கர்ணனின் கவசம் நாவல்- வாசிப்பனுபவம்

2014-12-07

| | |

கர்ணனின் கவசம் என்ற 250 பக்க நாவலை ஒரே நாளில் படித்து முடித்தேன். அந்த அளவுக்கு வேகமான நடை, விறுவிறுப்பான கதை. தமிழில் வெளிவந்த சயின்ஸ் பிக்ஸ் நாவல்களின் எண்ணிக்கை மிக குறைவு. கர்ணனின் கவசம் சயின்ஸ் பிக்ஸன் என்ற  வரையறுக்குள் வருமா என்று தெரியவில்லை.ஆனால் முழுக்க முழுக்க பேண்டஸி கதை. தமிழகத்தின் ஆதிக்கால வரலாறு , பாரத நாட்டு பூர்விகம் என நமக்கு தெரிந்த கதைகளை ஆதாரமாக கொண்டுள்ளதால் கர்ணனின் கவசம் தனித்து நிற்கிறது.

மகாபாரத கதையில் வரும் கர்ணன் அற்புதமான கதாபாத்திரம். அவனை குருச்சேத்திரப் போரில் வீழ்த்துவதற்காக கிருஷ்ணனின் திருவிளையாடலால் கர்ணனின் கவசத்தை இந்திரன் ஒரு அந்தணன் வேடமணிந்து வந்து கர்ணனிடம் வாங்கிச் சென்றுவிடுவான்.
இதனாலும் மேலும் பல சூழ்ச்சிகளினாலும் போரில் உயிர் துறப்பான் கர்ணன் என்பது மகாபாரதக் கதை. ஆனால் நாவல் வேறு தளத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.

இந்திரன் அபகரித்த கவசம் எங்குள்ளது? கர்ணனின் உடல் எங்குள்ளது ? கர்ணனின் கவசத்தினில்தான் சூரியனை ஊடுருவும் தனிமம் உள்ளது என்று கவசத்தை தேட வரும் ஜெர்மனிகாரன், சீனாக்காரன், கவசத்தை பாதுகாக்கும் மகாபாரத கதாபாத்திரங்களான பாண்டவர்கள், மறுபடியும் போர் நடத்த தயாராக இருக்கும் கவுரவர்கள், சோழ மன்னன் ஆதித்ய கரிகாலன் என வரலாற்று நாயகர்களையும் நிகழ் கதைகளும் இணைத்து நாவல் படிக்க படிக்க சுவாஸ்யமாக இருக்கிறது.

மகாபாரத கதையும், பொன்னியின் செல்வன் நாவலும்,கொஞ்சம் தமிழக வரலாறும் தெரிந்தால் நாவலுடன் ரொம்ப ஒன்றிவிடலாம்.

நாவலில் எல்லாரும் வருகிறார்கள், எல்லா இடங்களும் வருகிறது. வியாசர் வருகிறார், கிருஷ்ணன், துரியோதனன்,சகுனி,குந்தி,திரளபதி, ஆதித்ய கரிகாலன், இந்திரன், பீஷ்மர் , நவகிரகங்கள்  மேலும் மதுரை கோவில், சிதம்பரம்,காஞ்சி கோவில்,தஞ்சை கோவில், சரஸ்வதி நதி, ஆதிச்சநல்லூர் , தூவாரகை, திரிசங்கு சொர்க்கம் , வைகுண்டம் போன்ற வரலாற்று இடங்களும் வருகிறது.
இதுமட்டும்தான என்று பார்த்தால் கணித சூத்திரங்கள், பிபனாசி எண்கள் தியரி, விட்டத்தின் சூத்திரம் மேலும் மேலும் இழுத்துக்கொண்டு செல்கிறது நாவல்.

குங்குமத்தில் தொடராக வந்து புத்தக வடிவம் பெற்றுள்ளது. இன்னும் கொஞ்சம் கவனமாக எடிட் செய்திருக்கலாம். கே.என்.சிவராமன் எல்லா தளத்திலும் ஆராய்ந்து நாவலை சிறப்பாக எழுதியுள்ளார்.

தமிழக சிற்பக்கலைகள், கோவில் தள வரலாறு , அறிவியலின் கூறுகள், பழமையான சாஸ்திரங்கள் என தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது நாவலில்.

நம் மண்ணுக்கும் வரலாறு இருக்கிறது, நம்மிடமும் கதைகள் கொட்டிக்கிடக்கிறது. இம்மாதிரியான முயற்சியின் வழியே நிறைய படைப்புகள் வெளி வரவேண்டும்.

கர்ணனின் கவசம்
கே.என்.சிவராமன்
சூரியன் பதிப்பகம்
விலை 200

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment