தெய்வம் என்பதோர் ---தொ.பரமசிவன்

2012-11-25

| | |





நாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது என்பதை வரலாறு ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் திரும்பிப் பார்த்தால் மிகுந்த ஆர்வமே மேலிடுகிறது.

நெல்லை மாவட்டத்துக்கு தொ.பரமசிவன், தூத்துக்குடிக்கு ஆ.சிவசுப்ரமணியன், குமரி மாவட்டத்துக்கு அ.கா. பெருமாள். இவர்கள் அனைவருமே வரலாறு என்பது அடித்தள மக்களிடமிருந்தும் அவர்களின் வாக்குகளின் மூலம் கட்டமைக்கப்படும் வரலாறே உண்மையான சனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள்.

தொ.பரமசிவன் அவர்களின் தெய்வம் என்பதோர் என்னும் நூலின் முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் கூறுகிறார்.
  "  எல்லாரும் புத்தகங்களிருந்தும் தத்துவங்களிருந்தும் வாதங்கள் வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் தொ.பரமசிவன் மட்டும் தமிழ் நாட்டுத்தெருக்களின் கோவில் வாசல்களிலும் பிரகாரங்களிலும் ஆற்றங்கரையிலும் கிணற்றடியிலும் சாவு வீட்டு முற்றத்திலும் நாட்டார் தெய்வப்பீடங்களின் முன் நின்று நம் தமிழ் மண்ணின் புழுதி படிந்த வார்த்தைகளின் பேசுகிறார் "

நம் சமூகத்தின் எச்சங்களையும், அதன் தரவுகளையும் ஆராயும் போது களப்பணி என்பது எவ்வளவு முக்கியம் என தொ.ப கட்டுரைகளை படிக்கும்போது உணரலாம்.

   " கோத்த பொய் வேதங்களும்- மதக்
        கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
     மூத்தவர் பொய் நடையும் -சில
        மூடர் தம்......................."
                                 --- பாரதி

வரலாறு என்பது மதக்கொலைகளும் அரசர்களின் கூத்துக்களால் ஆனது. வேதங்களில் பொய் வேதங்களும் உண்டு. மூத்த தலைமையினரில் பொய் நடைக்காரர்களும் இருப்பர் என்பது பாரதியின் கருத்தாகும்.

இப்பொழுதுள்ள சிவன் வழிபாடும் , வைணவ வழிபாடும் வேண்டுமென்றே தமிழகத்தின் கலந்த ஒன்றாகும். அரசர் எவ்வழி அவ்வழியே மக்கள் என்ற கூற்றுக்கிணர்ங்க அரசர்களை குறிவைத்து கலக்கப்பட்ட மதம் சைவம் ஆகும்.  கிறிஸ்தவமும், இஸ்லாமும் எப்படி மக்களை கவர்ந்ததோ அவ்வாறே பௌத்த, சமண, சைவ, வைணவ வழிப்பாடுகளும் தமிழகமெங்கும் பரவியது.( இதனை சமய அரசியல் நூலில் தொ.ப வும், கோபுரத்தாக்குதல் நூலில் ஆ.சிவசுப்பிரமணியமும் மேலும் ஆய்வுப்படுத்தி எழுதியுள்ளனர் )
அவ்வாறு இந்த வைதீக வழிபாடுகள் பரவும் பொழுது நம் தொல் வழிப்பாடுகளான தாய்த்தெய்வ சடங்குகளையும் வழிப்படுதல் முறைகளையும் ஒரளவுக்கு சிதைத்தது.

தொ.ப தனது முதல் கட்டுரையில் தாய்தெய்வ வழிப்பாட்டை பற்றி விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரியும், வார்த்தையும் நம்மை தீவிரமாக யோசிக்க வைக்கும்.



தமிழ் நாட்டில் 99% அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி அமர்ந்த்திருக்கிறது என்றும் அதன் காரணத்தையும் விளக்குகிறார்.  பழைய தமிழகம் எனபது கேரளத்தையும் சேர்த்து அமைந்தது. நம் மண்ணைச் சுற்றி மூன்று பக்கமும் கடலால் சூழ்ப்பட்டது. ஆபத்து என்று ஒன்று வந்தால் அது வடக்கு இருந்துதான் வரவேண்டும். தெய்வம் வடக்கு  திசை நோக்கி தன் மக்களை காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பது தொல்வரலாற்று உண்மை என்கிறார்.

