பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி--சிறுகதை

2012-12-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




நீலக்கடலின் பிரமாண்டத்தின் முன் வெண் பிறை சற்று மந்தமாக தெரிந்தது.
அடிக்கும் குளிர்க்காற்று உடலுக்குள் ஊசி குத்திக்கொண்டிருந்தது. நுரை
சேரும் குருமணல்கள் ஈர பிழம்பாய் இருந்தது. இறுக்கி பிடித்து
மூடிக்கொண்டிருந்த இமை ரெண்டும் அதி உன்னதமான வாடைக்காற்றால் திறந்தது.
கண்கள் ரெண்டையும் கசக்கி விட்டுக்கொண்டேன். தூரத்தின் தெரிந்த நிலவு,
தற்பொழுது தலைக்கு மேல் கோபுரத்தின் ஊடே தெரிந்தது. தூரத்திலிருந்து
சினம் கொண்டு வந்த அலை, சிறுமணல் குன்றின் மீது ஏறாமல் அமைதியாக
திரும்பியது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். எழுந்து நடந்தேன்.
கரையின் நுனியில் கால் நனைத்தேன். கோவிலின் முன்னால் உள்ள மண்டபத்தில்
பலர் படுத்திருந்தனர். நேரம் மூன்றாம் சாமத்தை கடந்துவிட்டது. வளர்
பிறையின் உதவியால் மண்டபத்தின் அருகில் உள்ள வேப்பமரத்தனடியில் வந்து
அமர்ந்தேன். வேம்பு தன் கிளைகளை வேகமாக ஆட்டி என்னை வரவேற்றது.  தூக்கம்
வரவில்லை. சிறிது நேரத்தில் தூரத்தில் சிலர் கரையில் கிடந்த கட்டுமரங்களை
கடலுக்குள் தள்ளிக்கொண்டிருந்தனர். காலைப்பாடு செல்கிறவர்கள்.  கழுத்தில்
கல்வாரியில் தொங்கிய யேசு இடம்பிடிந்திருந்தார். மறுபடியும் தூக்கம் தழுவ
மனம் பிதற்ற ஆரம்பித்தது. கடல் கெழு செல்வி, பாண்டியன், கொற்கை, மன்னார்
முத்துக்கள், தெய்வானை, சள்ளை, சம்பை, போர்ச்சுகீஸ், கிறிஸ்துவம், மாதா,
மேசைக்காரர்கள், மெனக்கடர்கள், கம்மாகாரர்கள். பிதற்றலின் முடிவில் வாய்
கசந்தது. உதட்டோரத்தில் உப்பு உலர்ந்தது.  காலம் தெரியாத அந் நாளில் என்
தொல் வேரின் மூத்தவனாகிய செழியன் என்பவன் இக்கடலை விட்டுச்சென்றான். அவன்
 எச்சத்தைத் தேடியே நான் இக்கடற்கரைக்கு வந்திருந்தேன். அவனின்
பரிபாடல்கள் என் நினைவில் பத்திரமாய் இருந்தது. அவனின் கதைகளை நாங்கள்
தலைமுறை தலைமுறையாக தெரிந்துக்கொண்டோம். கடலின் ஓயாத இரைச்சலில் அவனின்
கதை என் கண் முன்னால் படிய ஆரம்பித்தது.
***

" பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி பரதவர்
  இருங்கழிச் செறுவின் உழா அது செய்த
  வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி..."

சுடுமணலைத்தோண்ட தோண்ட தரை தட்டுப்படவேயில்லை. ஒரு வேம்பை நட இவ்வளவு
பிரச்சினையாகும் என்று எதிர்பார்க்கவில்லை. குடிசையின் முன்னால் நன்றாக
இருக்கும்னு நினைச்சு புடுங்கிட்டு வந்தது. அம்மை கத்த ஆரம்பித்தாள்.
"ஏம்ல, செழியா... மூசு மூசுன்னு வார.. அங்கன்ன முடியலன்னா.. பொறத்தால  நட
வேண்டியதுதானே..  அது என்ன கண்ணு...?"
"இரும்மா.. கத்தாத.. வேப்பங்கண்ணு... கொடி மரத்துக்க புடுங்கிட்டு
வந்தேன்..ஒரு நல்ல எடம் பார்த்து நட வேண்டியதுதான்.. நடர வரைக்கும்
சும்மா கத்திகிட்டு இருக்காத...!"
" பெரிய பாண்டிய மகராசா வம்சம்.. வேம்பு கேட்குதோ.. " அம்மை எடத்த விட்டு
நகர்ந்தாள். கையில் சம்பைக் கூடை.
ஒரு வழியா தரை தட்டுப்பட்டு வேம்பை நட்டு, புடிச்ச மண்ணைக்கொண்டு மூடி,
தண்ணீ தெளிச்சு, கையில் பட்ட மண்ணை சாரத்தில் துடைத்துக்கொண்டு
மாதாக்கோவில் பக்கம் ஒடினேன்.  வேம்புவின் சிறிய இலை என்னை பார்த்து தலை
ஆட்டியது.

***

கரையில் உள்ள மரம் கடலுக்குள் இறங்க மறுத்தது. ஒரு பெரிய கூட்டமே
தள்ளிக்கொண்டிருந்தது.  மரத்துக்கு சொந்தக்காரன் பலமா தள்ளினான். கையில்
புஜம் உயர்ந்து இறங்கியது. என் கையை மடக்கி புஜத்தை தொட்டுப்பார்த்தேன்.
சிறியதா இருக்கிற வரைக்கும் கடலுக்கு போக முடியாது. சீக்கிரம் கடலுக்கு
போகனும் வெறி வந்தது. ஒரு வேகத்தில் கூட்டத்துடன் நானும் சேர்ந்து
கட்டுமரத்தை தள்ளினேன். என் கைப்பட்டவுடன் மரம் கடலுக்குள் இறங்கியது.
ததும்பி வந்த சந்தோசம் அலையை விட ஆர்ப்பரித்தது. ஓவென்று கத்திக்கொன்று
கரையில் ஒடினேன். பெரிய கம்புத்தட்டி விழுந்தேன். முன் பல் உடைந்து
குருதி வழிந்தது. தட்டுன கம்பின் மீது பெருங்கோபம் வந்தது. பெருவிரல்
திரும்பியதால் நொண்டி நொண்டி முயற்சித்தேன். முடியவில்லை. பெருங்கம்பு
பக்கத்தில் சிறு கம்பு ஒன்று கிடந்தது. சிறுகம்பின் உதவியால்
அலைத்தண்ணீரினால் ஒடைந்த பல்லை கழுவினேன். பல்லை தூக்கி கடலுக்குள்
எறிந்தேன். அது சுறாக்கு பல்லாக மாறக்கடவது என்று வேண்டிக்கொண்டு
குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். சிறு கம்பு எனக்கு பெரும்பலத்தைக்
கொடுத்தது. கொஞ்ச நாள் கம்பின் உதவியால்தான் நடக்க முடிந்தது.
பின்னாட்களில் கம்பை விட மனசு வரவில்லை. கையில் வைத்துக்கொண்டே
அலைந்தேன். கம்பை வேல் மாதிரி சீவிக்கொண்டேன். மீனைக்குத்தி
பிடிப்பதற்காக. வேல் கம்பு எனக்கு உற்ற தோழனாக மாறினான். நானும் அவனும்
கரைக்கு பக்கத்திலே நின்றுக்கொண்டே வேட்டையாடினோம். வலை வீசும் படலத்தை
விட வேலுடன்  வேட்டையாடுவது பிடித்திருந்தது. ஓட்டைப்பல் முளைத்து
விட்டது. கையில் வேலோடு சுத்துவதால் என்னை எல்லாரும் வேலா என்றும்
அழைத்தனர். செழியனை விட எனக்கு அந்தப்பெயர் பிடித்திருந்தது.
***

   " கடலில் இறங்கிய  முதல் பெண்.. தென் குமரி.."

எல்லாரும் அவளை ஊமைக்கிறுக்கி என்றுதான் சொல்வார்கள்.  அவளைப்பற்றி
பலக்கதைகள் உண்டு. பேய் பிடித்ததால் பக்கத்து ஊரிலிருந்து கோவிலில்
விட்டுச் சென்றுவிட்டதாக கூறுவர். ஒரு சிலர் அவள் பேயோ பிசாசோ இல்லை.
அவள்தான் நம்மக்க ஊரு காவல் அன்னை என்று. எங்களுக்கு அவள் எப்பொழுதும்
ஊமையன்னை.  அவளுக்கு மீன் அதிகம் பிடிக்கும். எல்லார் வீட்டிலும் மீன்
வாங்கி சாப்பிடுவாள். மீன் மட்டும்தான். தாகம் எடுத்தால் கடல் நூரையுடன்
கூடிய நீரை அருந்துவாள். தாகம் அடங்கியது பெருமூச்சு விட்டு அழுவாள்.
சிறு கண்ணீர் திவளைகள் மார்பு வழியாக இறங்கும். கோவில் மணி அடிக்கும்
பொழுது காதை பொத்திக்கொண்டு ஒடுவாள். சிறு உளறல் மட்டும் கேட்கும். பெரு
அலையைக்கண்டு கைத்தட்டுவாள். இவ்வளவு அழகானவளா என்று நினைக்கத்தோன்றும்.
பெரு அலையின் மேல் அவளுக்கு இருந்த ஆர்வம் ஊர்மக்களுக்கு வியப்பை தரும்.
கன்னி மரியாளின் உருவச் சிருவத்தை கெபியின் முன் நின்று பார்ப்பாள். அவளை
அறியாமல் முனகல் வரும். நான் ஒரு நாள் அவளிடம் பேச முற்பட்டேன். என்
தலையைத் தொட்டு ஆசிர்வதித்தாள். கடலைக் கை காட்டி என்னிடம் ஏதோ சொல்ல
முன்வந்தாள். அவளால் வார்த்தை வரவில்லை. ஆ,உ,ம் என்ற சத்தத்தை தவிர எதும்
வரவில்லை. என்னுடன் பேசிய சில நாட்களுக்கு பிறகு ஊமை அன்னையை காணவில்லை.
அந் நாட்களில் மட்டும் அலை தனது ஆர்ப்பரிப்பை நிறுத்தி வைத்தது. சில
பெரியவர்களுக்கு வருத்தம். நம்ம தெய்வம் நம்மை விட்டு போயிட்டது என்று.
அவள் போனதிலிருந்து எங்களூர் மாதா சுரூபம் மிக பிரகாசமாக மாறியது. எங்கள்
மாதாவின் மகிமை எல்லா ஊருக்கும் பரவியது. மெல்லிய புன்னகையுடன் கன்னி
மாதா எங்களூரில் மிகவும் பிரகாசிக்க ஆரம்பித்தது ஊமை அன்னை
மறைந்துப்போனதுக்கு அப்புறம்தான். கடல் கொந்தளிக்காத பொழுதெல்லாம் அரிசி
மாவை இடித்து கன்னி மாதாவுக்கு படைத்தோம். எங்கள் கானலம் பெருந்துறைக்கு
அவள் தெய்வமானாள்...

***
    "நாள்வலை முகந்த கோன்வல் பரதவர்"

கடல் முழுவது குருதி வழிந்தோடியது மாதிரியிருந்தது. பெரிய சுறா ஒன்று தன்
குருதியை கொட்டி தீர்த்ததாக நான் நினைத்தேன். அந்த அளவுக்கு செங்கடலின்
வியப்பு என்னை ஆழ்த்தியது. கரையில் ஆட்டம் போடும் அலை. நடுக்கடலில் குளம்
போல் காட்சியளித்தது. முதல் கடல் பயணம். பெரு வலையின் சிறு முனை என்
கையில் கொடுக்கப்பட்டிருந்தது. மறு கையில் என் வேல்.
வேலைக்கொண்டு கடல் மேற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த திருக்கயை
குத்தினேன். என் வேலில் மாட்டிக்கொண்டது. அலைக்கடல் தன் ஆர்ப்பரிப்பை
நிப்பாட்டி விட்டு என்னை வாழ்த்தியது. எங்கிருந்தோ வந்த ஊதக்காற்றின்
சத்தம் ஆ,உ,ம் சத்தத்தை உண்டு பண்ணியது. ஆம் என் ஊமை அன்னை என்னை
வாழ்த்தினாள்.
***

" பழந்திமில்  கொன்ற புதுவலைப்பரதவர் "

" ஆண்டவனே உன்ன நம்பி
  ஏலேலோ
அலைக்கடல் ஏறி வந்தோம்
 ஏலேலோ
பெருமாளே உன்ன நம்பி
 ஏலேலோ
பெருங்கடல் ஏறி வந்தோம் "

அம்பா பாட்டு பாடிக்கொண்டே கொண்டல் காற்றுக்கு ஒத்துசைந்து நீலக்கடலை
கிழித்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தோம். கட்டுமரத்தினுள் வலை,
தூண்டில்,உளி  போன்றவை கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. சில மீன் களை
உளியைக்கொண்டு எறிந்து பயன்படுத்தலாம். நான் என் வேல் கம்பை கரையில்
வைத்து வந்துவிட்டேன். உளியை  எடுத்துப்பார்த்தேன். கூடவே பனை
ஓலைப்பெட்டி. இதை நாங்களே முடைந்துக்கொள்வோம். மீன்கள் ஓலைப்பெட்டிக்குள்
துடிப்பதை ரசித்துப்பார்த்துக்கொள்வேன். என் பெரியப்பன் தான் எங்கள்
நடைக்கு தலைமை. கொடிய முடிச்சுக்களை உடைய ஒருவிதமான நாரினால் ஆன வலையை
என் பெரியப்பன் கடல் நீவாட்டுக்கு ஏற்ப கடலில் வீசிக்கொண்டே வந்தான்.
விடி வெள்ளி உச்சியில் இருந்தது. சிறிது நேரத்துக்கு நானும் என்னைப்போன்ற
கையாட்கள் தூங்குவோம். பின்னர் ஒரு வெள்ளி கிழக்கே சாய்ந்ததும் என்
பெரியப்பன் எழுப்புவான். மட மடவென்று வலையை உள் வாங்குவோம். கூட்ட
கூட்டமாக மச்சாதுகள் எங்கள் மரத்துக்கு தாவும். மன நிறைவுடன்
பாயைத்திருப்பி கரை விட்டோம்.  ஒரு நாள் படகை திருப்பி விட்டு பாசி,
கழிப்பு போன்றவற்றை எடுத்து பழுதுச்சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது
உயர்ந்த மணல் குன்றின் அலையால் ஒதக்கப்பட்ட சுறா மீன் ஒன்று வந்து
ஒதுங்கியது. அதைப்பார்த்த நான் ஒடிச்சென்று பார்த்தேன். என்னைப்போன்ற
கடலாடிகளுக்கு சுறாவை உளியால் வீசி உயிரோடு பிடிப்பது ஒரு பெரும்வீரம்.
ஆனால்  இந்தமாதிரி கரை ஒதுங்கிய சுறாவை கொன்று பங்கு போடுவது
வீரமல்லாததுதான். இருந்தாலும் எனக்கு ஒரு பங்கு கிடைத்தது. எடுத்துகொண்டு
குடிசையை நோக்கி நடந்தேன். பாதி சுறா கோவிலுக்கு தசம பாகமாக
கொடுக்கப்பட்டது.

