடலுக்கு ஒரு வேலை விசயமா போகனும்.. நீங்கத்தான் எனக்கு வண்டி கொடுக்கனும்.. மிக்கேலு கொடுடா.. ப்ளீஸ்.."
"கருங்கடலுக்கு எதுக்குடா.." மிக்கேல் கேட்டான்.
" அதாண்டா.. அந்த கருங்கடலுகாரியைப் பார்க்க போறாண்டா.. " இம்மானுவேல் எடுத்துக்கொடுத்தான்.
"டேய் அவளா.. நல்ல பிகருதான்.. ஆனா அவ அப்ப பாஸ்டருடா.. வசனகர்த்தாடா... செத்தான் பிச்சை இனிமேல்.. ஹோசன்னா பாடுவோம்... யேசுவின் நாமமே.. இப்படி பாட்டு பாடிக்கிட்டு திரிவாண்டா.. " என்று மிக்கேலும் இம்மானுவேலும் சேர்ந்து கிண்டல் பண்ண, பிச்சை கோபத்துடன் எழுந்துப் போயிட்டான். போகும் போது
"அப்பாலே போ சாத்தானே.." என்று அவர்கள் இருவரையும் பார்த்து சொல்லிட்டுப் போனான்.
சொன்னமாதிரி ஞாயிற்றுகிழமை அவனால் போக முடியவில்லை. அடுத்த நாள் கோபத்துடன் வருவாள்னு பார்த்தா சிரிச்சிக்கிட்டேதான் வந்தா.
"என்ன பிச்சை.. ஒரு மாதிரி இருக்கிங்க..இந்தாங்க..."  என்று தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு வசனத்தை எடுத்து நீட்டினாள்.
"எங்க அம்மா, அப்பாட்ட நீங்க வருவிங்கன்னு சொன்னேன்..அவ்வியளும்  நீங்க வருவிங்கன்னு பார்த்தாங்க.."
வசனத்தை எடுத்துப் பார்த்தான். "  இனிமேலும் நான் எந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.  ஏசாயா 46:4 "
"என்னங்க...இது.."
"வசனம்..!!"
"அது எனக்கு தெரியும்... இதுக்கு அர்த்தம் என்ன...?" பிச்சை வேற அர்த்தத்தில் கேட்டான்.
"அதுக்கு.. கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்குவாருன்னு அர்த்தம்,, போதுமா.."
"அவ்வளவுத்தானா..." என்ற எமாற்றத்துடன் வந்தான். அந்த வசனத்தை வீட்டின் கதவில் ஒட்டினான். அம்மாவுக்கு அந்த வசனம் பிடிச்சிருந்தது. " நீ உருப்புடுவடா.. எப்படியோ பைபிள்லாம் வாசிக்க ஆரம்பிச்சிட்ட.. இந்த வீடு இரட்சிக்கப்பட்ட வீடா மாறிரும்.." என்று சந்தோசத்தில் பொங்கிப்போனாள்



ஜான்ஸி அடிக்கடி வசனம் கொடுத்துட்டு இருந்தாள்.  " உன் துக்கம் சந்தோசமா மாறும், வாதை உன் கூடாரத்தை நெருங்காது.." என பல வசனங்கள் இவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது. அதுக்குள்ள கில்பர்ட் அண்ணனுக்கு நாசரேத்துல வாத்தியார் வேலை கிடைச்சதால் கம்ப்யூட்டர் செண்டரை மூடிட்டாங்க.  ஜான்ஸி பிரிவின் வலியில்லாமல் பிரிந்துப் போனாள். இவன் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டான்.
" உன் முள் என்னை காயப்படுத்தாமல் காயப்படுத்தியது " என்று இவனா ஒரு வசனங்கள் சொல்லிகொண்டு திரிந்தான். ஒரு மாசம்தான் ஆகுது அவளை பிர்ந்து அதுக்குள்ள பல வருசம் ஆன மாதிரி இருக்கு. 

பவுல் அண்ணன் கடையில் வாங்குன சிகரெட் முடிஞ்சுட்டு. தீடிரென்று ஜான்ஸி ஞாபகம் வந்து இவனை நிலைக்குள்ளாக்கியது. பேசாம கருங்கடல் போயிரலாமான்னு யோசிச்சுட்டு மறுபடியும் ஒரு தம் பற்றவச்சுகிட்டு மிக்கேல் பட்டறைக்கு நடந்தான்.
மிக்கேலிடம் வண்டி வாங்கி வச்சுகிட்டான். கருங்கடல் ஒரு உள்காடு. பஸ்லாம் கிடையாது.  ஜான்ஸியை அவங்க மாமாதான் கொண்டு விட்டுட்டுப் போவார். நேரா வீட்டுக்கு போய் செவுடி அக்கா வீட்டுல சாப்பிட்டான். சாயங்காலம் வண்டியை எடுத்துட்டு கருங்கடலுக்கு போயிட்டான். இப்பத்தான் அந்த ஊருக்கு முதல் தடவையா போறான். நேரா சர்ச்சுக்கு பக்கத்தில் உள்ள திண்டில்  போய் உட்கார்ந்தான். அங்குள்ள நல்ல தண்ணிர் பைப்புல தண்ணிகுடித்தான். ஒரு பெட்டிகடைக்குப் போய் " இங்க பாஸ்டர் வீடு எங்க இருக்கு.." என்றான்.
"அது கடைசி தெருவுலா..   நேரா போயி இடது பக்கம் திரும்புங்கன்னு" கையை ஆட்டிகீட்டி சொன்னார். ஜான்ஸி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த தெருவுல கடைசி வீடாக அது இருந்தது. வீட்டுனுள் சிரிப்பு சத்தம் அதிகமா கேட்டது. இவன் நிக்குற சத்தம் கேட்டு ஒரு பொண்ணு வெளியவந்துட்டு உள்ளே போய் ஜான்ஸியை கூட்டிட்டு வந்துச்சு.
வெளியவந்து பிச்சையைப் பார்த்ததும் " எப்படி இருக்கிங்க பிச்சை"  படியில் இருந்து இறங்கி வந்தாள். உள்ளே திரும்பி அப்பா இங்க கொஞ்சம் வாங்கன்னு சத்தம் கொடுத்தாள்.
" சும்மா. இந்த பக்கம்.. சவேரியார்குளம் வரைக்கும் வந்தேன்.. அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.. எப்படி இருக்கிங்க.."
என்றான் பிச்சை. பேச பேச வாய் நடுங்கியது.
அதுக்குள்ள அவங்க அப்பா திரவியம் வர, ஜான்ஸி பிச்சைக்கு அறிமுகம் செய்தாள்.
" நீங்க நல்ல நேரத்துக்குத்தான் வந்துருக்கிங்க... நாளான்னைக்கு எனக்கு மேரேஜ்.. எப்படிடா உங்களை கண்டுபிடிக்கலாம்னு இருந்தேன்.. நீங்களே வந்துட்டிங்க.. ஒரு நிமிசம்.." உள்ளேப் போய் பத்திரிகை எடுத்துட்டு வந்தாள்.  உங்க முழுபேரே பிச்சையா என்று கேட்டுக்கொண்டே பேனாவால் எழுதப் போனாள்.
"இல்லை.. அந்தோணி பிச்சை.."
இந்தாங்க கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்தரனும் நான் ரொம்ப எதிர்பார்ப்பேன். கொடுத்துட்டு
"இருங்க டீ சாப்பிட்டுட்டு போலாம்.. "
"இல்ல.. பரவாயில்லைங்க.. நான் வாரேங்க.." என்று சொல்லிவிட்டு தோத்த மாடு மாதிரி வண்டியை எடுத்துட்டு ஊர் வந்து சேர்ந்தான்.
வரும்போது அவள் நினைப்பாத்தான் இருந்தது. இந்தப் பிள்ளை இப்படி எமாத்திட்டே.. வசனம் கொடுத்து வசனம் கொடுத்து நம்மளை இப்படி புலம்ப வச்சுட்டாளேன்னு டிக்கெட் பாக்கெட்டில் இருந்த ரூபாயைக் கொண்டு டாஸ்மாக்கில் செலவழித்தான்.