பொதுவாக அம்மன் போன்ற தாய்தெய்வ வழிப்பாடுகளில் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினரே பூசாரியாக உள்ளனர். உலகம்மன், முத்தாரம்மன், மாசானி அம்மன், லோக நாயகி என வட்டாத்திற்கு வட்டாரம் தெய்வங்கள் மாறுபடும். இருந்தாலும் தாய்த்தெய்வத்திற்கு தனித்தன்மைகள் உண்டு. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், பெரிய பொட்டு, மிரட்டும் விழி. வழிப்பாட்டு முறையில் பொங்கலும், முளைப்பாரியும், சாமியாடலும், இரத்தப்பலியும் இவற்றின் தனிக்கூறுகளாகும்.

தமிழ் நாட்டில் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்களின் காலத்தில்தான் பக்தி இயக்கங்கள் என்னும் சைவ, வைணவ மதங்கள் பெருக ஆரம்பித்தன. 11ம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சமூகத்தின் பெருந்திரள் மக்கள் தாய் வழிப்பாட்டையே பின்பற்றி வந்தனர். பின்னர் வந்த பக்தி இயக்கங்களும் ஆண் வழிப்பாட்டை விடவும் பெண் தெய்வத்தை வீரியமிக்கதாக காட்டியது. பார்வதியை உலகை ஆளும் சக்தியாக அடையாளப்படுத்தியது. இந்த முறை நமது தாய் வழிப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

கிறிஸ்துவ மதமும் நம் மக்களிடம் பரவும் பொழுது நம் மக்களிடம் வழங்கி வந்த தாய் வழிப்பாட்டை அறிந்த மதம் பரப்புனர் இயேசுவின் தாயை பிரதானப்படுத்தினர். தூய சவேரியார் ஐரோப்பாவில் இருந்து மாதா சிலையை வரவழைத்து தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயம் சிறியதாக பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  வீரமா முனிவரும் பெரிய நாயகி என்னும் மாதா கோவிலை உருவாக்கி நம் மக்களிடம் மதத்தை பரப்பினார். அதன் காரணமாகவே ஊரேங்கும் மாதா கோவில் அமைக்கப்பட்டது.

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலின் உரிமை சங்கராச்சாரியின் மடத்திற்கு செல்வதற்கு முன்பு அவை தமிழக பொற்கொல்லர் சாதியான விஸ்வகர்மா என்னும் சாதியினரிடமே இருந்துள்ளது. இன்றும் தமிழக பொற்கொல்லரின் குலத்தெய்வம் காமாட்சியம்மன் தான். அதைபோல் நாடார்களுக்கு பத்ர காளியம்மன்.
அந்தக்காலத்தில் குமரி அம்மனை கடல் கெழு செல்வி என்றழைப்பார்களாம். இவள் தான் அங்குள்ள மீனவ சாதிகளுக்கு காவல் தெய்வம்.  இவ்வாறு ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தனித்தெய்வ வழிப்பாடு இருந்துள்ளது. நாட்டார்தெய்வங்களின் வழிப்பாடுகளை ஆராயும் பொழுது மறைந்திருக்கும் மிக முக்கியமான தரவுகள் வெளிவரும். உதாரணத்திற்கு மீனாட்சி அம்மன் என்பது அரசியராக இருந்த தெய்வமாகும். நவ நாட்களின் ஒரு நாளில் மீனாட்சிக்கு வேம்பு மாலை இட்டு வழிப்பாடு நடக்குமாம். அதற்கு இருக்கும் பின்புலம் வேம்பு என்பது பாண்டிய வம்சத்தின் குல குறி. பாண்டிய மன்னனுக்கு வேம்பன் என்று பெயரும் உண்டு. பாண்டிய வம்சம் கடல் அருகே தோன்றிய வம்சம் ஆனதால் மீன் கொடியையும் அதன் பெயருள்ள அம்மனையும் வழிப்பட்டு வந்துள்ளனர்.
பெருந்தெய்வ வழிப்பாடுகளுடன் சிக்கும்போது அதன் வரலாறுகள் அழிக்கப்படுகிறது.