***



" அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே."

திருமந்திரை  நகரில் சித்திரை மாதங்களில் முத்துக்குளித்தல் நடைபெறும்.
எங்க கடற்கரையிலிருந்து சிலர் செல்வர். திருச்சீரலைவாய் தாண்டும்போது
தெய்வானையை வல்லத்தில் நின்றுக்கொண்டே வேண்டுவர். இதை மாதிரி மலையாள
நடைக்குச் செல்லும்போதும் குமரி அன்னைக்க்கு ஒரு வேண்டுதல் இருக்கும்.
தெய்வானைக்க்கும் குமரி அன்னைக்கும் நடுவேத்தான் எங்கள் வாழ்க்கை. எங்கள்
ஊரின் கன்னி மரியாள் இவர்களின் மறுபிரதிபலிப்புதான் என்பது எங்கள்
நம்பிக்கை. நாங்கள் எங்களூரில் சங்கு குளிப்போம். புரட்டாசியிலிருந்து
சித்திரை வரை குளிப்போம். கரையிலிருந்து ஏழு முழம் தூரத்தில் கடலில்
ஐந்து முழம் ஆழத்திலிருந்து முப்பது அடி ஆழம் வரைக்கும் சங்குகள்
காணப்படும். சங்கு குளித்தல் முடித்த பின் பிடிக்கப்பட்ட சங்குகளை
கரைக்கு கொண்டு வருவோம். அவைகளை இரண்டு அங்குலம் குறுக்களவு கொண்ட மரத்தா
ஆன ஒரு கருவியால் பரிசோதிக்கப்போம். அதன் தூவாரத்தில் வழியாக நுழையும்
சங்குகள் பிரயோசனமற்றவையாகக் கருதப்பட்டு கடலுக்குள் திருப்பி
எறிந்துவிடுவோம். வரும் வழியிலே சங்கின் உள் சதைகளை அறுத்து விடுவோம்.
சங்கு கறியை அம்மைக்கு கொண்டு கொடுப்பேன். அவை ஆகாரத்துக்க்கு நன்றாக
இருக்கும். சங்கு அறுத்து வளையல் செய்வோம். சங்கு வளையலை
மச்சுவந்தினிக்கு கொண்டு கொடுப்பேன். கருத்த கைகளில் வெண் சங்கு அழகா
இடம்பிடிக்கும்.
எனக்கு இக்கடற்துறைகளில்  மிகப்பிடித்த பெண் மச்சுவந்தினி. எனக்கும்
அவளுக்கு உண்டான அன்பு சிறு வயதிலே ஏற்பட்டது. உப்புக்காற்று பட்டு
காய்ஞ்சுப் போன என் தலை முடியை அன்பாக கோதி விடுவாள். ஒரு விடியறையில்
மெல்லிய வெளிச்சத்தில் அவள் உதட்டை கடித்தேன். உப்பு கச்சி கிடந்தது.
மெல்லிய உவர்ப்பு இனிமையாக இருந்தது.  மச்சுவந்தினி அப்பா ஒரு மீன்
வியாபாரி. அவர் கடலுக்கெல்லாம் செல்ல மாட்டார். அவளுடைய அம்மை மிஞ்சிய
மீனை கருவாடாக்கி பக்கத்து ஊருக்கு சென்று விற்றுவருவாள். என் அம்மையும்
அவளும் எப்போதும் கருவாட்டை காய வைக்க சண்டை போட்டுக்கொண்டே
இருப்பார்கள். ஆளுக்கு ஒரு உள் ஊரைப் பிடித்துக்கொண்டு வியாபாரம்
பண்ணுவார்கள். மச்சுவந்தினி அப்பா சாஸ்தான் குளம் தாண்டி மாட்டுவண்டியில்
சென்று மீனையும் கருவாடையும் விற்றுவருவார். அந்த உள்ளூரிலே குடிசையைப்
போட்டு உட்கார்ந்துருலாம் என்று யோசித்தார். இந்த விசயத்தை மச்சுவந்தினி
என்னிடம் சொன்னதும் அவளை நான் பிரிஞ்சிருவமோன்னு பயமா இருந்தது. ஒரு
நாள் நான் நினைத்த மாதிரியே அவர்கள் அந்த உள்காட்டுக்கு குடிபெயர்ந்தனர்.
அவள் போன மாட்டுவண்டியை தேரிக்காடு வழியா ஒடிப்போய் வழிமறிக்கலாமுன்னு
ஒடினேன். தேரிக்காடு முழுவதும் ஓடியும் மாட்டுவண்டியைக் காணவில்லை.
அலைக்கடல் பாறை மேல் மோதி பாறை கரைந்ததுப் போல் மச்சுவந்தினியை ஏங்கி என்
மனம் கரைந்தது. சுட்ட மீனும் கள்ளுமாக என் பகல் பொழுது கழிந்தது.
மச்சாதுகள் ஒரு பொழுதும் கண்ணை மூடுவதில்லை. கண்ணை திறந்துக்கொண்டேதான்
கடலுக்குள் தூங்கும். எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் என் உரமேறிய
உடல், அவள் பிரிவால் இறங்கத்தொடங்கியது.
" வருவாள் நல்ல அல்லில்லா வருவாளெண்டு
  வழிகாத்து அல்லில்லா நானிருந்தேன்
  நடக்க நல்ல அல்லில்லா முடியுதில்லை
  நாயகியே அல்லில்லா பழக்கமில்லை "
என் அம்மைக்கு ஏதோ உரைத்திருக்க வேண்டும். மச்சுவந்தினி அப்பா  மீன்
எடுக்க வரும்போது பேசினாள்.
" கடலுக்கு போறவனுக்கு உயிர் உத்தரவாதமில்லை.  அவன வேணாம் பாடு போறத
நிப்பாட்டி என் கூட உள் காட்டுக்கு வரசொல்லு... இந்த வியாபாரத்தை
பார்க்கச்சொல்லு.. அங்க ஒரு புஞ்சையை வாங்கிட்டேன்.. எத்தன
நாளுக்குத்தான் ஒளக்க சள்ளைக்கு ஒளக்க நெல்லு வாங்குவது... நானும் நெல்லு
சம்பாதிக்க போரேன்.. உனக்க விருப்பமிருந்தா சொல்லு.. பேசிப்பார்ப்பும்.."
அம்மை பதில் சொல்லாமல் திருப்பி வந்தாள். எனக்கு என் அம்மையை விட
கடல்தான் பெரிய அம்மை.
கடலம்மையின் மடியை விட்டு விலகி செல்ல விருப்பமில்லை. கடற்கரையில் எவனாது பாடுவான்.
" வேளாக் கடலில்
  விள மீன் பிடிப்பேன்
  வீட்டில வந்தா
  விளக்கெண்ணெய் எரிப்பாள்
  சாய்வாள் சரிவாள்
  சந்தணம் தருவாள் "
இன்னொருத்தன் எசப்பாட்டு எடுப்பான்.
" நானெடுப்பான் பருமரக்கோல்
 அவளிருப்பாள் கும்பனிலே
 கும்பத்து அழகியவள்
 குணமான செல்லியவள்"
இதைக்கேட்கும்போது மச்சுவந்தினி ஞாபகம் வந்து மீட்டும். மச்சுவந்தினியின்
உடம்பு வாசனையை   நுகர்ந்ததை நினைக்குபோது அவளையும் அவள் உடம்பயையும்
தேடும்.  ஒரு நாள் நானும் அவளும் கடற்கரையில் உறவாடிக்கொண்டிருந்தோம்.
காதல் வேகத்தில் என் கை அவள் சிறு மார்பில் பட்டுவிட்டது. அவள் பயந்து
ஒதுங்குகிறாள். நான் ரோசம் வந்தவனாய் அவளை இறுக்கி அணைக்கிறேன். எங்கள்
மூச்சுக்காற்று  அலைக்காற்றுடன் போட்டி போடுகிறது. தீடிரென்று
திமிறிவிட்டு  அப்பாவுக்கு பயந்து ஒடிவிட்டாள். என் தொண்டையிலிருந்து
குரல் பிறீடுகிறது.
" மருகனைய குழல் சரிய
  மகுடகும்பம் தன்மசைய
  தனத்தை தொட்டா உனக்கென்னடி
  தமயன் கண்டா வரச்சொல்லடி
 மார்பைத் தொட்டா உனக்கென்னடி
 மாமன் கண்டா வரச்சொல்லடி."
ஒடிச்சென்றவள் திரும்பி வந்து உதட்டணைக்கிறாள். பிண்ணி பிணைகிறோம்.

