யௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்

2013-03-08

| | |


யௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்



**





மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. குறிப்பாக சாகித்ய அகாடமி பதிப்பகமும், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடுகளை ஒரளவு வாசித்திருக்கிறேன். வாசிப்பின் முதற்படியில் சுழியிடும் போது  மொழிபெய்ர்ப்பு பக்கமே  சென்றதில்லை. அதில் ஒர் அந்நிய தன்மை இருப்பதாக எனக்குப்பட்டது. பின்னர் வாசிக்கும் போதை அதிகமானதும் எல்லாவற்றையும் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் முதன்முதலின் வாசித்த மொழிபெயர்ப்பு செம்மீன் நாவல். சுந்தர ராமசாமி மொழியாக்கத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். மனம் மகிழ்ந்தேன். பின்னர்தான் மொழிபெய்ர்ப்பு நாவல்/சிறுகதைகளிலும் அடர்த்தி இருக்கிறது என்ற உண்மை உரைத்தது. அன்று முதல் பல மொழிபெயர்ப்புகளை கடந்து வந்துவிட்டேன். தற்பொழுது குளச்சல் மு.யூசப் தமிழ் மொழிப்படுத்திய "யௌவனத்தின் கடல்" என்ற மலையாள சிறுகதை தொகுப்பு வாசிக்க நேர்ந்தது. மலையாள இலக்கியம் எப்பொழுதும் காட்சி வகைப்படுத்துதலிலும் அகம் சார்ந்த உரையாடல்களிலும் வாசகனை சொக்க வைக்கும்.  யௌவனத்தின் கடல் தொகுப்பும் மிக மெல்லிய புழுக்கத்தை கிளப்பி விட்டது. பெரும் மழைக்கு முன்னால் வருவதுப் போல்.
தொகுப்பில் மலையாள எழுத்தாளர்களின் 22 சிறுகதை அடங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு வகை என்று எடுத்துக்கொண்டாலும், வாசிப்பின் பின் இவை அனைத்தும்  மனதை வெற்றிடமாக்கியது என்று கொள்ளலாம். கதைகள் ஒவ்வொன்றும் பல சரடுகளையும் அடுக்குகளையும் தன்னுள் கொண்டு கதையின் நீட்சியை அடுக்கிக்கொண்டே செல்கிறது.

**

பாபு குழிமற்றம் எழுதிய " கருத்த மருவில் இரண்டு ரோமங்களுடைய யுவதி " என்ற கதையில் பெண் மீதான ஆணின் குரூரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் என்பவள் ஆணிடம் தோற்றாலும் பெண்தான் அந்தத்தில் வெற்றி கொள்கிறாள். மெல்வின் எழுதிய மொபிடிக்கையும் பாப்பியோன் எழுதியதை வாசிக்கும் ஒர் பெண்ணை எதார்த்த சந்திப்பில் பழகியபின்  கட்டிலில் வீழ்த்தும் ஆணின் மனம் எப்பொழுதும் அவளை தனக்கு கீழானவள் என்ற மனப்பாங்குடையே அவளிடம் போகிக்கிறான். அவளது தாடையின் மருவில் உள்ள ரோமங்களை பிடிக்கவில்லை என்று சொல்லும் அவனை அலட்சியம் செய்கிறாள். தன் தொடையை காண்பித்து அதில் இருக்கும் வடுக்களை காண்பித்து இது உனக்கு பிடிக்குமே என்கிறாள். அந்த காயங்களுக்கு பின்பு ஒரு கதை இருக்கிறது என்று அந்தக்கதையையும் சொல்ல ஆரம்பிக்கிறாள். கங்கையின் உற்பத்தி மூலத்தை தேடி தனியாக சுற்றியலையும்போது கோமுக் பயணத்தில் கட்வாள் கிராமத்தில் காட்வாளிவாசி அவளை முதுகில் ஏற்றி மலை உச்சியில் கொண்டு விடுகிறான். பயணம் முடிந்து இறங்கி வரும்பொழுது உடற் சூடேறி இருந்த கட்வாளி பனிக்கட்டியாயிருந்த இவளை அணைத்து அக்னி கோளமாக மாற்றுகிறான். அவன் பிடிக்கும் கஞ்சா பீடியைக்கொண்டு வைத்த சூடுதான் இது என்று கதையை நிறுத்துகிறாள். இவனால் தாங்க முடியவில்லை. அதுவும் உற்பத்தி மூலத்தை தேடி அலைபவள் இவள். கட்வாளியை பலசாலி என்று உபயோக்கிறாள் என்ற பொறாமையால் அவள் மீது தீவிரமாக இயங்குகிறான். அடுத்த நாள் காலையில் ஒரு குறிப்பு வைத்துவிட்டு செல்கிறாள். எனக்கு வேலை இருக்கிறது. உன் பர்ஸில் அதிகம் பணம் இல்லை என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் செலவுக்கு வைத்துள்ளேன். தயவு செய்து ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா..? என்று. அவன் கால் மடக்கி உட்கார்ந்து அவளால் வீழ்த்தப்பட்டதை உணரத்தொடங்குகிறான். உன் பெயர் என்ற உரையாடலில் உனக்கு பிடித்த எந்தப்பெயரில் வேண்டுமானாலும் அழைத்துகொள் என்கிறாள். ஆக்ரா சந்திப்பின் பின் அவளின் அக உலகத்தையும் அவளது அகத்தை ஏற்க மறுக்கும் ஆண் உலகத்தையும் இக்கதை மிக யதார்த்தமாக இட்டுச்செல்கிறது. மது சாப்பிடுகிறாய என்ற கேள்விக்கு, இல்லை நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். நான் நாகரீக வாழ்க்கைக்கு உட்பட்டாலும் அதன் சில அம்சங்கள் என்னிடமிருந்து விலகாமலிருக்கின்றன எனக்கூறும் வலுவான பெண்ணைப்படைத்திருக்கிறார் பாபு குழிமாற்றம்.
" அம்மாளு வம்மாவின் வீட்டுக்காரர் " என்ற சிறுகதையிலும் தன் கணவர் இறந்துப்போனாலும் அவர் இருப்பதாக ஊரை நம்ப வைத்து வாழும் பெண்ணைப்படைத்திருக்கிறார் பாபு குழிமாற்றம்.