முன்பு காலத்தில் மரித்துப்போன அரசியரின் கல்லறைக்கு பள்ளிப்படை அமைத்து வழிப்படுவார்கள். வெம்மை நோய் வந்து இறந்துப்போன பள்ளிப்படைத்தான் சமயபுரம் மாரியம்மன் என்கிறார் தொ.ப.
இவ்வாறே பல தெய்வங்கள் முளைத்துள்ளது. மணமாகி சுமங்கலியாக இறக்கும் பெண்களையே தெய்வமாக்குகிறார்கள். மாலையம்மன் சுமங்கலியாக இறந்த ஒரு சாமானிய பெண் ஆவாள். ஆண் தெய்வ வழிப்பாடுகள் கருப்புசாமி, சுடலை, அண்ணமார், கருப்புசாமியுடன் நின்றுப் போய்விடுகிறது. பூமணியின் அஞ்ஞாடி நாவலில் கருத்தையன் என்பவன் காவல் தெய்வமாக மாறுவதை அழகாக சித்தரிப்பார். நம் கூடவே வாழ்ந்தவர்களே நாட்டார் தெய்வங்கள் ஆக்கப்படுகிறார். கொலையால் பழியுண்டவர், மக்களுக்காக உயிர் நீத்தவர்களே இவ்வழியில் அடங்குவர்.


சமண மதம் விட்டு சென்ற ஒரு தெய்வத்தை இன்னும் தமிழ்மக்கள் தமது தாய் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர். சமண மதத்தில் "அம்பிகா யட்சி" என்னும் புராணத்தில் வரும் இசக்கி , நெல்லை, குமரி மாவட்டத்தில் பயந்து வழிப்பட்டு வரும் தெய்வமாகும். மேலும் பகவதி அம்மனும் சமண மதத்தின் எச்சங்கள்.  நெல்லை மாவட்டத்தில் சிங்கிகுளம் அருகே மலைக்கோயில் சமணப்பள்ளி ஒன்று உள்ளது. சமண மதத்தில் பள்ளி என்பது கோவில் ஆகும். இங்கு சமண கடவுளான தீர்த்தங்கரர் மற்றும் பகவதி அம்மன் உள்ளது.  இம்மக்கள் இது சமண கோவில் என்று அறியாமல் தீர்த்தங்கரரை முனீஸ்வரர் என்று பெயரிட்டு வழிப்பட்டு வருகின்றனர். கி.பி ஏழாம் நூற்றாண்டில்  மதுரையில் திரு ஞானசம்பந்தரால் கழுவேற்றப்பட்ட சமண மதம் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே இருந்துள்ளது.  இதன் தொடர்ச்சியாகவே சமண வழிப்பாடு  இன்னும் நம் வழக்கத்தில் சமண கடவுள் என்று தெரியாமல் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது.

" எழுதிய வரலாற்றை திருப்பி எழுதுவோம் " என்கிறார் கோசமோ. மேற்கிந்தியப்பகுதியில் தாய்தெய்வ வழிப்பாட்டை எல்லாரிடமும் எடுத்துச் சென்றவர்.
தாய் தெய்வ வழிப்பாடு  நூற்றுக்கணக்கான பரிமாணங்களை உள்ளடக்கியது. அதனை அளந்தரியவும் ஆராயவும் எழுதிக்காட்டவும் பலர் ஈடுபடவேண்டும். அதன் பின்னரே தமிழ் சமுதாய வரலாறு உறுதியான அழுத்தமாக கட்டமைக்கப்பெறும் என்பதில் ஐயமில்லை என்று வேண்டுகோள் விடுக்கிறார் தொ.ப.

*****
வள்ளி கட்டுரையில்

தமிழகக்கடவுளான முருகனின் மனைவிகளான தெய்வானையைப் பார்த்து வள்ளி கேட்கிறாள்.
" ஒழக்கு நெல்லுக்கு ஒழக்கு சள்ளை உணர்த்தி விக்கிறது
     ஒங்க அண்ணணா எங்க அண்ணணா.."
உழக்கு நெல்லுக்கு மாற்றாக உழக்கு கருவாடு விற்றவர்கள் தெய்வானையின் சகோதரர்கள் என்று ஏளனம் செய்கிறாள் வள்ளி.  தெய்வானை ஒரு மீனவப் பெண் என்பதை இந் நாட்டார் பாடல் விளக்குகிறது. இன்றைக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் விசேஷங்களில் பக்கத்து மீனவ கிராமங்களில் உள்ளவர்கள் கலந்துக்கொண்டு மரியாதை செய்யப்படுகிறார். அங்குள்ள மீனவர்கள் அனைவரும் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர்கள் என்பது குறிப்பிடவேண்டியது. அங்குள்ள மீனவர்கள் முருகனை மச்சான் என்றழைக்கின்றனர். தெய்வானை இனத்துப்பெண் என்று உரிமை கொண்டாடுகின்றனர். ஜோ.டி. குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலிலும் கொற்கை நாவலிலும் ராஜம் கிருஷ்ணத்தின் அலைவாய்க்கரையில் நாவலிலும் இந்த தெய்வானை மீனவ பெண் என்ற வரி வருகிறது.

தெய்வானை வள்ளியைப்பார்த்து  திருப்பி சொல்கிறாள்
 " பூனைக்குத்தி விருந்து வைப்பான்
   புனைக்குறவன் உங்கண்ணன்."
வள்ளி குறவ இனத்துப்பெண் என்பதை தெய்வாணை ஏளனம் செய்கிறாள். இவ்வாறு முருகக்கடவுளின் மனைவி இருவரும் தமழ் தொல்குடிகளின் பெண்கள் என்பதால் முருகனும் தமிழ் நாட்டார் தெய்வமாக இருந்திருக்கவேண்டும் என்பது பலர் கருத்து.  பக்தி இயக்கத்தின் வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முருக வழிப்பாடு சிவ வழிப்பாடுடன் இணைந்தது.  முருகன் சிவனின் மகன் என்னும் அடையாளப்படுத்தி மேலும் சிவ வழிப்பாடு பரவியது. வட இந்தியாவில் சிவ வழிப்பாட்டில் முருகனுக்கு பதிலாக கார்த்திகேயன் மாற்றப்பட்டது.
இவ்வாறு பெரிய மதத்தின் முன்னால் சிறு கடவுள் வழிப்பாடு வேறு வழியில்லாமல் இணைத்து விட்டது. கேரளத்தில் ஐயப்பனும் அவ்வாறே.
******

பழயனுர் நீலி கட்டுரையில் வணிக கணவனால் கைவிடப்பட்டு கொலை செய்யப்பட்டு மறுபடியும் பெண் வேடம் அணிந்து வந்து கண்வனை பழிவாங்கிய நீலியைப்பற்றி விரிவாக பேசுகிறார். இன்னும் நம் வழக்கத்தில் நீலிக்கண்ணீர் என்ற சொற்றொடர் பொய் அழுகையை வர்ணிக்கும் சொல்லாக இருந்து வருகிறது. இந்தக்கதை தென்மாவட்டங்களில் இசக்கியம்மனோடு சேர்க்கப்பட்டு வில்லுப்பாட்டில் பாடப்பட்டு வருகிறது.

சித்திரகுப்தனுக்கு தமிழகத்தில் சில இடங்களில் கோவில் இருக்கிறது. போடிக்கு அருகில் சிறு கோவிலும், திருச்செந்தூர் அருகே ஆற்றுர்ச் சோக நாதர் கோவில் உள்ளேயும், காஞ்சிப்புரத்தில் தெற்கு ரதவீதி என்றழைக்கப்படும் நெல்லுக்கார தெருவில் தனிக்கோவில் இருக்கிறது. சித்ரகுப்தன் எமனின் கணக்குப்பிள்ளை. குப்தா என்பது வட நாட்டு பெயர். சித்ரகுப்தன் வடக்கிலிருந்து வந்த தெய்வமாகும். கிபி ஏழாம் நூற்றாண்டில் பெரியாழ்வர் சித்திரகுப்தனை பதிவு செய்திருக்கிறார்.
மரணப்பயத்தை முன்னிறுத்தி இத்தெய்வம் நம்மில் தோன்றியுள்ளது.

****

பாரதியின் கண்ணன் பாட்டையும் ஆழ்வார் பாட்டையும் ஆய்வு செய்யும் தொ.ப. வைணவ சமயத்தில் பிறக்காத பாரதி , கண்ணன் பாட்டை படைத்தது ஆச்சர்யமான ஒன்று என்கிறார்.
ஆண்டாளின் பாடல்களில் எருக்கம்பூக்கள் வரி இடம் பெறுவதால் ஆண்டாளின் பெரிய இடத்துப்பிள்ளை. அவள் சிந்தனையில் சாதாரணபெண்கள் வாழ்வில் இடம்பெறும் எருக்கம்பூக்கள் பற்றி இடம்பெறுவதை குறிப்பிடுகிறார். ஆண்டாள் பாடல்களில் ஒரு பண்பாட்டுக்கலப்பு உள்ளது என்கிறார்.