***
" கல்பொரு சிறு நுரை போல
  மெல்ல  மெல்ல இல்லாகுதுமே.."

எளிய திருப்பலியுடன் மச்சுவந்தினியுடன் இணைந்தேன். இருவரும் மெல்லிய
அலங்காரத்துடன் ஊருக்குள் ஊர்வலமாகச் சென்று மாதா சுரூபத்தில்
விளக்கேத்தினோம். என் மனசுக்குள் நெருடல். இனி கடலுக்கு செல்ல முடியாதே
என்று.  மீன் விருந்துடன் ஊரே எங்களை வழியனுப்பியது. கடல்
பெருங்கொந்தளிப்பில் இருந்தது. அம்மையும் கூட வந்தாள். வண்டிகட்டி
சென்றோம். உள் காடு பனைமரங்களால் சூழ்ந்து இருந்தது. அந்த ஊருக்கு
தோமையார்புரம் என்று பெயர் சூட்டியிருந்தனர். ஒரு சிறு தோமையார் கோவில்.
கடல் காற்றுக்கு பழக்கமான உடல், வெப்பக்காத்துக்கு கொஞ்ச நாளில் பழகியது.
அவள் அப்பாவுடன் சேர்ந்து பல ஊருக்கு சென்று கருவாடு விற்றோம். நீரில்
நின்ற கால், நிலத்தில் நிக்க முடியாதா  என்று மாமனார் அடிக்கடி சொல்வார்.
கொஞ்ச கொஞ்சமாக நில வாழ்வு எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. கடலை மறக்க
ஆரம்பித்தேன். கடலன்னை ஞாபகம் வரும்போதேல்லாம் மச்சுவந்தினியுடன்
பிணைந்தேன். ஒரு நாள் என் மாமனாருடன் கோட்டை நகருக்கு வந்தேன். அங்கே
சம்ப கடை என்று ஒரு பெரிய தெருவே இருந்தது. எல்லாம் கருவாடு வியாபாரம்.
அங்கு ஒரு கடையை முடித்து என்னை உட்கார வைத்தார். மச்சுவந்தினியுடன்
நான் அவ்வூர் வந்தேன். பல வெள்ளைக்காரர் அவ்வூரில் அலைந்தனர். அருகிலே
அந்தோணியார் இருந்தது. அங்குள்ளவர் அனைவரும் கடலை துறந்துவிட்டு வந்தவர்
என்றனர். கோட்டை என்ற பெயரிட்ட அவ்வூரில் என் முதல் விழுது பிறந்தது. "
உன் சந்ததிர்களை  கடற்கரையில் உள்ள மணல் போலவும், வானத்தில் உள்ள
நட்சத்திரங்கள் போலவும் பலுகிப்பெருகப்பண்ணுவேன். " இது கடவுள்
யூதாவுக்கு கூறிய வாக்குதத்தம். என் சந்ததியெல்லாம் கடல் வாழ்க்கையே
அறியாத அக்கோட்டையூரிலே வாழத்தொடங்கினர். கடைசியில் நான் மரிக்கும வரை
கடற்கரைப்பக்கம் செல்லவில்லை. கடல் என்னை மன்னிக்காது என்று தெரியும்.

****


  " பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே"

செழியனின் நினைவு மீண்டதும் விடியல் ஆரம்பமானது.  ஒரு கிறுக்கி
என்னருகில் வந்து " நீ செழியன் வாரிசா.." என்றாள். நான் அதிர்ச்சியுட்டு
தலையை ஆட்டுவதற்குள் அந்த கிறுக்கி ஒடிவிட்டாள். அவள் விட்ட பாதச்சுவட்டை
பின்பற்றி சென்றேன். ஒரு மணற்பாக்கத்தை சென்றடைந்தது. கடலலைகள் கோபமா
என்னருகில் வந்துசென்றது. கடல் குமுறிக் கொந்தளித்து சீறிச் சினந்தது.
நிலத்தை விழுங்க துடித்தது. ஓயாதா ஆட்டம் போட்டது.  நான் கடல் மடியில்
செல்ல ஆயத்தமானேன். என் மூதாதையரில் ஒருவனான செழியன் செய்த தவறுக்கு
பிராயசித்தமாக. நான் கடலோடு கலந்தபோது உலகு புரக்க எழுந்த ஞாயிறு ஒளி
வீசினான்..

------ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.

