கர்ணனின் கவசம் நாவல்- வாசிப்பனுபவம்

2014-12-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

கர்ணனின் கவசம் என்ற 250 பக்க நாவலை ஒரே நாளில் படித்து முடித்தேன். அந்த அளவுக்கு வேகமான நடை, விறுவிறுப்பான கதை. தமிழில் வெளிவந்த சயின்ஸ் பிக்ஸ் நாவல்களின் எண்ணிக்கை மிக குறைவு. கர்ணனின் கவசம் சயின்ஸ் பிக்ஸன் என்ற  வரையறுக்குள் வருமா என்று தெரியவில்லை.ஆனால் முழுக்க முழுக்க பேண்டஸி கதை. தமிழகத்தின் ஆதிக்கால வரலாறு , பாரத நாட்டு பூர்விகம் என நமக்கு தெரிந்த கதைகளை ஆதாரமாக கொண்டுள்ளதால் கர்ணனின் கவசம் தனித்து நிற்கிறது.

மகாபாரத கதையில் வரும் கர்ணன் அற்புதமான கதாபாத்திரம். அவனை குருச்சேத்திரப் போரில் வீழ்த்துவதற்காக கிருஷ்ணனின் திருவிளையாடலால் கர்ணனின் கவசத்தை இந்திரன் ஒரு அந்தணன் வேடமணிந்து வந்து கர்ணனிடம் வாங்கிச் சென்றுவிடுவான்.
இதனாலும் மேலும் பல சூழ்ச்சிகளினாலும் போரில் உயிர் துறப்பான் கர்ணன் என்பது மகாபாரதக் கதை. ஆனால் நாவல் வேறு தளத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.

இந்திரன் அபகரித்த கவசம் எங்குள்ளது? கர்ணனின் உடல் எங்குள்ளது ? கர்ணனின் கவசத்தினில்தான் சூரியனை ஊடுருவும் தனிமம் உள்ளது என்று கவசத்தை தேட வரும் ஜெர்மனிகாரன், சீனாக்காரன், கவசத்தை பாதுகாக்கும் மகாபாரத கதாபாத்திரங்களான பாண்டவர்கள், மறுபடியும் போர் நடத்த தயாராக இருக்கும் கவுரவர்கள், சோழ மன்னன் ஆதித்ய கரிகாலன் என வரலாற்று நாயகர்களையும் நிகழ் கதைகளும் இணைத்து நாவல் படிக்க படிக்க சுவாஸ்யமாக இருக்கிறது.

மகாபாரத கதையும், பொன்னியின் செல்வன் நாவலும்,கொஞ்சம் தமிழக வரலாறும் தெரிந்தால் நாவலுடன் ரொம்ப ஒன்றிவிடலாம்.

நாவலில் எல்லாரும் வருகிறார்கள், எல்லா இடங்களும் வருகிறது. வியாசர் வருகிறார், கிருஷ்ணன், துரியோதனன்,சகுனி,குந்தி,திரளபதி, ஆதித்ய கரிகாலன், இந்திரன், பீஷ்மர் , நவகிரகங்கள்  மேலும் மதுரை கோவில், சிதம்பரம்,காஞ்சி கோவில்,தஞ்சை கோவில், சரஸ்வதி நதி, ஆதிச்சநல்லூர் , தூவாரகை, திரிசங்கு சொர்க்கம் , வைகுண்டம் போன்ற வரலாற்று இடங்களும் வருகிறது.
இதுமட்டும்தான என்று பார்த்தால் கணித சூத்திரங்கள், பிபனாசி எண்கள் தியரி, விட்டத்தின் சூத்திரம் மேலும் மேலும் இழுத்துக்கொண்டு செல்கிறது நாவல்.

குங்குமத்தில் தொடராக வந்து புத்தக வடிவம் பெற்றுள்ளது. இன்னும் கொஞ்சம் கவனமாக எடிட் செய்திருக்கலாம். கே.என்.சிவராமன் எல்லா தளத்திலும் ஆராய்ந்து நாவலை சிறப்பாக எழுதியுள்ளார்.

தமிழக சிற்பக்கலைகள், கோவில் தள வரலாறு , அறிவியலின் கூறுகள், பழமையான சாஸ்திரங்கள் என தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது நாவலில்.

நம் மண்ணுக்கும் வரலாறு இருக்கிறது, நம்மிடமும் கதைகள் கொட்டிக்கிடக்கிறது. இம்மாதிரியான முயற்சியின் வழியே நிறைய படைப்புகள் வெளி வரவேண்டும்.