ஜான்ஸி கல்யாணத்துக்கு போகவேண்டாமுன்னு முடிவெடுத்து வீட்டிலே கிடந்தான். அம்மா வேற போன் பண்ணி நான் வர இன்னும் இரண்டு நாளு ஆகும்  நீ மேரி அக்கா கடையில சாப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டாள். பிச்சைக்கு வீட்டில் ஒட்டிவச்சிருந்த வசனத்தை பார்க்கும்போது ஜான்ஸி ஞாபகமா வந்தது. கடைசியில் கல்யாணத்துக்கு போலாம்னு முடிவெடுத்து பாக்கெட்டை தடவிப் பார்த்தால் பத்து ரூபாய் தாள் மட்டும் மிச்சம் இருந்தது. திசையன்விளையில் கல்யாணம் எப்படியும் போயிட்டு வருவதற்கு ஐம்பதாவது வேணும். மிக்கேலிடம் கெஞ்சி கூத்தாடி ஐம்பது ரூபாய் வாங்கிட்டு பஸ் ஏறினான். தீடிரென்று எதாவது கிப்ட் கொடுக்கனுமே என்று ஞாபகம் வந்தது. கையில் காசில்லை. என்ன பண்ணுவது என்று சுற்றி சுற்றிப் பார்த்தான். பஸ்ஸில் கூட்டம் அவ்வளாவா இல்லை. பக்கத்தில் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். தான் மொபைலில் உள்ள மெமரி கார்டை கழற்றினான். ஆபத்துக்கு பாவமில்லை..!
"தம்பி... 2ஜிபி மெமரி கார்டு வெளிய வாங்குனா, 400ரூபாய்..எங்கிட்ட 150ரூபாய்க்கு வாங்குதுயா.. எல்லா புது சாங்கும் இருக்கு.. "என்றான்.
அவன் பிச்சையை ஒரு மாதிரி பார்த்துவிட்டு எழுந்து வேற இடத்துக்கு சென்றான். மறுபடியும் இன்னொரு ஆளிடம் சென்று இதே புராணம் பாடினான். அவர் நூறு ரூபாய் எடுத்துகொடுத்து வாங்கிகொண்டான். தன் நிலைமையை நினைத்து நொந்துக்கொண்டான்.

திசையன்விளையில் இறங்கி கிப்ட் செண்டர் போனான். என்ன வாங்கலாம் என்று அலசி ஆராய்ந்து ஒரு கிப்ட் வாங்கினான். கல்யாண மண்டபம் ரொம்ப கூட்டமாக இருந்தது. ஜான்ஸி கல்யாண கோலத்திலும் கழுத்திலும் கையிலும் ஒன்றும் போடாமல் இருந்தாள்.  ஜான்ஸியை பார்க்கும்போது அழகிய கடற்கன்னி மாதிரி இருந்தது பிச்சைக்கு. ஒரு அலங்காரம் இல்லாமல் வெற்றுடலாக இருந்தாள். மேடை ஏறி கிப்டை கொடுத்துவிட்டு இறங்கினான். தன் முதுகை ஜான்ஸி பார்ப்பதாக உணர்ந்து திரும்பி பார்த்தான். அவள் போட்டாவுக்கு போஸ் கொடுத்து சிரித்துகொண்டிருந்தாள். கொஞ்சம் கண்ணீர் வந்தது. துடைத்துகொண்டு சாப்பிடாமல் மண்டபத்தை வெளிய வந்து வெங்கடேசபுரத்துக்கு பஸ் ஏறினான். அந்த கிப்டை எப்ப திறந்துப் பார்ப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அதில் " நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்...! ஆதியாகம் 12:2 " என்று பொன்னிற எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும். கண்டிப்பா அதை ஜான்ஸி பார்ப்பாள்...!!!


--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

நகர காம்பவுண்டின் அன்பு வாழ்க்கை...

2012-02-08

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
அதிகாலைப்பொழுதில் வீட்டு கதவை தட்டி " தண்ணீ வருதுக்கா...?" என்றழைக்கும் கணங்களிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது நகர காம்பவுண்டின் அன்பு வாழ்க்கை.. அச்சு பிசலாக அழுக்கேறி கிடக்கும் சிறு நகரங்களில் சொல்லப்படாத வாழ்க்கை இந்த காம்பவுண்ட் வாழ்க்கை. பக்கத்து வீட்டு நடையில் உட்கார்ந்துக்கொண்டு


" நீ என்னுடைய கீரையை அரி.. நான் உன்னுடையை வெங்காயத்தை உரிக்கிறேன்.." என்று சொல்லிக்கொண்டே தனது குடும்பங்களுக்கான உண்மைகளையும் உரித்துக்கொண்டிருப்பர். புதுசா வீட்டுக்கு குடி வருகிறவர்களில் பெண்களே அதிகம் பக்கத்து வீட்டுக்களில் ஒட்டிக்கொள்வர். அவர்களின் கள்ளகபடமற்ற பேச்சுகளிலே அறுந்துப்போன தன் வாழ்வின் வரலாறுகளை செதுக்கி கொண்டுவருவர்.