தெய்வம் என்பதோர் ---தொ.பரமசிவன்

2012-11-25

| | | 6 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்





நாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது என்பதை வரலாறு ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் திரும்பிப் பார்த்தால் மிகுந்த ஆர்வமே மேலிடுகிறது.

நெல்லை மாவட்டத்துக்கு தொ.பரமசிவன், தூத்துக்குடிக்கு ஆ.சிவசுப்ரமணியன், குமரி மாவட்டத்துக்கு அ.கா. பெருமாள். இவர்கள் அனைவருமே வரலாறு என்பது அடித்தள மக்களிடமிருந்தும் அவர்களின் வாக்குகளின் மூலம் கட்டமைக்கப்படும் வரலாறே உண்மையான சனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள்.

தொ.பரமசிவன் அவர்களின் தெய்வம் என்பதோர் என்னும் நூலின் முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் கூறுகிறார்.
  "  எல்லாரும் புத்தகங்களிருந்தும் தத்துவங்களிருந்தும் வாதங்கள் வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் தொ.பரமசிவன் மட்டும் தமிழ் நாட்டுத்தெருக்களின் கோவில் வாசல்களிலும் பிரகாரங்களிலும் ஆற்றங்கரையிலும் கிணற்றடியிலும் சாவு வீட்டு முற்றத்திலும் நாட்டார் தெய்வப்பீடங்களின் முன் நின்று நம் தமிழ் மண்ணின் புழுதி படிந்த வார்த்தைகளின் பேசுகிறார் "

நம் சமூகத்தின் எச்சங்களையும், அதன் தரவுகளையும் ஆராயும் போது களப்பணி என்பது எவ்வளவு முக்கியம் என தொ.ப கட்டுரைகளை படிக்கும்போது உணரலாம்.

   " கோத்த பொய் வேதங்களும்- மதக்
        கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
     மூத்தவர் பொய் நடையும் -சில
        மூடர் தம்......................."
                                 --- பாரதி

வரலாறு என்பது மதக்கொலைகளும் அரசர்களின் கூத்துக்களால் ஆனது. வேதங்களில் பொய் வேதங்களும் உண்டு. மூத்த தலைமையினரில் பொய் நடைக்காரர்களும் இருப்பர் என்பது பாரதியின் கருத்தாகும்.

இப்பொழுதுள்ள சிவன் வழிபாடும் , வைணவ வழிபாடும் வேண்டுமென்றே தமிழகத்தின் கலந்த ஒன்றாகும். அரசர் எவ்வழி அவ்வழியே மக்கள் என்ற கூற்றுக்கிணர்ங்க அரசர்களை குறிவைத்து கலக்கப்பட்ட மதம் சைவம் ஆகும்.  கிறிஸ்தவமும், இஸ்லாமும் எப்படி மக்களை கவர்ந்ததோ அவ்வாறே பௌத்த, சமண, சைவ, வைணவ வழிப்பாடுகளும் தமிழகமெங்கும் பரவியது.( இதனை சமய அரசியல் நூலில் தொ.ப வும், கோபுரத்தாக்குதல் நூலில் ஆ.சிவசுப்பிரமணியமும் மேலும் ஆய்வுப்படுத்தி எழுதியுள்ளனர் )
அவ்வாறு இந்த வைதீக வழிபாடுகள் பரவும் பொழுது நம் தொல் வழிப்பாடுகளான தாய்த்தெய்வ சடங்குகளையும் வழிப்படுதல் முறைகளையும் ஒரளவுக்கு சிதைத்தது.

தொ.ப தனது முதல் கட்டுரையில் தாய்தெய்வ வழிப்பாட்டை பற்றி விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரியும், வார்த்தையும் நம்மை தீவிரமாக யோசிக்க வைக்கும்.



தமிழ் நாட்டில் 99% அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி அமர்ந்த்திருக்கிறது என்றும் அதன் காரணத்தையும் விளக்குகிறார்.  பழைய தமிழகம் எனபது கேரளத்தையும் சேர்த்து அமைந்தது. நம் மண்ணைச் சுற்றி மூன்று பக்கமும் கடலால் சூழ்ப்பட்டது. ஆபத்து என்று ஒன்று வந்தால் அது வடக்கு இருந்துதான் வரவேண்டும். தெய்வம் வடக்கு  திசை நோக்கி தன் மக்களை காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பது தொல்வரலாற்று உண்மை என்கிறார்.

பொதுவாக அம்மன் போன்ற தாய்தெய்வ வழிப்பாடுகளில் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினரே பூசாரியாக உள்ளனர். உலகம்மன், முத்தாரம்மன், மாசானி அம்மன், லோக நாயகி என வட்டாத்திற்கு வட்டாரம் தெய்வங்கள் மாறுபடும். இருந்தாலும் தாய்த்தெய்வத்திற்கு தனித்தன்மைகள் உண்டு. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், பெரிய பொட்டு, மிரட்டும் விழி. வழிப்பாட்டு முறையில் பொங்கலும், முளைப்பாரியும், சாமியாடலும், இரத்தப்பலியும் இவற்றின் தனிக்கூறுகளாகும்.

தமிழ் நாட்டில் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்களின் காலத்தில்தான் பக்தி இயக்கங்கள் என்னும் சைவ, வைணவ மதங்கள் பெருக ஆரம்பித்தன. 11ம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சமூகத்தின் பெருந்திரள் மக்கள் தாய் வழிப்பாட்டையே பின்பற்றி வந்தனர். பின்னர் வந்த பக்தி இயக்கங்களும் ஆண் வழிப்பாட்டை விடவும் பெண் தெய்வத்தை வீரியமிக்கதாக காட்டியது. பார்வதியை உலகை ஆளும் சக்தியாக அடையாளப்படுத்தியது. இந்த முறை நமது தாய் வழிப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

கிறிஸ்துவ மதமும் நம் மக்களிடம் பரவும் பொழுது நம் மக்களிடம் வழங்கி வந்த தாய் வழிப்பாட்டை அறிந்த மதம் பரப்புனர் இயேசுவின் தாயை பிரதானப்படுத்தினர். தூய சவேரியார் ஐரோப்பாவில் இருந்து மாதா சிலையை வரவழைத்து தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயம் சிறியதாக பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  வீரமா முனிவரும் பெரிய நாயகி என்னும் மாதா கோவிலை உருவாக்கி நம் மக்களிடம் மதத்தை பரப்பினார். அதன் காரணமாகவே ஊரேங்கும் மாதா கோவில் அமைக்கப்பட்டது.