கர்ணனின் கவசம்
கே.என்.சிவராமன்
சூரியன் பதிப்பகம்
விலை 200

மிளிர் கல்

2014-06-08

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


மிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை .
மிளிர் கல் :

கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள்
பிரஸ்யஸ் ஸ்டோன்ஸ் என்றழைக்கப்படும் மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்ற
ரத்தினக்கற்கள் விளையும் பூமி. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று
அவ்விளைநிலங்களை ஆக்கிரமித்து கற்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்து கற்களை
ஏற்றுமதி செய்ய திட்டமிடுகிறார்கள். இதற்காக பழங்கால வணிகப்பாதைகள் பற்றி
ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ரீகுமார் என்ற பேராசிரியரை அவருக்கே தெரியாமல்
இவ்வேலையில் ஈடுபடுத்துக்கிறது அந்நிறுவனம். வடமாநிலத்தில் வளர்ந்த
தமிழ்ப்பெண் முல்லை. தன் தந்தையின் மூலம் சங்ககால இலக்கியங்களை கற்றவள்.
சிலப்பதிகாரத்தின் கண்ணகி மேல் கொண்ட மிகுந்த ஆர்வம்
காரணமாக சிலப்பதிகார கதை நிகழ்ந்த இருப்பிடங்களை ஆவணப்படமாக்க
வேண்டும் என்ற முனைப்பில் இடதுசாரி இயக்க கொள்கையின் பிடிப்பில் அலையும் நவீன்
என்ற நண்பனுடன் பூம்புகார் வருகிறாள். அங்கு பேராசிரியருடன் ஒன்று
சேர்ந்து சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி நடந்த சாலையில் பயணம் செய்து
சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பூம்புகார் காண்டம்,
மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டத்தில் நிறைவு செய்வதுதான் கதை. அதிக
விறுவிறுப்புடன், சுவாரஸ்யம் குறையாமல் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன்
பதிவு செய்துள்ளார் முருகவேள். ஏற்கனவே எரியும் பனிகாடு நாவலை
தமிழ்ப்படுத்தியவர். மிளிர்கலில் சிலப்பதிகாரத்தை
எளிமைப்படுத்தியுள்ளார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர்
ஏற்றுவோர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரம்
உணர்த்தும் மூன்று அறநெறிகளாகும். இதன் அர்த்தத்தை மாணவன் ஆசிரியரிடம்
வினவுவதுப் போல் சந்தேகங்களை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக வினவ வைத்து
இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தம் தெரிவிப்பதாக நாவலில் பல
காட்சிகள் வரும். நாவலின் பலமான பகுதிகள் அவை. குறிப்பாக கோவலனும்
கண்ணகியும் சோழ நாட்டை விட்டு சென்றதும் மிகப்பெரிய வணிக குடும்பத்தில்
பிறந்த அவர்களைத்தேடி யாரும் வராததும், கண்ணகியை ஏன் சேர மன்னன்
தெய்வமாக்கினான் ? உண்மையில் சிலப்பதிகாரம் நம் நிலத்தில் நடந்ததா ? என்ற
வினாக்கள் இக்காப்பியத்தை படிக்கும் எல்லாருக்கும் ஏற்படும் ஐயங்கள்.
இதற்குப்பதில் நாவலில் இருக்கிறது. பதில் வெறும் ஒற்றை வார்த்தையாக
இல்லாமல் தனிக்கவனத்துடன் ஆராயப்பட்ட பதில்களாக இருக்கும்.

பூம்புகாரின் ஏழுநிலை மாடங்களையும் கரைபுரண்டு ஓடும் காவேரியையும்
எதிர்ப்பார்த்து வந்த முல்லைக்கும் தற்போது இருக்கும் பூம்புகாரின்
தற்கால நிலையைக் கண்டு கலங்கும் நேரத்தில் ' உண்மையான வரலாறு
வேண்டுமென்றால் மக்களிடம் கேள் ' என்று பேராசிரியரின் பதில் கள ஆய்வு
எவ்வளவு முக்கியம் என்று உணர்த்துவதாகும். பேராசிரியருக்கும்
முல்லைக்கும் உண்டான நிறைய உரையாடல்கள் நாவலின் உவப்பனதாகும். ஏன் சார்,
எதுக்கு சார், இப்படி இருந்திருக்கலாமோ என்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே
இருக்கும் முல்லை சீக்கிரம் நம் மனதில் இடம்பெற்றுவிடுகிறாள்.