வாழ்வின் எதார்த்தமான மனிதர்களை இந்த காம்பவுண்டில் சந்திக்கலாம். சைக்கிள் கடையில் வேலை பார்ப்பவர், ஹோட்டலில் சப்ளையராக இருப்பவர், ரோட்டரத்தில் ரசவடை போடுபர், பைண்டிங்க் கடையில் கோந்து பசை ஒட்டுபவர் என எல்லாம் இந்திய சமுதாயத்தின் மூலை முடுக்களில் ஒழிந்திருக்கும் எச்சங்கள் இவை. இங்கு கறிவேப்பிலையும் மல்லி இலையும் இலவசமாகவே வாங்கப்படும்..

" இது ஆரெம்கேவி ல எடுத்தது " என்று காமபவுண்டில் உள்ள அனைத்து வீட்டிலும் ஏறி இறங்கும் அந்த துணிமணிகள், கசங்கிய பின்னே வீடு திரும்பும். .. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் பழைய காம்பவுண்ட் காரர்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சிக்கு இடையில் மகளை கட்டிகொடுத்த சம்பந்தி வரைக்கும் விசாரிக்கும் பண்பை அன்பை சொல்லி மாளாது. சின்னதாகிப்போன சட்டைகள் வீடு மாற்றிக்கொள்ளும்..

காம்பவுண்டில் குடியிருக்கும் சின்னபையன்களை கடைக்கு அனுப்பி விட்டு கையில் ஐம்பது காசை கொடுத்து ஆரஞ்சு வில்லை வாங்கிக்கோ என்று சொல்லும் அக்காமார்கள், அத்தைமார்கள் இன்னும் இருக்கிறார்கள்.

கிராமத்தில் நிலவும் சாதிவாரியான நட்புகள் இந்த நகர காம்பவுண்ட் வாழ்க்கையில் அடிப்பட்டு போயிரும்.

வீட்டு வேலைக்கு போகும் சாந்தி அக்கா , பெல்பின்ஸ் கம்பெனிக்கு போகும் பார்வதி அக்கா, சத்துணவு மாவு விற்கபோகும் குஷ்பு பாட்டி, பாதி விரல்களற்ற கையிருந்தும் பாளையங்கோட்டை வீதியில் பழைய பேப்பர், இரும்பு பொறுக்கும் அந்த பேர் தெரியாத பெரியவர் என நான் வாழ்ந்த காம்பவுண்டில் குடியிருந்து மறக்க முடியாதவர்கள். இன்னும் கூட வீடு மாறும்போது தன் பையன்களிடமே அப்பாமார்கள் கேட்கிறார்கள். ஏனெனில் சிறுவர்கள் அங்கு உருவாகி வைத்திருக்கும் நட்பு உலகமே வேறு. அவர்கள் தலையசைத்தால் மட்டுமே வீடுகள் மாற்றப்படுகிறது. பிறந்த நாட்களில் கொடுக்கப்படும் இருபத்தைந்து பைசா ஆசை சாக்லெட் , ஐந்து ரூபாய் பை ஸ்டாரா உயர்ந்து நிக்கும்.. தண்ணீ பிடிக்கும் சண்டை, கடன் சண்டை என பல சச்சரவுகள் பக்கத்து வீட்டுகாரங்களுடன் இருந்தாலும் ஒரு சிறுநகையால் அவை சரிப்பட்டு போய்விடும். காம்பவுண்டில் ஒரு சிறு குழந்தை இருந்தால் , அந்த காம்பவுண்டே சொர்க்கத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை கை மாறி, மாறி தன் தாயிடம் வருவதற்கு இரவாகிரும். கூட்டமாக சேர்ந்துக்கொண்டு செந்தில்வேல் தியேட்டருக்கும், டவுன் பொருட்காட்சிக்கும் ஒரு கூடை அழுக்கு தூணிகளை கட்டிக்கொண்டு வாய்க்கால், ஆற்றுக்கு போன கதை மறக்காது. பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு மாற்றப்படும் பண்டம் பலகாரங்களால் மதம் கூட மாறத்தோன்றும்..

சொந்த வீட்டுக்காரர்கள் அனுபவிக்க முடியாத சில வாழ்வின் அற்புத தருணங்களை வாடகை வீட்டுக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்.,

இன்று அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழப்படும் வாழ்க்கையில் எல்லா உன்னதங்களையும் இழந்துகொண்டிருக்கிறோம். காரியத்துக்கு பக்கத்து வீட்டுகாரருக்கு வணக்கம் வைக்கிறோம். அவரு பேங்குல வேலை பார்க்கிறாரு, அவரு தாலுகா ஆபிஸுல இருக்காரு என்ற காரணத்தினால் மட்டுமே அந்த வணக்க விசாரிப்புகள்.. உண்மையான இந்தியா கிராமத்தில் மட்டுமல்ல, சிறு பெரு நகரங்களில் காம்பவுண்ட் வாழ்க்கையிலும் இருக்கிறது.. உண்மையான சமத்துவத்தை பிரதிபலிக்கின்றது..

இப்போது கூட என் கையில் எங்க அம்மா, செல்வி அக்காவிடம் வாங்கிய கறிவேப்பிலையும் மல்லி இலை வாசனையும் அடிக்கிறது..

பாளையங்கோட்டையில் பதினாறு வருடங்களில் பத்து வீடு மாறி, காம்பவுண்டில் குடியிருந்த எனது சின்ன அனுபவம் இது.

ஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்

2012-01-18

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்








 (  அலிப் முதல் லாம் மீம் வரை  )




இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தலித் இலக்கியம், கரிசல் இலக்கியம் போன்று நெய்தல் வாழ்க்கையை குறிக்கும் நாவல்களும் நம்மில் சேர்ந்துக் கொண்டே இருக்கிறது. கடற்புரத்தில், சிப்பியின் வயிற்றில் முத்து, செம்மீன், ஆழி சூழ் உலகு, கொற்கை, புயலிலே ஒரு தோணி, துறைமுகம், கன்னி அந்த வகையில் ஒரு கடலோர கிராமத்தின் கதையும் சேரும்.

இந்த நாவல் கடற்கரை மக்களைப் பற்றியவை அல்ல. மாறாக கடற்கரை ஒரத்தில் வாழும் ஒரு இஸ்லாமிய வாழ்க்கையை தோப்பில் முகமுது மீரான் கூறியுள்ளார். இஸ்லாமிய வாழ்க்கையைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை. நான் படித்த முதல் இஸ்லாமிய நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. அது கூட அந்த அளவுக்கு ஆழமாக பதியவில்லை என்பது கடலோர கிராமத்தின் கதையை படித்தவுடன் தெரிந்தது. இந்நாவலில் உள்ள மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இயல்பாக நம் முன்னால் நடமாடுகின்றனர்.