**
மதுபால் எழுதிய  " வெளிச்சம் நிழலுக்குத்தெரியும் " கதையில் ஒர் ஆண் விபச்சாரியின் மன பிம்மங்களையும் அதன் பின் செல்லும் வாழ்க்கையும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும். ராஜேஸ் அலெக்சாண்டர் என்னும் விபச்சாரன், ஃபாதர் மேத்யூசின் என்பவரின் மனைவி ஆக்னசின் அழைப்பை ஏற்று ஒர் இரவு செல்லுவதையும் அவள் இவன் மீது  மிகுந்த ஆசை வைத்திருந்தாலும் தான் ஒர் விபச்சாரன் தான் என்ற அகன்று நிற்கும் மனப்பான்மையுடன் மற்றொரு அழைப்பு வந்ததும் அவனது மனம் பதைபதைத்து மற்றொரு நிர்வாணத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறான். ஒர் விபச்சாரனுக்கு மன  நிறைவே அவளுடன் இருக்கும் பெண்ணின் குரலிருந்து வரும் பரிவில் நீ மட்டும்தான் சிறந்தவன் என்ற ஒற்றைச்சொல். இது போன்ற உரையாடல்களையும், விகாரமில்லாத விபச்சாரனின் உலகத்தை மிகச்சிறிய சிறுகதையில் தொகுத்திருக்கிறார் மதுபால்.
"ஜெபக்கூடத்தில் வியாகுலமாதா " என்ற கதையில் டிவைன் செண்டருக்கு இட்டு வரும் ஒர் சிறுமியின் பால்ய நாட்களின் அவளுக்கு நடந்த ஒர் துர்சம்பவத்தையும் அதன் பின் வாழ்க்கை மாறுவதையும் அவளை துன்புறுத்திய நான்கு பேரை பின்னர் எப்படி தன்னையறியாமல் கண்டடைகிறாள் என்பதையும் இக்கதையில் தொகுத்திருக்கிறார் மதுபால். வன்கொடுமையின் மெல்லிய அதிர்ச்சியை தாங்காத ஃபிலோமினா புத்தி சுவாதினம் இல்லாமல் ஆகிறாள். டிவைன் செண்டருக்கு வரும் வழியில் வரும் ஆட்டோக்காரனும் , டிவைன் செண்டரில் உள்ள ஃபாதரும் " எங்கே பார்த்தேன் கர்த்தாவே " என்று முழிக்கிறார்கள். நம்பிக்கையின் பெயரால் அதே டிவைன் செண்டரில் விட்டுச்செல்லப்படுகிறாள் ஃபாத்திமா. பெண் என்பவள் மீது நடத்தப்படும் வேட்டைகளையும் வேட்டை நடத்துப்பவனே பின்னால் பெண்களை காக்க வந்த ரட்சர்களாக காட்டிக்கொள்வதும் இவ்வேடிக்கை உலகத்தின் தொலி உறிந்த கதையாகும்.