கோவலன் என்ற பெயர் கோவலர்கள் என்ற இனத்தின் பெயராக இருக்கலாம். கொங்கு
நாட்டில் வாழ்ந்த ஆடு மேய்க்கும்
பழங்குடி இனத்தின் பெயர் கோவலர்கள் என்றும், அவர்கள்
சேரப்புமலைப்பகுதியில் வாழ்ந்ததாகவும் அந்தமலைதான் இப்போது காங்கேயம்
அருகில் உள்ள சிவன்மலை என்றும், பதிற்றுப்பத்தில் கூட கோவலர்கள் என்ற
சொல் இடம்பெற்றிருக்கிறதாகவும், கொற்றவை கோவிலில் கண்ணகியைப் பார்த்து
கொங்கர் செல்வி என்று எய்னர்களால் பாடப்படுகிறாள். கோவலன் கண்ணகி
மூதாதையர் ரத்தின வியாபாரம் காரணமாக சோழ நாட்டுக்கு
இடம்பெயர்ந்திருக்கலாம், உண்மையில் அவர்கள் கொங்கு நாட்டுப்பகுதியை
சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற ரீதியிலும் முருகவேள் ஆராய்ச்சி
நடத்தியுள்ளார்.

அவர்கள் பயணம்தான் எவ்வளவு சிறப்பானது. வடகரை காவேரி, உறையூர்,
நெடுங்குளம் சிறுமலை, மேலூர், மாங்குளம் சமணக்குன்றுகள், அழகர் மலை,
மதுரை மூதூர், கோவலன் பொட்டல், கம்பம் கண்ணகி கோவில், திருச்சுர்,
கொடுங்களூர் பகவதி கோவில் என நாவல் பல பிரதேசங்களின் பகுதிகளை தொட்டு
இட்டுச் செல்கிறது.

சமண இரவுத்தங்கலில் ஏற்படும் உரையாடல்களாக இருக்கட்டும் , மத வரலாறு,
இனவரையியல் பற்றிய பேச்சுகளாகட்டும், வணிக வரலாறு, இடதுசாரிக்கொள்கையின்
கருத்துக்கள், நிகழ்கால அரசியல் விம்ர்சனம், ராஜஸ்தான் கல்பட்டை
தீட்டுபவர்கள் பற்றி, உயிர்ப்பலிகள் பற்றி, அரவான் வழிபாடு,அடிமை
வரலாறுகள், ஆரிய திராவிட தோற்றம், சமண கழுவேற்றம், கோசோம்பி
கருத்துக்கள், தாய்தெய்வ வழிப்பாட்டு நம்பிக்கைகள், கொடுமணல் நாகரிகம்,
சங்ககால இலக்கியங்கள்
ர், கொடுங்களூர் கண்ணகி கோவில் வெளிச்சப்பாடுகள் என ஒட்டுமொத்த தர்க்க
கருத்துக்களின் வழியே நாவல் புதுபுது பரிமாணம் எடுத்து மிளிர்கல்லா
ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறது.

ஓர் படைப்பிலக்கியத்தின் வெற்றி எதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது
என்றால் வாசிப்பின் முடிவில் ஏற்படும் வெறுமையா? அல்லது அதன்பின்
உருவாகும் அக எழுச்சியா என்று சொல்லிவிட முடியாது. எந்தப்புள்ளியில்
படைப்பின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்று உறுதியிட்டு கூறமுடியாது.
படைப்பின் மீறல்களையும் தர்க்க ரீதியாக ஆராயவும், கதையின்
இருப்பிடங்களையும் கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் வாசகனை தேடத்தொடங்க
வைக்க வேண்டும். அந்த வகையில் இளங்கோவடிகள் வெற்றி பெற்றுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை ஒர் வாசகன் மனநிலையில் ஆராய்ந்து, கதை
நிகழ்ந்த தற்கால இருப்பிடங்களை தேடி அலைந்து, கண்ணகி ஏன் தெய்வமானாள் ?
என்ற ரீதியுலும் சிலப்பதிகாரம் என்ற படைப்பை விமர்சித்து சிறந்த படைப்பை
தந்துள்ளார் முருகவேள்.

-- ஜெபஸ்டின் ரொட்க்ஸ்.பி

மிளிர் கல்
இரா. முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
விலை 200