நாவலில் ஒரு கெட்டவன் தான் கதாநாயகன். அவனைச்சுற்றியே கதை நடக்கிறது. வடக்கு வீட்டு அகமதுகண்ணு முதலாளி என்பது அவனது பெயர். அவனது முதலாளித்துவம் அந்த கிராமத்தையே அடக்கி இருக்கிறது. கதை ஆரம்பிக்கும்போதே முதல் உலகப்போர் முடிவில் ஆரம்பிப்பதாக கூறி அதன் காலத்தை உணர்த்தாமல் உணர்த்தியிருப்பார் தோப்பில்.
ஊரில் கடல் மட்டுமல்ல, மள மளவென்று ஒடிவரும் ஆறும் ஒரு கதாபாத்திரம். அதன் வர்ணனைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.

ஊரை அதிகாரம் செலுத்தும் முதலாளி வடக்கு வீட்டு அகமதுகண்ணு, அவரது வேலையாள் அவுக்கார், சிறு வயதிலே விதவையாகி முதலாளி வீட்டிலே வாழும் முதலாளியின் தங்கை பாத்திமா, அவளது மகன் பரீது, பரீதுவின் மேல் உயிரையே வைத்திருக்கும் முதலாளியின் மகள் ஆயிஷா. மேலும் முதலாளியியை தனது வறுமையினுடையே எதிர்க்கும் மஹ்மூது. பள்ளிக்கூட வாத்தியாராக வெளியூரிலிருந்து வரும் மெக்யூப்கான், அவனது மனைவி நூர்ஜகான் , கள்ளிகோட்டையிலிருந்து ஊருக்கு வரும் மதப்போதகர் தங்ஙள், சுக்கு கடை உசேன்பிள்ளை, பள்ளிவாசலின் வேலைக்காரன் அசனார் லெப்பை என நாவலில் குறைந்த கதாபாத்திரங்கள் ஆனாலும் வலுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த கிராமம் பழைய மதச்சடங்குகளாலும் மூட நம்பிக்கைகளிலும் ஆற்றில் மூழ்கி கிடக்கும் கூலாங்கல்லைப் போன்று மூழ்கி கிடக்கிறது.  அக்கிராமத்திற்கு அரசாங்கம் அமைத்து தரும் பள்ளிக்கூடத்திற்கும் இடம் கொடுக்காமல் பள்ளியையே எதிர்க்கிறார்கள். காரணம் அது காபிர்களின் கூடமாம். காபிர்கள் என்றால் முஸ்லிம் அல்லாதோர். ஆனாலும் துணிந்து பள்ளிக்கு இடம் கொடுக்கும் எழை மஹ்மது நாவலில் உயர்ந்து நிற்கிறான்.  தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த  இடத்தையே பள்ளிக்கூடத்திற்கு கொடுத்துவிட்டு தனது மகள் திருமணம் எப்படியாவது நடக்கும் என்று அலையும் மஹ்மது நம்பிக்கையின் அடையாளம். தோப்பிலின் வர்ண்ணைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் .
"மேற்கூரையை முட்டி நிற்கும் மூத்த மகள் " என்ற ஒரே வார்த்தையிலே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்.




ஆசிரியராக வந்து அல்லல் படும் மெக்யூப்கான் வாகை சூட வா விமலின் கதாபாத்திரத்தின் மூலம்.  எந்த பிரச்சினை வந்தாலும், தனது சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டு செயல்படும் மெக்யூப்கான் மனதில் நிற்கிறார்.




பரீதுக்கும் ஆயிஷாவுக்கான காதல் தொடர்பான வரியில் இளமை கொட்டும். ஆயிஷாவுக்கு பெரிய செல்வந்தர் மாப்பிளை பார்த்து கட்டிகுடுத்துவிடுவார் முதலாளி. அங்கு மாப்பிளை வீட்டில் நடந்த பிரச்சினையால் அங்கிருந்து தனது வீட்டிலே வந்து இருந்துவிடுவாள் ஆயிஷா.. தனது காதல் பிரிந்து மட்டுமல்லாமல் இப்போது ஆயிஷாவுக்கு வாழாமல் இங்கிருக்கிறாளே என்ற கவலையில் தாடியில் அலைவான் பரீது.
ஒரு நாள் ஆயிஷா அறையில் தனித்திருக்க, பரீது ஆயிஷா அறைக்கு சென்று
" ஆயிஷா...!!" மெல்லிய குரலில்
"யாரு.." அதனினும் மெல்லிய குரலில்
"நாந்தான்.."
இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தை நோக்கினர்.
"மச்சான் தாடி எடுக்காதது ஏன்..? " ஆயிஷா மவுனத்தை உடைத்தாள்.
"நீ உன் மாப்ளே வீட்டுக்கு போகாது ஏன்..?"
"அது ஒரு கதை.."
"அந்த தொடர்ச்சியிலே உள்ள கதைதான் இது.."
என ஒவ்வொரு வசனத்திலும் காதலும் அதன் பிரிவின் வலியும் கொப்பளிக்கும்..  ஆயிஷா கதாபாத்திரத்தை நான் ஈரான் திரைப்பட நாயகி Golshifteh Farhani  யை உருவகம் செய்துக் கொண்டேன்.

மதப்போதகர் என்ற பெயரில் வந்து அவர் செய்யும் செயல்கள் இஸ்லாம் சமுதாயத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தில் அவர்கள் செய்யும் சேட்டைகளை அவிழ்த்து காட்டியிருப்பார்.
அகமது கண்ணு முதலாளியின் மிரட்லும், உருட்டலும் பதிவுசெய்யப்பட்ட அதேவேளையில் தன்னை விட்டு எல்லாரும் பிரிந்துசென்று பைத்தியமாகிவிடும் முதலாளியின்  வீழ்ச்சியும் எடுத்துகாட்டியிருப்பது நாவலின் இன்னொரு பக்க அடர்த்தி.

நாவலின் வட்டார மொழி இன்னொரு சிறப்பு. தமிழும் மலையாளமும்  கலந்த தமிழ். ஐஸ்கீரிமில் தேன் கலந்த மொழி.



இஸ்லாமிய சமூகம்  இறுகிப்போன  ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயைத் தமிழில் உடைத்தெறிந்த நாவல்.
மொத்தத்தில் நாவல் படித்தவுடன் ஒரு அழகிய ஈரான் திரைப்படம் பார்த்த திருப்தி.




தாமிரபரணி சிரிப்பு--சிறுகதை

2012-01-04

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
 
 
அன்று செல்வி அக்காவை பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை.
சூரியனும் நிலாவும் முத்தமிட்டுக் கொள்ளும் வேலையில்தான் அம்மா என்னை
மார்க்கெட்டுக்கு அனுப்பினாள். " இங்க இருக்கிற தெற்கு பஜார்ல எத்தனையோ
கடை இருக்கு, அத விட்டுட்டு அவ்வளவு தூரம் போகனுமா.." என்ற
கேள்வியோடுத்தான் சைக்கிளை வெளியே எடுத்து வைத்தேன். வெளி பம்புல தண்ணி
அடிச்சுக் கொண்டிருந்த பார்வதி அக்காவும் " எனக்கு ரெண்டு கூறு காய்கறி
வாங்கிட்டு வந்துருப்பா.." என்று உள்ளேப் போய் பையை எடுத்துக்கொண்டு
பையும் காசையும் நீட்டினாள். எதையும் முகத்தில் காட்ட முடியவில்லை.
சிரித்தப்படியே வாங்கிக்கொண்டேன். சைக்கிளை அழுத்த ஆரம்பித்தேன். பின்
வீலில் காற்று இல்லை. அப்படியே வீட்டில் ஓரம் கட்டிவிட்டு கூடையோடு நடக்க
ஆரம்பித்தேன். கூடையினும் பார்வதி அக்கா கொடுத்த மஞ்சள் பை மடங்கி
கிடந்தது. தெற்குப் பஜார் வரை வந்தேன். கோபால்சாமி கோவில் வழியாக
செல்லாமல் ஆயிரத்தம்மன் கோவில் நடக்க ஆரம்பித்தேன். அதற்கு ஒரு காரணம்
இருந்தது. சுந்தர்ராஜன் டாக்டர் வீட்டு முக்கு தெருவுல ஜெயந்தி வீடு
இருக்கு. ஒரு நப்பாசைக்கு அவள் அங்கு நிற்கமாட்டாளா.! அவள் பெயர் கூட
ஜெயந்திதானா என்று கூட தெரியாது. காண்வெண்ட் ஸ்கூலில் படிக்கிறாள்.
தோழிகள் படை சூழ எங்கள் தெரு வழியாத்தன் போவாள், வருவாள். அடிக்கடி ஒற்றை
கண்ணால் பார்ப்பாள். அவ்வளவுதான் அறிமுகம். அவளின் தரிசனத்திற்காகவே
காலையும், மாலையும் வாசலில் நிற்பேன். தலை குனிந்துதான் போவாள். ஜெயந்தி
வீட்டில் "இங்கு இட்லி, தோசை மாவு கிடைக்கும்" என்று சிலேட்டில்
சாக்பீஸில் எழுதி தொங்க விட்டிருந்தது. கண்டிப்பா அது அவளுடைய
கையெழுத்துதான்.
வயசுப் பொண்ணுக்கென்று உருவான கையெழுத்து..!! மார்க்கெட் தெருவில்
மனிதர்களுடையே மாடுகளும் நடந்துப் போயின. ஜவஹர் மைதானத்தில் ஏதோ
மீட்டிங்க வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு
சின்னப்பையன் கீழே போட்ட வெங்காயத்தை பொறுக்கிக் கொண்டிருந்தான். சின்ன
வெங்காயமோ.. பெரிய வெங்காயமோ..

சின்ன வாசல் வழியா மார்க்கெட் உள்ளே வந்தேன். அப்பத்தான் செல்வி
அக்காவைப் பார்த்தேன். தேங்காய் கடையின் அருகே நிறைவடைந்த கவிதையின்
கடைசி ஆச்சர்யக்குறிப் போல் நின்றுக் கொண்டிருந்தாள். பார்த்தவுடன்
சந்தோசத்தைவிட பயம்தான் வந்தது. இவ்வளவு நாள் என்னை ஏன் பார்க்க
வரவேவில்லை.. என்று கேட்பாள், திட்டுவாள், அப்புறம் மறந்துவிட்டு
சிரிப்பாள். வாங்கிட்டு நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னாலே சென்றேன்.
எதிர்த்தாப்புல வருகிறவர்களெல்லாம் கூட ஒருமாதிரி பார்த்துட்டுப்
போனார்கள். தன் மேல் எதோ நிழல் படருவதாக அவள் தோல் உணர
திரும்பிப்பார்த்தாள். என்னைப்பார்த்துட்டு புருவத்தை உயர்த்தினாள். அது
கரு வில்லாக வளைந்தது.
"எப்படிடா இருக்க பரணி, ஆளே மாறிட்ட.. மறந்துட்ட.. பெரிய ஆளாயிட்ட.. "
என்று எல்லா வார்த்தையும் ஒரு சேர கேட்டாள். இப்போதுதான் சரியா என்
பார்வை அவள் முகத்தில் படும்படி நின்றாள். தலைமுடியின் நெற்றிப்
பார்டரில் ஒரு பொட்டு இருந்தது. என்ன நினைத்தாளோ புடவை மடிப்பை சரி
செய்துக்கொண்டாள்.
"என்னடா.. ஒன்னும் சொல்ல மாட்டுக்க.." என்று நெட்டினாள்.
"ஆங்க்.. தெரியும்.. நீ திட்டுவேன்னு.. அதான் பயந்துட்டு
வாரேன்..அப்புறம் எப்படி இருக்க.." என்று சொல்லிக்கொண்டே உருளைகிழங்கு
கூறு எடுக்க ஆரம்பித்தேன்.
அக்கா கொஞ்சம் மெழுகியதுப் போல இருந்தாள். முதன்முதலில் பார்த்த அக்கா
மாதிரி இல்லை. இன்றும் ஞாபகம் இருக்கு, அக்கா முதன்முதலில் எந்த
தோற்றத்தில் வந்தாள் என்று.
நான் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அக்காவுடைய அம்மாவும்
அக்காவும் காம்பவுண்டுக்கு வந்தார்கள்.
"தம்பி, இங்க வீடு காலியா இருக்காமே.. " என்று என்னைப்
பார்த்துக்கேட்டனர். நான் எங்க வீட்டைக்காட்டி அம்மாட்ட கேளுங்கன்னு
சொல்லிட்டு வெளியே போயிட்டேன். உள்ளே வரும்போது காலியாக கிடந்த வீட்டை
அம்மா காட்டிக்கொண்டிருந்தாள். அக்காவுக்கு வீடு எப்படியோ பிடித்துப்
போனது. அந்த இடத்திலே அட்வான்ஸ் கொடுத்தனர். நாளைக்கு வருவதாக
சொல்லிவிட்டு சென்றனர். சொன்ன மாதிரி வந்தார்கள். சாமான்கள் எதும்
அதிகமாக இல்லை. தள்ளுவண்டியிலே தள்ளிட்டு வந்துவிட்டனர். எடுத்து
வைக்கும் போது அம்மா என்னை அவளுக்கு கூட மாட வேலை செய்யச்சொன்னாள்.