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலின் உரிமை சங்கராச்சாரியின் மடத்திற்கு செல்வதற்கு முன்பு அவை தமிழக பொற்கொல்லர் சாதியான விஸ்வகர்மா என்னும் சாதியினரிடமே இருந்துள்ளது. இன்றும் தமிழக பொற்கொல்லரின் குலத்தெய்வம் காமாட்சியம்மன் தான். அதைபோல் நாடார்களுக்கு பத்ர காளியம்மன்.
அந்தக்காலத்தில் குமரி அம்மனை கடல் கெழு செல்வி என்றழைப்பார்களாம். இவள் தான் அங்குள்ள மீனவ சாதிகளுக்கு காவல் தெய்வம்.  இவ்வாறு ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தனித்தெய்வ வழிப்பாடு இருந்துள்ளது. நாட்டார்தெய்வங்களின் வழிப்பாடுகளை ஆராயும் பொழுது மறைந்திருக்கும் மிக முக்கியமான தரவுகள் வெளிவரும். உதாரணத்திற்கு மீனாட்சி அம்மன் என்பது அரசியராக இருந்த தெய்வமாகும். நவ நாட்களின் ஒரு நாளில் மீனாட்சிக்கு வேம்பு மாலை இட்டு வழிப்பாடு நடக்குமாம். அதற்கு இருக்கும் பின்புலம் வேம்பு என்பது பாண்டிய வம்சத்தின் குல குறி. பாண்டிய மன்னனுக்கு வேம்பன் என்று பெயரும் உண்டு. பாண்டிய வம்சம் கடல் அருகே தோன்றிய வம்சம் ஆனதால் மீன் கொடியையும் அதன் பெயருள்ள அம்மனையும் வழிப்பட்டு வந்துள்ளனர்.
பெருந்தெய்வ வழிப்பாடுகளுடன் சிக்கும்போது அதன் வரலாறுகள் அழிக்கப்படுகிறது.

முன்பு காலத்தில் மரித்துப்போன அரசியரின் கல்லறைக்கு பள்ளிப்படை அமைத்து வழிப்படுவார்கள். வெம்மை நோய் வந்து இறந்துப்போன பள்ளிப்படைத்தான் சமயபுரம் மாரியம்மன் என்கிறார் தொ.ப.
இவ்வாறே பல தெய்வங்கள் முளைத்துள்ளது. மணமாகி சுமங்கலியாக இறக்கும் பெண்களையே தெய்வமாக்குகிறார்கள். மாலையம்மன் சுமங்கலியாக இறந்த ஒரு சாமானிய பெண் ஆவாள். ஆண் தெய்வ வழிப்பாடுகள் கருப்புசாமி, சுடலை, அண்ணமார், கருப்புசாமியுடன் நின்றுப் போய்விடுகிறது. பூமணியின் அஞ்ஞாடி நாவலில் கருத்தையன் என்பவன் காவல் தெய்வமாக மாறுவதை அழகாக சித்தரிப்பார். நம் கூடவே வாழ்ந்தவர்களே நாட்டார் தெய்வங்கள் ஆக்கப்படுகிறார். கொலையால் பழியுண்டவர், மக்களுக்காக உயிர் நீத்தவர்களே இவ்வழியில் அடங்குவர்.


சமண மதம் விட்டு சென்ற ஒரு தெய்வத்தை இன்னும் தமிழ்மக்கள் தமது தாய் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர். சமண மதத்தில் "அம்பிகா யட்சி" என்னும் புராணத்தில் வரும் இசக்கி , நெல்லை, குமரி மாவட்டத்தில் பயந்து வழிப்பட்டு வரும் தெய்வமாகும். மேலும் பகவதி அம்மனும் சமண மதத்தின் எச்சங்கள்.  நெல்லை மாவட்டத்தில் சிங்கிகுளம் அருகே மலைக்கோயில் சமணப்பள்ளி ஒன்று உள்ளது. சமண மதத்தில் பள்ளி என்பது கோவில் ஆகும். இங்கு சமண கடவுளான தீர்த்தங்கரர் மற்றும் பகவதி அம்மன் உள்ளது.  இம்மக்கள் இது சமண கோவில் என்று அறியாமல் தீர்த்தங்கரரை முனீஸ்வரர் என்று பெயரிட்டு வழிப்பட்டு வருகின்றனர். கி.பி ஏழாம் நூற்றாண்டில்  மதுரையில் திரு ஞானசம்பந்தரால் கழுவேற்றப்பட்ட சமண மதம் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே இருந்துள்ளது.  இதன் தொடர்ச்சியாகவே சமண வழிப்பாடு  இன்னும் நம் வழக்கத்தில் சமண கடவுள் என்று தெரியாமல் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது.

" எழுதிய வரலாற்றை திருப்பி எழுதுவோம் " என்கிறார் கோசமோ. மேற்கிந்தியப்பகுதியில் தாய்தெய்வ வழிப்பாட்டை எல்லாரிடமும் எடுத்துச் சென்றவர்.
தாய் தெய்வ வழிப்பாடு  நூற்றுக்கணக்கான பரிமாணங்களை உள்ளடக்கியது. அதனை அளந்தரியவும் ஆராயவும் எழுதிக்காட்டவும் பலர் ஈடுபடவேண்டும். அதன் பின்னரே தமிழ் சமுதாய வரலாறு உறுதியான அழுத்தமாக கட்டமைக்கப்பெறும் என்பதில் ஐயமில்லை என்று வேண்டுகோள் விடுக்கிறார் தொ.ப.

*****
வள்ளி கட்டுரையில்

தமிழகக்கடவுளான முருகனின் மனைவிகளான தெய்வானையைப் பார்த்து வள்ளி கேட்கிறாள்.
" ஒழக்கு நெல்லுக்கு ஒழக்கு சள்ளை உணர்த்தி விக்கிறது
     ஒங்க அண்ணணா எங்க அண்ணணா.."
உழக்கு நெல்லுக்கு மாற்றாக உழக்கு கருவாடு விற்றவர்கள் தெய்வானையின் சகோதரர்கள் என்று ஏளனம் செய்கிறாள் வள்ளி.  தெய்வானை ஒரு மீனவப் பெண் என்பதை இந் நாட்டார் பாடல் விளக்குகிறது. இன்றைக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் விசேஷங்களில் பக்கத்து மீனவ கிராமங்களில் உள்ளவர்கள் கலந்துக்கொண்டு மரியாதை செய்யப்படுகிறார். அங்குள்ள மீனவர்கள் அனைவரும் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர்கள் என்பது குறிப்பிடவேண்டியது. அங்குள்ள மீனவர்கள் முருகனை மச்சான் என்றழைக்கின்றனர். தெய்வானை இனத்துப்பெண் என்று உரிமை கொண்டாடுகின்றனர். ஜோ.டி. குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலிலும் கொற்கை நாவலிலும் ராஜம் கிருஷ்ணத்தின் அலைவாய்க்கரையில் நாவலிலும் இந்த தெய்வானை மீனவ பெண் என்ற வரி வருகிறது.