****
 பார்ப்பனுக்கு முன் பறையன்  என்ற வார்த்தை உண்டு. பார்ப்பனர்களுக்கு முன்பு இவர்களே கோவில் வழிப்பாடுகளை நடத்தி வந்துள்ளனர். தாலி கட்டும் சடங்கில் ஈடுபடும் பார்ப்பனர்கள் ஆனால் தாலி அறுக்கும் சடங்குகளில் வண்ணார்கள் ஈடுபடுகிறார். ஒரு காலத்தில் சடங்குகளால் முன்னின்றவர்கள் இன்று ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.
பெரிய கோவில்கள் சுற்று வீதிகளில் பிராமணர்களும், ரதவீதிகளில் வேளாளர்களும், தெருக்களில் பிற்படுத்தப்பட்டவர்களும், வயல்வெளிகளில் ஒடுக்குப்பட்டவர்களும் வாழும் இடமாக இருக்கிறது. இக்கோவில்களில் மேல் சாதியினர் மட்டுமே அனுமதி.
ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கோவில்களில் எல்லாருக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
****

இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து பல தரவுகளை தொ.ப முன் வைத்துள்ளார். பல ஆய்வுகளுக்கு இந் நூல் முன்மாதிரியாக அமையும்.
நம் வாழும் சமூகம் பல வந்தேறிகளால் கட்டமைக்கப்பட்டது. நாம் பொருளாதர சுரண்டலுக்கு மட்டுமல்ல, சமயச்சுரண்டலுக்கு ஆட்கொண்டிருக்கும் என்பதை தொ.ப வின் கட்டுரைகளை படிக்கும்பொழுது உணர முடிகிறது.

தெய்வம் என்பதோர்..
தொ.பரமசிவன்
யாதுமாகி பதிப்பகம்
பாளையங்கோட்டை.
விலை ரூ50.

--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி




6 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Unknown said...

அஹா.... அற்புதமான கட்டுரை....ஒரு நூலை எப்படி படிக்க வேண்டும் அதனை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும்...அதனை எவ்வளவு சுவையாக மற்றவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அத்துணையும் உள்ளடக்கிய மிக அற்புதமான...மிகத் தேர்ந்த நடையுடன் கூடிய கட்டுரை.... வாழ்த்துக்கள் தோழா... தொடரட்டும் உங்கள் நூல் அறிமுகங்கள்....

Unknown said...

அஹா.... அற்புதமான கட்டுரை....ஒரு நூலை எப்படி படிக்க வேண்டும் அதனை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும்...அதனை எவ்வளவு சுவையாக மற்றவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அத்துணையும் உள்ளடக்கிய மிக அற்புதமான...மிகத் தேர்ந்த நடையுடன் கூடிய கட்டுரை.... வாழ்த்துக்கள் தோழா... தொடரட்டும் உங்கள் நூல் அறிமுகங்கள்....

சித்திரவீதிக்காரன் said...

தெய்வம் என்பதோர்... நூல் குறித்த தங்கள் பதிவு அருமை. ஒவ்வொரு கட்டுரையையும் குறித்து தனித்தனியாக சிலாகித்து எழுதியது நன்று. தொ.பரமசிவன் அய்யா எழுதிய மற்ற நூல்களையும் வாசித்துப் பதிவிடுங்கள்.
தெய்வம் என்பதோர்.. சமீபத்தில் மணி பதிப்பகம்( 29A, யாதவர் கீழத்தெரு, பாளையங்கோட்டை) வெளியீடாக வந்துள்ளது. 60 ரூபாய்.

தினேஷ் பாபு said...

மணி பதிப்பகத்தின் தொலைபேசி எண் தாருங்கள்

Unknown said...

இந்த புத்தகங்களை எங்கு வாங்கலாம்

Thamizharamithal said...

kindly send your Mobile No. OR call me 7373222244 ,from Madurai-tamilaram magazine

Post a Comment