அவங்க கூட சேர்ந்து நானும் வேலை செய்ய ஆரம்பித்தேன்.  அக்கா எடுத்தவுடனே
எப்.எம் ரேடியாவை ஒட விட்டாள். அவளுக்கு அது இல்லாமல் இருக்க முடியாதுப்
போல. அடுத்த அடுத்த  நாட்களில் ஸ்கூல் போகும் போது சிரிப்பாள். அந்த
சிரிப்பு அவள் முகத்தில் ஒட்டி வைத்ததுப் போல இருக்கும்.  அவள் என்னிடம்
என் பேரக் கேட்டது கூட கிடையாது.
ஒரு நாள்
 " தம்பி.. உன் பேரு என்ன..?" என்றாள்.
 " பரணி.. உங்க பேருக்கா..?"
"செல்வி.. நீ அடிக்கடி சீனி வீட்டுக்கு அடிக்கடி  வருவல்ல.. உன்ன அங்க
நான் பார்த்திருக்கேன்.."
"ஆமா.. ஆமா.. என் ப்ரெண்டுதான்... நீங்க அங்கத்தான் இருந்தீங்களா..?
"ஆமாபா..பக்கத்து காம்பவுண்டுலதான் குடி இருந்தோம்.."  அந்த உரையாடல்களை
முற்றுப் புள்ளி வைக்கிறமாதிரி தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு "சரி
பரணி.. நான் கிளம்புறேன்.." என்று கிளம்பினாள்.
நைட் அம்மாத்தான் சொல்லிக்கொண்டிருந்தாள. செல்வி அக்காவுடைய அப்பா
கோவில்பட்டியில வேலை பார்ப்பதாகவும். அக்காவுடைய அம்மா வீட்டு வேலை
பார்க்கிறதையும், அக்காவும் போஸ்ட் ஆபிஸ் தெருவுல உள்ள ஒரு ஜெராக்ஸ்
கடையில் வேலை பார்க்காங்கன்னு.. அன்றிலிருந்த அக்கா பிம்பம் ஒரு
பாவப்பட்டதாக என் மனதில் பதிந்தது.
அக்கா எப்போதும் கறுப்பு பாசி கழுத்தில் போட்டிருப்பாள். அடுத்தடுத்த
பேச்சுகளாலும், சிரிப்புகளாலும் நான் அக்காவுடன் நெருக்கமாகினேன். எங்க
வீட்டுக்குத்தான் டி.வி பார்க்க வருவாள். வந்தாலே ஒரே ரகளைத்தான் எதாவது
வம்பிழுத்துக்கொண்டிருப்பாள். அக்கா வேலை முடித்துவிட்டு ஏழு மணிக்குள்ள
வந்துருவாள். வந்ததும் ஒரு பாத்ரூமுக்கு போய் குளியலைப் போடுவாள்.
பாத்ரூமுக்கு மேல் டாப்பு கிடையாது. எங்களுக்கும் அந்த பாத்ரூமுதான்.
குளித்து முடித்துவிட்டு எங்க வீட்டுக்கு நுழையும் போதே குடிகுரா பவுடர்
வாசனை வீசும். பக்கத்து வீட்டு ராஜ ராம் அண்ணன் அக்காவை அடிக்கடி நோட்டம்
விடுவான்.
"இந்தப் பய அடிக்கடி முறைக்கிறான் பரணி..  கடை பக்கமும் அடிக்கடி
சுத்துதான்.. பார்க்கும் போது அப்படியே கண்ண புடுங்கனும்போல இருக்கு.."
வீட்டுத்திண்ணையில் என் பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள்.
அக்கா அடிக்கடி " நீ எங்கே.. நீ எங்கே..பூ வைக்க ஆள் எங்கே.. தாலி கட்ட
கழுத்து அறுக்குதே.. " என்று முணுமுணுப்பாள். என்னைக் கண்டது கப்சிப்
ஆயிருவாள். ஒரு நாள் பழைய போட்டா எடுத்துட்டு வந்தாள். மேரி சார்ஜண்ட்
ஸ்கூல் போட்டா. அதில் அக்கா சுடிதாரில் ஒல்லிக்குச்சியாக இருந்தாள்.
" இங்கையாக்கா... நீங்க படிச்சிங்க.."
"உனக்கு தெரியாதுல.. நாங்க முதல்ல வண்ணார்ப்பேட்டையில்தான் இருந்தோம்.
அங்க வச்சுதான் நான் பிறந்தேன்.. என் முழு என்ன தெரியுமா..?"
"தமிழ்செல்வியா.."
"அட போடா... என் பேரு தாமிர செல்வி.. எங்க அப்பா வச்சாரு.. நம்ம ஆறு ஞாபகமா..!!"
"அட நல்லா இருக்கே.. காப்பர் செல்வி.. சூப்பர் பேரு.. " என்று நான்
நக்கலடிக்க அவள் என் தலையில் கொட்டினாள்.