தெய்வானை வள்ளியைப்பார்த்து  திருப்பி சொல்கிறாள்
 " பூனைக்குத்தி விருந்து வைப்பான்
   புனைக்குறவன் உங்கண்ணன்."
வள்ளி குறவ இனத்துப்பெண் என்பதை தெய்வாணை ஏளனம் செய்கிறாள். இவ்வாறு முருகக்கடவுளின் மனைவி இருவரும் தமழ் தொல்குடிகளின் பெண்கள் என்பதால் முருகனும் தமிழ் நாட்டார் தெய்வமாக இருந்திருக்கவேண்டும் என்பது பலர் கருத்து.  பக்தி இயக்கத்தின் வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முருக வழிப்பாடு சிவ வழிப்பாடுடன் இணைந்தது.  முருகன் சிவனின் மகன் என்னும் அடையாளப்படுத்தி மேலும் சிவ வழிப்பாடு பரவியது. வட இந்தியாவில் சிவ வழிப்பாட்டில் முருகனுக்கு பதிலாக கார்த்திகேயன் மாற்றப்பட்டது.
இவ்வாறு பெரிய மதத்தின் முன்னால் சிறு கடவுள் வழிப்பாடு வேறு வழியில்லாமல் இணைத்து விட்டது. கேரளத்தில் ஐயப்பனும் அவ்வாறே.
******

பழயனுர் நீலி கட்டுரையில் வணிக கணவனால் கைவிடப்பட்டு கொலை செய்யப்பட்டு மறுபடியும் பெண் வேடம் அணிந்து வந்து கண்வனை பழிவாங்கிய நீலியைப்பற்றி விரிவாக பேசுகிறார். இன்னும் நம் வழக்கத்தில் நீலிக்கண்ணீர் என்ற சொற்றொடர் பொய் அழுகையை வர்ணிக்கும் சொல்லாக இருந்து வருகிறது. இந்தக்கதை தென்மாவட்டங்களில் இசக்கியம்மனோடு சேர்க்கப்பட்டு வில்லுப்பாட்டில் பாடப்பட்டு வருகிறது.

சித்திரகுப்தனுக்கு தமிழகத்தில் சில இடங்களில் கோவில் இருக்கிறது. போடிக்கு அருகில் சிறு கோவிலும், திருச்செந்தூர் அருகே ஆற்றுர்ச் சோக நாதர் கோவில் உள்ளேயும், காஞ்சிப்புரத்தில் தெற்கு ரதவீதி என்றழைக்கப்படும் நெல்லுக்கார தெருவில் தனிக்கோவில் இருக்கிறது. சித்ரகுப்தன் எமனின் கணக்குப்பிள்ளை. குப்தா என்பது வட நாட்டு பெயர். சித்ரகுப்தன் வடக்கிலிருந்து வந்த தெய்வமாகும். கிபி ஏழாம் நூற்றாண்டில் பெரியாழ்வர் சித்திரகுப்தனை பதிவு செய்திருக்கிறார்.
மரணப்பயத்தை முன்னிறுத்தி இத்தெய்வம் நம்மில் தோன்றியுள்ளது.

****

பாரதியின் கண்ணன் பாட்டையும் ஆழ்வார் பாட்டையும் ஆய்வு செய்யும் தொ.ப. வைணவ சமயத்தில் பிறக்காத பாரதி , கண்ணன் பாட்டை படைத்தது ஆச்சர்யமான ஒன்று என்கிறார்.
ஆண்டாளின் பாடல்களில் எருக்கம்பூக்கள் வரி இடம் பெறுவதால் ஆண்டாளின் பெரிய இடத்துப்பிள்ளை. அவள் சிந்தனையில் சாதாரணபெண்கள் வாழ்வில் இடம்பெறும் எருக்கம்பூக்கள் பற்றி இடம்பெறுவதை குறிப்பிடுகிறார். ஆண்டாள் பாடல்களில் ஒரு பண்பாட்டுக்கலப்பு உள்ளது என்கிறார்.

****
 பார்ப்பனுக்கு முன் பறையன்  என்ற வார்த்தை உண்டு. பார்ப்பனர்களுக்கு முன்பு இவர்களே கோவில் வழிப்பாடுகளை நடத்தி வந்துள்ளனர். தாலி கட்டும் சடங்கில் ஈடுபடும் பார்ப்பனர்கள் ஆனால் தாலி அறுக்கும் சடங்குகளில் வண்ணார்கள் ஈடுபடுகிறார். ஒரு காலத்தில் சடங்குகளால் முன்னின்றவர்கள் இன்று ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.
பெரிய கோவில்கள் சுற்று வீதிகளில் பிராமணர்களும், ரதவீதிகளில் வேளாளர்களும், தெருக்களில் பிற்படுத்தப்பட்டவர்களும், வயல்வெளிகளில் ஒடுக்குப்பட்டவர்களும் வாழும் இடமாக இருக்கிறது. இக்கோவில்களில் மேல் சாதியினர் மட்டுமே அனுமதி.
ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கோவில்களில் எல்லாருக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
****

இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து பல தரவுகளை தொ.ப முன் வைத்துள்ளார். பல ஆய்வுகளுக்கு இந் நூல் முன்மாதிரியாக அமையும்.
நம் வாழும் சமூகம் பல வந்தேறிகளால் கட்டமைக்கப்பட்டது. நாம் பொருளாதர சுரண்டலுக்கு மட்டுமல்ல, சமயச்சுரண்டலுக்கு ஆட்கொண்டிருக்கும் என்பதை தொ.ப வின் கட்டுரைகளை படிக்கும்பொழுது உணர முடிகிறது.

தெய்வம் என்பதோர்..
தொ.பரமசிவன்
யாதுமாகி பதிப்பகம்
பாளையங்கோட்டை.
விலை ரூ50.

--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி




அலைவாய்க் கரையில்--நாவல்

2012-08-24

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


அலைவாய்க் கரையில்...
                                                ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம்.





மறுபடியும் நெய்தல் நில நாவல்.

வண்ணநிலவனின் கடற்புரத்தில் நாவலில் மணப்பாட்டு கிராமத்தையும் , பிலோமியையும் , குரூஸ் பர்னாந்தையும், செபஸ்தியையும் மறக்க முடியாது.
ஜோ.டீ.குருஸின் ஆழி சூழ் உலகு நாவலில் உவரி என்னும் ஆமந்துறையையும், தொம்மந்திரையும், கோத்ராபிள்ளையும், காகு சாமியாரையும் இந்த இலக்கிய உலகு எளிதில் மறக்காது.

அலைவாய்க்கரையில் நாவலும் முழுக்க முழுக்க நெய்தல் நிலப்பரதவர்களைப் பற்றியது.  கடலிலும் கரையிலும் அவர்கள் நிகழ்த்தும் போராட்டத்தினையும், அதனுடையே செல்லும் அவர்களின் வாழ்க்கையையும் நேரில் கண்டு தொகுத்திருக்கிறார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன்.

"  ஐந்திணை மாந்தரில் வாழிடம் சார்ந்து சாவை எதிர்க்கொள்கிற கட்டாயம் நெய்தல் நிலப்பரதவர்களுக்கே உண்டு. முல்லை நிலத்து ஆயனுக்கும் மருத நிலத்து உழவனுக்கும் வாழிடம் சார்ந்து சாவை எதிர்கொள்கிற அச்சுறுதல்கள் எவையும் இல.  மலை சார்ந்து வாழ்கிற குறவர்கள் மலையை முதல் முறை அறியும் போது ஒ ருவேளை இத்தகைய அச்சுறுத்தல் உண்டாகலாம். ஆனா தான் வாழும் மலையை ஒரு முறை அறிந்துவிட்டால் பிறகு பழுதில்லை. எனென்றால் மலை அசையாப்பொருள். அசலம். அதில் கால்பாவி நிற்கலாம். நிலைமை என்பது அதன் மெய்யம்மை. அது நாளும் ஒரு கோலம் கொள்வதென்பது கிடையாது. ஆனால் கடல் அப்படியன்று. அசையும் பொருள். சலம்( சலசலப்பது). இன்றைக்கிருப்பதுபோல நாளைக்கு இருக்காது. நிலையாமை என்பது அதன் மெய்யம்மை. மிதக்கவும் வைக்கும்; மூழ்கடிக்கவும் செய்யும்.  "  என்று கரு.ஆறுமுகத்தமிழன் தனது கட்டுரையில் நெய்தல் நில மக்களைப்பற்றி கூறிப்பிடுகிறார்.