**

இ.சந்தோஷ்குமாரின்  " கண் பார்வையற்ற மூன்று பேர் யானையை விவரிக்கிறார்கள் " என்ற கதையில் கண்பார்வையற்ற மூன்று பேரிடம் ஊடகச்செயல்பாட்டின் மீது மிகுந்த ஆர்வமுடைய  இளைஞன் ஒருவன் நேர்காணல் பண்ணுகிறான். அவனது நிலைப்பாட்டில் குருடர்கள் யானையைப்பார்த்ததுப் போல என்ற பழமொழியின் பின்னால் இருக்கும் குருடர்களைப்பற்றிய கேலி, கிண்டல்களை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே அவர்கள் மூன்று பேரிடமும் யானையைப்பற்றி உங்கள் மதிப்பீடு என்ற கேள்வியை முன்வைக்கிறான். சேகரன் என்பவர் முதலில் வாய்திறக்கிறார். அவர் சிறுவயதில் திருவிழாக்கு சென்றிருந்த போது ஒர் மதம் பிடித்த யானை அத்திருவிழாவை அலைக்கழிக்கிறது. எல்லாரும் ஒடிவிடுகிறார். இவர் கீழே விழுந்து மாட்டிக்கொள்கிறார். பெரும் சுறாவளியைப்போல் யானை பெரும் சத்தம் இடுகிறது. பூமி குழுங்கும் சத்தம் கேட்கிறது. சேகர் மேலும் சொல்கிறார்.
" என்னைப்பொறுத்தவரை யானையென்பது பெரியதோரு சலனம்தான். அதற்கென்று தனியொரு வடிவம் கிடையாது. அது நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சி, திடீரென்று நின்று போன வாத்ய கோசங்கள், கீழே விழுவது, தடுமாறி விலகியோடுபவர்கள். பயமுறுத்தும் நிசப்தத்தின் மீதான அந்தச் சத்தங்கள்.. யாருமில்லாமல் நான் விழுந்து கிடந்தபோது என்னைக்கடந்து சென்ற ஒரு உலகத்தின் பேரோசை.." என்று.

ரகுராம் என்பவர் யானை என் கனவில் வருமென்றும் அது எனக்கு எப்பொழுதும் பயத்தை உண்டாக்காது என்கிறார். வினாயகரை எனக்கு பிடிக்கும் என்கிறார்.
சந்திரன் என்பவர் யானையை நான் தொட்டிருக்கிறேன். கல் யானையை என்கிறார். கல் யானையின் மீது ஈடுபாட்டால் தன் தொடையால் யானையை பச்சை குத்தி வைத்திருக்கிறார் சந்திரன்.
ஒவ்வொருவரும் யானை பற்றி கருத்தை முன்வைத்ததைப்போல் அந்த இளைஞனிடமும் கேட்கிறார்கள். அவன் சொல்ல தெரியாமல் தவிக்கிறான். கருப்பாக இருக்கும். தந்தம் வெள்ளையாக இருக்கும். பஸ் மாதிரி பெருசா இருக்கும் என்று சமாளிக்கிறான்.  ஒரு விசயத்தை உள் மனதால் உணராத வரைக்கும் அவற்றை பெருசாக வெளிப்படுத்தமுடியாது. அந்த இளைஞனும் சமாளிக்கிறான். பார்வையில்லாதவர்கள் கூறிய யானை அனுபவத்தை விட நம்முள் பரவி இருக்கும் யானைப்  பற்றிய  அனுபவம் மிக குறைந்ததுதான் என்பது நிதர்சனமான உண்மை..!

**

சந்தோஷ் ஏச்சிகானம் எழுதிய " கொமல " என்ற கதை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தியில் வந்த "பீப்ளி லைவ்" என்ற திரைப்படத்தின் கதையை ஒத்திருந்தது. திரைப்படம் வருவதற்கு முன்பாகவே இக்கதை வந்திருக்கிறது. வங்கியில் தன் நண்பன் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்திடுகிறார் விசுவன் என்பவர். நண்பர் கடனை கட்ட தவறியதால்  விசுவனது வீட்டை ஜப்தி பண்ணுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறது உள்ளூர் கூட்டுறவு வங்கி. இதனால் மனமுடைந்த விசுவன் ஆக்ஸ்ட் பதினைந்தாம் தேதி குடும்பத்துடன் தற்கொலை பண்ணப்போவதாக வீட்டு முன்னால் எழுதி வைத்து ஊடக கவனத்தை ஈர்க்கிறார். தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கையிலும் விசுவனது தற்கொலை முடிவு பற்றி கடும் விவாதம் நடைபெறுகிறது. விமர்சகர்களும் சமூகப் பொறுப்பில் இருப்பவர்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவர் தனது கோணத்தில் தற்கொலையைப்பற்றி பேசுகிறார். வழக்கறிஞர்கள் தற்கொலைக்கு முயற்ச்சிப்பது குற்றமாகும் என்கின்றனர். தற்கொலையைப்பற்றி தொலைக்காட்சி விவாதத்தின் போது ஒருவர் சொன்ன மெக்சிகன் நாவலில் வரும் கொமல என்னும் கிராமம்  தற்கொலைகளால் நிரம்பியிருக்கிறது என்கிறார். இதைக்கேட்ட விசுவன் வாசக சாலைக்கு வந்து ' பெட்ரோபராமோ' என்னும் அந்த நாவலை இரவல் வாங்கிச்சென்று ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் எல்லாரும் உறங்கிய பிறகு  வாசிக்க தொடங்குகிறான். ப்ரேசியாதோ எனும் இளைஞன் பெட்ரோபராமோ என்னும் தந்தையைத்தேடி கொமால கிராமத்திற்கு வருகிறான். வறண்ட கிராமம் முழுவதும் இறந்தவர்களின் சத்தம் எதிரொலிக்கிறது. தேடி வந்தவனும் இறக்கிறான். நாவலின் ஒரு வரி விசுவனை தாக்குகிறது. " இங்கே எதுவுமில்லை, எங்கு பார்த்தாலும் வீச்சமடிக்கும் அந்த கெட்ட, புளித்த நாற்றத்தை தவிர. இது ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தக் கிராமம்."
வாசித்து முடித்த விசுவன் ஒருகணம் திகைக்கிறான். இறப்பு பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான். மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இனிய காலங்களை நினைக்கிறான். மனம் தெளிவு பெறுகிறது. நல்ல புத்தகம் அதைத்தான் செய்யும். ஒடிப்போன தன் நண்பனை தேடி செல்கிறான்.  இரண்டாம் நாள் முடிவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒர் விபத்து நடைபெறுகிறது. அடிப்பட்டவன் ஊளையிடுகிறான். விசுவன் அவனை ஒடிச்சென்று அரவணைத்து மருத்துவமணைக்கு கொண்டுச்செல்ல வாகனங்களை தேடுகிறான். எவரும் முன்வருவதில்லை.  ஒருவன் முன்வந்து ஏற்றிக்கொண்டு விரைந்து செல்ல முயற்சிக்கிறான். மனசாட்சியில்லாத இம்மக்களை பார்க்கும்போது அவனுக்கு பின்னரவில் படித்த கொமல கிராமம்  ஞாபகம் வருகிறது. அடிப்பட்டவன் தண்ணீர் தண்ணீர் என்று பிதற்றுகிறான். டிரைவர் வெற்று பாட்டில்களை காட்டுகிறான். மரங்களடர்ந்த காட்டுப்பாதையில் வண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. எங்கோ சிறு நீரோடை உயிர் போய்க்கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்காக சென்றுக்கொண்டிருக்கிறது. விசுவன் நீரைப்பிடித்து இளைஞனின் உதட்டில் ஒத்துகிறான். மார்பில் தெளிக்கிறான். அவன் இறக்கிறான். கண் முன்னால் இறப்பைப் பார்த்து திகைக்கிறான். விசுவன் யோசிக்கிறான். "தன்னைபோலவே இவனும் எங்கெல்லாமோ சஞ்சரித்தான்.யாரிடமெல்லாமோ பேசினான். போட்டியிட்டான். தோற்றிருக்கிறான், அழுதிருக்கிறான், வெற்றியும் மகிழ்ச்சியுமடைந்திருக்கிறான். நாமளும் இந்த இரண்டு சொட்டு தண்ணீரைப்போல் யாருடைய கருணை நம்மில் படாதா என்றுதான் இந்த தற்கொலை நாடகமெல்லாம் நடத்தியிருக்கிறோம்."  அவனது தற்கொலைப்பலகை அவனுக்கே அபத்தமாக தெரிகிறது. சீக்கிரம் எடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நடக்க ஆரம்பிக்கிறான்.
மனித மனமும் எதாவது கருணைக்காகவும், வாஞ்சைவார்த்தைக்காகவும் அலைந்துக்கொண்டிருக்கிறது. அது தடை படும் இடத்தில்தான் பாவங்கள் தோன்றுகிறது. எல்லாருமே பாவத்தையும் ஒரு கையிலும் நன்மைகளையும் இன்னொன்றிலும்தான் வைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். எதன் எடை கூடுவதைப்பொறுத்தே அவனது கதாபாத்திரங்கள் இச்சமூகத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மனித நேயம் என்ற ஒற்றை வார்த்தை பின்னால் இருந்து  அழகாக விவரிக்கப்பட்ட மிகச்சிறந்த சிறுகதை இது.



" புத்தகங்கள் உலகம் " என்ற சிறுகதையில் தேர்ந்தெடுத்த வாசகனின் இறப்பிற்க்கு பின்பு அவனது உடலைக் காணாமல் அவனது நண்பர்கள் தேடுகிறார்கள். அந்த உடலை எடுத்த சென்றது யார் என்று அறியும் போது  ஆளேயே தூக்கிப்போட்டது போன்ற பதற்றத்தை உள்வாங்குகிறார்கள். தூக்கிச்சென்றது யாருமில்லை. ஃபியதோர் மிகெய்லோவிச் தஸ்தாயேவ்ஸ்கி.
மிகுந்த கற்பனையுடன் புனைந்துள்ளார் சந்தோஷ் ஏச்சிகானம்.

**

கே.வி.அனூபு எழுதிய  " உருவகம் " கதையில் தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு தலை வேறு உடல் வேறு என்று கிடக்கும் பிணத்தை இரவில் காக்கும் பொறுப்பில் இரு போலீஸ்காரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த முண்டத்தின் நிர்வாணத்தை ஒருவன் ரசிக்கிறான். இன்னொருவனுக்கு அந்த நிர்வாணத்தின் பின்னாலிருந்து அவளுக்காக அனுதாபம் படுகிறான். இவனின் பால்யகாலத்தில் முதல் நிர்வாணத்தை பார்த்த கதை மிக வேகமாக விவரிக்கப்படுகிறது. உள்ளூர் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கடல் கன்னி வேடமிட்ட ஒருத்தியை பார்க்க ஆசைப்பட்டு கூடாரத்துக்குள் ஏறி குதித்து பார்த்தப்பொழுது அந்த கடல் கன்னி வேடமிட்டவள் முழு நிர்வாணத்தில் இருக்கிறாள். மிகப்பயந்து மறுபடியும் கூடாரம் ஏறிகுதித்து வீடு திரும்புகிறான். மிகுந்த பயத்திலும் அந்த நிர்வாணக்காரியை நினைத்து பரிதாபப்படுகிறான். நினைவுகள் திரும்புகையில் அந்த முண்டத்தை நாய் ஒன்று கவ்வி செல்கிறது. உடலைத்தேடி நாய் பின்னால் ஒடுகிறான் என்று முடிகிறது கதை.  எளிதில் சீரணிக்கமுடியாத களத்தை பிடித்து வார்த்தை விவரணங்களால் விவரித்திருப்பார் கே.வி. அனூபு. எந்த அளவுக்கு நிர்வாணம் போதை தருகிறதோ, அந்த அளவுக்கு பயத்தையும் அளிக்கும்..!!

**


வினு ஆப்ரஹம் எழுதிய  " குருவிளைசார் உலகச்சந்தையில்" என்னும் சிறுகதை மிகுந்த நேர்த்தியுடன் எழுதப்பட்ட  திரைக்கதை வடிவத்துடன் ஒத்துப்போகிறது. குறும்படமாக எடுக்கலாம்.

இரண்டாம் பதிப்புக்கூட வராத புத்தகங்களை எழுதிய குருவிளை என்ற எழுத்தாளரைப்பற்றி கதை இது.
குருவிளை சாரை இலக்கிய உலகு மதிப்பதே இல்லை. அவர் மனைவி கூட நீங்கள் மலையாள மனோரமா இதழில் வருகிற கதையை மாதிரி ஏன் எழுவதில்லை என்று கேட்டு அவர் சங்கடப்படுத்திருக்கிறார். அவர் எழுதிய எல்லா புத்தகங்களையும் சொந்த செலவிட்டே வெளியீடுகிறார்.
என்றாவது ஒரு நாள் சிறந்த படைப்பை படைப்போம் என்ற நம்பிக்கையில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.
அந்த படைப்பின் கரு உதிக்கிறது. அந்த மல்லம்பள்ளி கிராமத்தின் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த எஸ்தர் என்ற பெண்மணி வாழ்க்கையை எழுத நினைக்கிறார். எஸ்தர் கல்கத்தாவிலிருந்து இந்த மலையாள தேச மண்ணுக்கு பழக்கப்படுவது என்ற பார்வையில் குருவிளை யோசிக்க யோசிக்க இதுதான் சிறந்த படைப்பு மனம் பூரிப்படைகிறது. எஸ்தர் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரின் கதைகளை கேட்டு அறிந்துக்கொள்கிறார். திரட்டப்பட்ட எல்லா தகவல்களை வைத்து எழுத ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினை வருகிறது. சர்வதேச புகழ் பெற்ற ஆங்கில நாவல் எழுதும் மலையாள பெண் எழுத்தாளர் குருவிளை சார் வீட்டுக்கு வந்து அந்த நாவலை எழுதப்போவதாகவும், எஸ்தர் பற்றி குறிப்புகளை எனக்கு கொடுங்கள் என்கிறாள். அதற்காக லட்சங்களை அள்ளி வீசுவதாகவும், நன்றியுடன் என்று குருவிளை சார் பெயரை போடுவதாக வாக்குறுதி கொடுக்கிறாள். எதற்கு அசையாத குருவிளை சார் அவர்களை அனுப்பிவிடுகிறார். மனம் லயித்த ஒரு நாளில் எஸ்தர் அவர்களின் வாழ்க்கையை வட்டார மொழியில் எழுதி முடிக்கிறார். இரண்டாம் பதிப்பு வராத தன் புத்தகங்களை எடுத்து உச்சி நுகர்கிறார். இந்த விவரணையுடன் கதை முடியும் போது மிகுந்த மன சஞ்சலத்தை ஏற்படுத்தியது. தான் எழுதிய எழுத்து யாராவது படித்துப்பார்த்துவிட்டு எதாவது சொல்வார்களா என்று அலையாத மனமே கிடையாது. குருவிளை சார் போல சிறந்த படைப்புகளை படைத்தாலும் படைப்பு அரசியல் ஒன்று இருக்கிறதே. அதில் பிழைத்தால்தான் நம்மை கொண்டு சேர்க்க முடியும். தீவிர இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் குழுமனப்பான்மையுடன் கூட்டம் சேர்த்துக்கொண்டு அலைந்தால்தான் தன்னை மெய்பிக்க முடியும். இல்லையெனில் குருவிளை சார் கதிதான் நமக்கும்...!!

பல கதைகள் இருந்தும் எனக்கு மிகப்பிடித்த கதைகளை மட்டுமே என்னால் எழுத முடிந்தது. தமிழிலும் இப்பலதரப்பட்ட கதைக்களங்களில் செறிவான சொல்லாடல்களின் சிறுகதைகள் வந்துக்கொண்டிருக்கின்றன. இம்மொழிபெய்ர்ப்பு சிறுகதைத்தொகுப்பு மிகுந்த வாசிப்பனுபவத்தை நிரப்பும் என்பதில் சந்தேகமில்லை.

யௌனவத்தின் கடல்
மலையாள மொழிப்பெயர்ப்பு சிறுகதை
தொகுப்பு : குளச்சல் மு.யூசப்
அம்ருதா பதிப்பகம்
விலை 180

-- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

சித்திரவீதிக்காரன் said...

யௌனவத்தின் கடல்' சிறுகதைத் தொகுப்பு குறித்த தங்கள் பதிவு அந்நூலை வாசிக்கத் தூண்டுகிறது. ஒவ்வொன்றையும் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்விற்கு நன்றி.

Post a Comment