"ஆற்றுக்குலாம் அடிக்கடி போவியா... " என்றாள்.
"அம்மா அதுலாம் விடாது.. எப்பவாது..ப்ரெண்ட்ஸ் கூட திருட்டுத்தனமா போனாதான்..."
"இந்த வாரம் போமா..?"
"ஆங்.. போவோம்.. எப்ப..?"
"ஞாயிற்றுக்கிழமை..?"
"கண்டிப்பா.. அம்மாட்ட சொல்லிருங்க.."
ஞாயிற்றுக் கிழமையை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு வாளி
அழுக்குத்தூணியை எடுத்துக்கொண்டு வாய்க்கால்பாலம் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறி
வண்ணார்பேட்டைப் போய் இறங்கினோம். பேராச்சியம்மன் கோவில் போற வழியில
கேடிஸி பஸ் அடிக்கடி வந்துக்கொண்டிருந்தது. " இங்கத்தான் கேடிஸி டிப்போ
இருக்கு.. இங்க கொஞ்ச நாள் எங்க அப்பா டெம்ரவரியாக வேலை பார்த்தாரு.."
என்று நான் கேட்காமலே சொல்லிக்கொண்டு வந்தாள். அந்த வழியிலே பெரிய ஆல
மரம் ஒன்று இருந்தது.  பறவைகள் சத்தம் காதை கிழித்தது.  பேராச்சியம்மன்
கோவில் படித்துறைக்கு போகாமல், அதே வழியா நடந்து வட்டப்பாறைக்கு
கூட்டிட்டு வந்தாள். அவள் கையை பிடித்துக்கொண்டு வருவது வானவில்லின் கலரை
கையை விட்டு ஆட்டியதுப் போல் இருந்தது அந்த கணம்.
"பரணி நீ யாரு பின்னாடியும் சுற்றிதுயோ.. " என்று கேட்டு முடிப்பதற்குள்
ஒரு சகதியில் கால் வைத்துவிட்டேன்.
"பொறு பொறு.. ஆத்துல இறங்கி கழுவிக்கலாம்.."  என்றபடி ஆற்றுல கால் வைத்து
இறங்கினேன். வட்டப்பாறை ஆற்றுக்கு நடுவுல இருக்கும். கரையில் இருந்து
சட்டையை கையில் தூக்கிட்டு நடந்தேன். அவளும் சுடிதாரை நனைத்தப்படி
வந்தாள். மள மளவென்று வருகிற தண்ணில அப்பப்ப அமலையும் வந்தது.
வட்டப்பாறாய்க்கு தூணி துவைக்க ஆரம்பித்தாள். நான் பக்கத்தில்
உட்கார்ந்திருந்தேன். வெயில் முதுகில் சுள்ளுன்னு அடித்தது. பின்னாடி
திரும்பி ராம் முத்துராம் தியேட்டரின் கோபுரத்தை காண்பித்தாள்.
"சொல்லவே இல்லை.. நான் கேட்ட கேள்விக்கு..?"
"அப்படிலாம் இல்லை.." என்று வழிந்தேன்.
"பொய் சொல்லாத... உன்னையும் அந்த சீனிப் பையனும் அடிக்கடி கான்வெண்ட்
ஸ்கூலு பக்கம் பார்க்கிறதா ஒரு ஆளு சொன்னுச்சு.."
"ஒ.. அதுவா.. அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுற்றுறான்..அதான்.."
"அதான பார்த்தேன்.. எந்தம்பி நல்ல பையன்லாம்.. " என்று சோப்பு நூரையை
கண்ணத்தில் தடவினாள்.  நூரையைத்தேய்த்துக் கொண்டே ஆற்றில் இறங்கினேன்.
அக்கா என் சட்டைக்கும் சோப்பு போட்டாள். அந்த நுரையில் என்
மனக்கறையெல்லாம் போயிட்டு.
அக்கா கூட ஆற்றுக்கு போயிட்டு வந்ததை கொஞ்ச நாள் மறக்க முடியவில்லை.
இதுக்குள்ளே என் படிப்புக்கு அம்மா ரொம்ப இருக்கி பிடிக்க
ஆரம்பித்தார்கள். ஆறு மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும்.
வீட்டுக்குள் இருந்தால் டி.வி தான் பார்க்கத்தான் தோணும், மொட்டை
மாடியில் போய் படி என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.  அக்கா வந்து
குளிச்சிட்டு எங்க வீட்டுக்கு டி.வி பார்க்க வரும்போதுதான் வீட்டுக்குள்
வரவேண்டியதாயிருந்தது.
கடைக்கு போயிட்டு வந்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ராஜாராம் அண்ணன்
வந்துக்கொண்டிருந்தான்.
" என்னடே.. ஒரு அக்கா அக்கான்னு அலையுதே.. " என்றான். எனக்கு அவனுக்கு
திருப்பி பதில் சொல்ல விரும்பவில்லை.
"தெரியும் டா.. அவ குளிக்கும்போது.. நீ மேல நின்னு என்ன பண்ணுதன்னு..
எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா.." என்று சொல்லி முடிக்கவும்
 நான் அந்த இடத்தை விட்டு ஒடி வந்துவிட்டேன். மனசு குறுகுறுத்தது. மொட்டை
மாடிக்கு சென்று படிக்கத்தோணவில்லை. அம்மா சத்தம் போடவும் மாடிக்கு
சென்றேன். மனம் கட்டுகடங்காமல் குறுக்கும் நெருக்குமாக
ஒடிக்கொண்டிருந்தது. பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம். மாடியில் நின்று
எட்டிப்பார்க்க ஆசை வருகிறது. இருந்தாலும் ஏதோ தடுத்தது. ராஜாராம் அண்ணன்
சொன்னது வேற மனசுல கிடந்து ஆசையை கிளப்புது. கொஞ்சம் நடந்து விளிம்புக்கு
வந்தேன். எட்டிப்பார்த்தால் குளிக்கிறது தெரியும். நெஞ்சு திக்
திக்குன்னு அடிக்குது. வேர்த்து வேற கொட்டுது. தண்ணீர் உற்றுகிற சத்தம்
கேட்டுக்கொண்டிருக்கிறது. துணிந்து முடிவெடுத்து எட்டிப் பார்த்தேன்.
அக்கா அப்பத்தான் கொண்டியை கழற்றிவிட்டு வெளியே போறாள். ஒரு வினாடி
சப்பென்று ஆகிவிட்டது. ஆனால் மனம் அப்பாடா என்றது.
அடுத்த நாள் முதல் அக்காவைப் பார்க்க பயமாக இருந்தது. அவள் கண்ணில்
படாமல் வெளியே சென்றுவிடுவேன். தீடிரென்று நான் இப்படி ஆனது அக்காவுக்கு
ஒரு மாதிரி ஆகிவிட்டது. எங்க வீட்டுக்கு டி.வி பார்க்கவும் வரமாட்டாள்.
அக்கா கடைக்கு ஒரு நாள் ஜெராக்ஸ் எடுக்க போயிருந்தேன்.
" என்னடா.. ரொம்ப ஒவரா பண்ற.. என்னடா பிரச்சினை.." என்றாள் கவலையாக.
அவளது உருக்கம் என்னை உலுக்கியது.

"அப்படிலாம் இல்லக்கா.. " என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நேரம் அமைதியாக
இருந்தேன். உண்மையை சொல்லிவிடுவனோன்னு பயமாக இருந்தது.
" உஙக கூடவே இருக்கனும் போலவே தோணுது.. அந்த எண்ணத்தை மாற்றதுக்குத்தான்
இப்படி நடந்துக்கிட்டேன்.."
"அதுக்கென்னடா.. இரு.. என் கூடவே எப்போதும் இரு.. அப்புறம் ஒரு
முக்கியமான மேட்டர்.. " அதுக்குள் ஒரு கஸ்டமர் வர எழுந்துப் போனாள்.
திரும்பி வந்து,
" குற்றாலம் போயிருக்கியா..!"
"ம்ம்.. போயிருக்கேன்.."
"இந்த தடவை போவோமா...?"
" எப்போ..." ஆசை பீறிட்டது.
" சொல்லுறேன்.. எங்க ஒனர்தான் டூர் போடுறாரு.. கோபாலசாமிகோவில் தெரு,
தெற்குபஜார் எல்லாம் சேர்த்து இரண்டு பஸ் தேறும்.. எப்படி போலாமா.."
என்று கண் சிமிட்டினாள். அன்றிரவு வேலைக்கு போயிட்டு வவுசி கிரவுண்டுக்கு
போனோம். அங்கு பானி பூரி சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். ராமசாமி
கோவில் தெரு வழியா நடந்து வரும்போது நண்பன் சிவா கை காட்டினான்.
அக்காவுக்கு அவனை அறிமுகம் படுத்தினேன். இருவரும் சந்தோசமாக தெருக்களில்
நடந்து வந்துக்கொண்டிருந்தோம்.

****************************
என் நினைவுகளை கலைக்கிறது மாதிரி , அவள் போனை வைத்துவிட்டு என் பக்கம்
திரும்பினாள்.
"சாரிடா.. பரணி.. என் ப்ரண்டு குற்றாலத்தில் இருந்து கால் பண்ணினா..
அதான்... ரொம்ப நேரம் தனியா நடந்துட்ட.. சாரி.. வா.. இங்கத்தான்.. வீடு
போயிரலாம்" என்று அசோக் தியேட்டர் எதிர்த்த தெருவினுள் நடக்க
ஆரம்பித்தோம்.
பாதாளசாக்கடைக்காக தெருவெல்லாம் தோண்டிப்போட்டிருந்தனர். வீடுகளில் லைட்
போட ஆரம்பித்தனர்.  அவள் செல் மறுபடியும் ஒலிக்க  என்னைப்பார்த்து ஒரு
கெஞ்சலுடன் காலை அட்டெண்ட் பண்ணினாள்.
என் நினைவுகள் மறுபடியும் பின்னால் சென்றது.

*****************************


குற்றாலம் டூருக்கு போக அம்மாவுக்கு விருப்பமில்லை. அப்பாவும்
சம்மதிக்கவில்லை. அக்கா எவ்வளவோ பேசிப்பார்த்தும் முடியவில்லை. கிளம்புற
நாள் அன்றைக்கு வீட்டுக்கு வந்தாள்.
"பரணியை டூருக்குத்தான் அனுப்புல.. எங்கூட கோபாலசாமி கோவில் வரைக்காவது
அனுப்புங்க.. பஸ் அங்கத்தான் ஏறனும்.. " என்று அம்மாவிடம் கேட்டுவிட்டு
கூட்டிட்டுப் போனாள்.. அக்கா வீட்டில் சண்டை போட்டுருப்பா போல கொஞ்சம்
அழுத மாதிரி இருந்தாள்.
அவங்க அம்மாவும் தான்.
பஸ்ஸில் ஏறி சீட்டில் பையை வைத்தாள். கீழிறங்கி
" பரணி.. நீ இனிமேல் என்னை பார்க்க மாட்ட.. " குரல் தழுதழுத்தது.
"எதுக்குகா.." என்றேன் பதட்டமாக..
"நானும் எங்க ஒனரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. அதுக்குத்தான் இந்த
குற்றால டூரு.. நீ இருந்தா நல்லா இருக்கும்னு நினைத்தேன்.. அது முடியாமல்
போயிடுச்சு.."
அவள் சொல்ல சொல்ல நான் வாயடைத்து நின்றேன்.. பஸ் புறப்பட தயாராக அக்கா
ஒனர் கடைசியில் வந்தார்.
அந்த அவசரத்திலும்
"இதான் எந்தம்பி.. பரணி.." என்று அறிமுகப்படுத்தினாள்.  அவரு என் தலையில்
கைவைத்து "மாப்ளே.. பார்க்கலாம்.. வா செல்வி பஸ் கிளம்புது.." என்று
இருவரும் ஏறிக்கொண்டனர். டூர் பஸ் இரண்டும் கிளம்ப அந்த இடம்
வெறுமையானது. அக்காவும் இல்லாமல் என் மனசும் வெறுமையாக இருந்தது.
எப்போதும்  கோபாலசாமி கோவிலில் இருந்து பார்த்தால் உச்சினிமகாளி அம்மன்
கோவில் தெரியும். அன்று எனக்கு அது மங்கலாக இருந்தது. சுய நனைவற்று
நடந்து வந்தேன். ஒரு வண்டி குறுக்க வந்து மோதுகிற மாதிரி போனது.

***************

"டேய் பார்த்துடா.. இதான் வீடு.. அதுக்குள்ள வண்டி வருவதுகூட தெரியாமல்
என்ன யோசனை.. வா.. " என்று அவள் வீட்டுக்கு அழைத்து சென்று சேரில் உட்கார
வைத்தாள்.  தண்ணி வேணும் என்று சைகையில் காட்ட கொண்டு வ்ந்துக்
கொடுத்தாள்.
"அம்மா, அப்பா எப்படி இருக்காங்க..."
"ம்ம்.. நல்லா இருக்காங்க.." என்றேன்.
அந்த தனிமையில் அக்காவுடன் பேசுக்கொண்டிருப்பது எனக்கு என்ன்மோ மாதிரி
இருந்தது. மறுபடியும் அந்த மொட்டை மாடி, பாத்ரூம் ஞாபகம் எல்லாம் வந்தது.
அங்கிருந்து போயிரலாம் என்று முடிவெடுத்து
"பாத்ரூம் எங்க.." என்று வழி கேட்டு சென்று வந்தேன். ஒரு திருப்தியா இருந்தது.
:நான் கிளம்புறேன்.."
"எதுக்குடா. அதுக்குல்ல.."
"இருக்கட்டும்.. பரவாயில்லை.. இங்கத்தான் இருக்க் போற.. அடிக்கடி
வாரேன்.. மறுபடியும் குற்றாலம், பாபநாசம்னு போக மாட்டல்ல.." என்றபடி
வாசலில் இறங்கினேன்.அவள் பல் ஈறு தெரிய சிரித்தாள். நான் திரும்பி
சிரித்தப்படி நடக்க ஆரம்பித்தேன். அக்காவுடைய வீட்டின் பாத்ரூமில் மேல்
டாப்பு இருந்தது. இதை நினைகும் போது மறுபடியும் சிரிப்பு வந்தது.
திரும்பிப்பார்த்தேன்.
வாசலில் நின்று அந்த தாமிரம் சிரித்தப்படியே ஒளிர்ந்துக் கொண்டிந்தது...!!


நன்றிகளுடன்
ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி.