உப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்

2013-01-22

| | |





சில நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு  தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க ஞாயங்களை முன்வைத்து அந் நாவலை பொருத்திப்பார்க்கும். மனதின் அலைபாயும் தருணங்களை அந் நாவல் பூர்த்தி செய்யுமானால் அவை நமக்கு சிறு சந்தோச உணர்வையும், நீங்காத துக்கத்தையும் நம்மில் பரவ விட்டு அவை சென்று விடும். 

அவை சென்ற பின்னும் நம்மில் அந்த கதைக்களத்தின் எச்சம் நீடித்து நம்மை துரத்திக்கொண்டிருக்கும்.
லஷ்மி சரவணகுமாரின்  " உப்பு நாய்கள் " நாவலை வாசித்து முடித்த தருணங்களில் இருந்து நீங்கா துயரம் என்னுள் எழுந்துக்கொண்டிருக்கிறது.

பெருநகர வாழ்வு என்பது எல்லாருக்கும் கிடைக்காத வாழ்வு. அந்நகரத்தில் பணம் இருக்கும். சந்தோசம் இருக்கும். சுதந்திரம் இருக்கும். நினைத்ததை முடிக்கும் வாய்ப்பை அது கொடுக்கும்.
இருந்தாலும் அந்த நகரத்துக்கென்று ஒரு அந்தரங்க வாழ்வு இருக்கும். சென்னையும் அவ்வாறே.
சென்னையின் இன்னொரு முகம். மிதமிஞ்சிய பயம்.

நாவல் பேசும் விசயம் என்னவெனில் எல்லாருக்கும் தெரிந்தும், எல்லாரும் பேச முற்படாத கதையை.
நாவலில் மதுரையிலிருந்து திருட்டு தொழில் செய்ய சென்னை வரும் செல்வி மற்றும் அவளின் குடும்பம்,  சிறுவயதிலிருந்தே தவறை தனது தொழிலாக செய்து பின்னால் சிறு பெண்பிள்ளைகளை கடத்தும் சம்பந்த், ராஜஸ்தானிலிருந்து தொழில் செய்ய வந்த மார்வாடி குடும்பத்தில் உள்ள ஷிவானி என்ற பெண்,
ஆந்திராவிலிருந்து சென்னையை அண்ணார்ந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை கட்ட வரும் சிறுமி ஆதம்பாவின் குடும்பம்.  இவர்களை மையாமாக வைத்தே கதையின் போக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

தாங்கள் கட்டிய மிகப்பெரிய கட்டிடம் செயல்பட ஆரம்பித்ததும் அதனை சுற்றி பார்க்க வரும் கட்டிடத்தொழிலாளிகளின் குழந்தைகளை உள்ளே பார்க்கத் தடை செய்கிறார்கள். நாங்கள் கட்டியது சார் என்று கண் கலங்க கூறும் சிறுமி ஆதம்பாவின் கனவுகளும் எண்ணங்களும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. கடப்பாவிலிருந்த வெக்கை,  சென்னையில் இல்லை என்றும்  சென்னையில் கடல் இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காகவே சென்னையை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.  கட்டிடத்தொழிலாளிகளின் கதை  தமிழ் நாவல்களில் இன்னும் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை. அதுவும் இடம்பெய்ர்ந்து வந்து பொருந்தாத நகரத்துடன் தன்னைப்பொருத்தி தன் வயிற்றுப்பிழப்பிற்காக அடிமைகளாகும் இத்தொழிலாளிகளைப் பற்றி நிறைய எழுத வேண்டும். இந்நாவல் அவர்களின் வலியை ஒரளவு பதிவு செய்கிறது.


நாவல் பின்புலமாக காமம் வழிந்தொடுகிறது. எல்லாருமே காமத்தின் முன்னால் மண்டியிட்டு மடிய முற்படுகின்றனர். தொழில்நுட்ப சாதனங்களின் வரவால் இப்பெருநகரத்தின் மீது காமம் பெரும் மழையாக பெய்துக்கொண்டிருக்கிறது. அதனை விட்டு விலகவும் முடியாமல், நனையவும் முடியாமல் இந் நாவலின் மாந்தர்கள் தவிக்கிறார்கள்.

திருடுவதும், வேசித்தொழில் பண்ணுவதும், கஞ்சா கடத்துவதும் தவறானத் தொழிலாக இச்சமூகம் போதித்து வருகிறது. ஆனால் இத்தொழிலை வேறு வழியில்லாமல் செய்பவர்களைப் பொறுத்தவரை இத்தொழிலே இவர்களை வாழவைக்கிறது. இவர்களை இந்த வழிக்கு விரட்டிவிட்டதும் இந்த சமூகமே.!

சென்னையின் இன்னொரு வாழ்க்கையையும், தொழில்நுட்பத்தின் காரணமாக பாலியல் வழித்தவறுதலையும், அறியாத இன்னும் சில வாழ்க்கையும் இந் நாவல் கண்டிப்பாக நம் மனதில் பதிவிடும் என்பது நிச்சயம்..!!

தடதடக்கும் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்றவுடன் இருளில் வெறுமையாக நீண்டு  கிடக்கும் தண்டவாளங்களின் தனிமை இந்நாவல்.

உப்பு நாய்கள்
லஷ்மி சரவணகுமார்
உயிர் எழுத்து பதிப்பகம்.

-- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

சித்திரவீதிக்காரன் said...

உப்பு நாய்கள் குறித்த தங்கள் பதிவு அருமை. கட்டிடத்தொழிலாளிகளின் வாழ்க்கை குறித்து திலகவதி அவர்கள் கல்மரம் என்றொரு நாவல் எழுதியிருக்கிறாரென்று நினைக்கிறேன்.

ஜெபா said...

அன்பு நண்பருக்கு

தற்பொழுதுதான் உங்களது கருத்துக்களைப்பார்த்தேன். மிக்க நன்றி. திலகவதி அவர்கள் எழுதிய அந்த நாவல் பற்றி நான் வாசித்ததில்லை. முயற்சிக்கிறேன்.. நன்றி..

Post a Comment