நாவல் ஆரம்பம் தேவதேவனின் கவிதையை நினைவூட்டுகிறது.
"  காலியான கஞ்சிக்கட்டி
   வெற்றிலை புகையிலைப் பெட்டி
  வலைகள் வழியும் வலிய
  தோள்கள் உயர்த்திக் கொண்டு
 வட்டக்கார கமிஷன்கார 
 யாவாரிகள் மொய்த்துக் கிளப்பும்
 இரைச்சல்களைப்
பீ யென ஒதுக்கி விலகி
தத்தமது நிழல் சென்று
வலை பழுது பார்க்க அமரும்"

நாவலின் நாயகன் என அறியப்படும் மரியானும் அவனது நண்பன் நசரேனும் கடலுக்கு போயிட்டு வந்து மீனை இழுத்து கரையில் போட்டுவிட்டு ஏல வியாபாரிடம் காசை வாங்கிக்கொண்டு குடிசையை நோக்கி நடக்கின்றனர். பொதுவாக மீனவர்களுக்கு வியாபார தந்திரம் இருக்காது. அவன் மனம் வியாபாரத்தை நோக்கி இயங்காது. இந்த செயலையே அக்கவிதை விளக்கியிருக்கும்.

ராஜம் கிருஷ்ணன்


அக்கடற்கரை ஆண்மக்கள் கடலுக்கு போயிட்டு வரும் காசை சாராயம் குடிப்பதற்கும் செலவழிக்கின்றனர். ஒரு பழமொழி உண்டு.
"மச்சாது காசு , மிச்சம் இருக்காது " என்று.
இந்நாவல் இரண்டு பிரச்சினையை முன்வைக்கிறது. ஒன்று கட்டுமரத்துக்கும் விசைப்படகுக்கும் உள்ள தகராறு. மற்றொன்று தான் ஊறியிருந்த கிறிஸ்துவ மதத்தை விட்டுவிட்டு இந்து மதத்திற்கு மாறுவது. இப்பிரச்சினைகளை குவிந்த வண்ணமே இந் நாவல் செல்கிறது.

1970களில் சுறா தூவிப்பிரச்சினை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் பல கிறிஸ்துவ குடும்பங்கள் திருச்சபையை விட்டு விலகி இந்து குடும்பங்களாக மாறினர்.  இந்த நடந்த சம்பவம் நாவலில் மையமாக இடம்பெறுகிறது.

மீனவர்கள் பிடித் துவரும் சுறாவின் தூவியை ( செதில்கள்) கோவிலுக்கு வரியாக வழங்க வேண்டும். இதை எதிர்த்து மரியானும் அவனது கூட்டமும் குரல் கொடுக்கிறது.  ஏனெனில் அவர்கள் பிடித்து வரும் மீனை விட அந்த தூவி நல்ல விலைக்கு போகிறது. அந்த தூவியை கோவிலிடமிருந்து மட்டு விலைக்கு ஏலம் எடுத்து கொளை லாபம் பார்க்கிறான் சாயுபு.  அக்கோவிலின் பங்குதந்தை இதை ஏற்க மறுக்கிறார். இது சவேரியார் காலத்து பழக்கம் என்கிறார். அந்தக்காலத்தில் தூவி விலை கம்மி. இன்று அது வெளி நாட்டுக்கு ஏற்றுமதியாகிறது. என்ற காரணத்தையும் ஏற்க மறுக்கிறார்  கோவில் சாமியார். இவர்கள் தூத்துக்குடி சென்று ஆயரை பார்க்கின்றனர். அவரும் கையை விரிக்கிறார். அப்படியானால் நாங்கள் இந்து மதத்துக்கு மாறிவிடுவோம் என்கின்றனர்.  ஐ டோண்ட் கேர் என்று திட்டி அவர்களை அனுப்பி விடுகிறார் ஆயர். அதன் பின்னர் மரியான் சுப்பிரமணியாகிறான் , பெஞ்சமின் பஞ்சாட்சரமாகிறான். இவ்வாறு பத்து குடும்பங்கள் அக்கடற்கரையில் மதம் மாறிகின்றனர். ஒரு வினாயகர் கோவிலை கட்டி அதை வழிபடுகின்றனர். இதுவரை மாதாவை கும்பிட்ட கை, வினாயாகரை துதிக்கிறது.

****

மரியானுக்கும் ஏலிக்கும் உள்ள உறவு வேற எந்த நாவலில் இல்லாத அளவுக்கு கையாளப்பட்டிருக்கிறது.
ஏலி , தூத்துக்குடியிலிருந்து வாக்கப்பட்டு வந்து கணவணை இழந்து தன் குடிசையில் ஒண்டியா நிற்கிறாள். அந்த கடற்கரை ஆண்மக்களின் பார்வைக்கும் செயலுக்கும் இச்சையாகிறாள். ஊரார் அவளை வேசி என்றழைக்கின்றனர்.  ஏலிக்கு மரியானிடம் புது உறவு ஏற்படுகிறது.
எப்பொழுதும் சாராய வாடையும், கவிச்ச நாத்தத்துடன் காணப்படும் மற்ற ஆண்களை விட மரியான் வித்தியாசமாக தெரிகிறான். அவனிடம் தன்னை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கிறாள். தாய்மை அடைகிறாள்!. தன் சிசு வளர்வதை நினைத்து சந்தோசமடைகிறாள். அவன் கடலுக்கு சென்றிருந்த அன்று அவளுக்கு வயிற்று வலி வருகிறது. யாருமில்லாத அவள் வலியில் முனகுகிறாள். பக்கத்து வீட்டு மனுஷி, மரியானின் ஆத்தாவை பிரசவத்துக்கு அழைக்கிறாள். வேசி வீட்டுக்கு வரமாட்டேன் என்கிறாள் ஆத்தா. அவளை வழுக்கட்டாயாமாக இழுத்து செல்கிறாள் அந்த மனுஷி.  கடலுக்கு போயிட்டு வீட்டுக்கு வருகிறான் மரியான். வரும் வழியில் நல்ல மழை. ஈரத்துடன் வந்து அமர்கிறான்.  ஆத்தாவை தேடுகிறான். தாமதாக வீட்டுக்குள் நுழையும் ஆத்தாவைப்பார்த்து எங்கே போயிட்டு வார என்கிறான். அவள் பதில் சொல்லாமல் அடுப்பங்கறைக்கு செல்கிறாள். ஏனெனில் ஏலிக்கும் மரியானுக்கும் உள்ள உறவு அவளுக்கு தெரியும். ஆற்றாமையால் கொட்டுகிறாள். "அந்த ஏலி முண்டைக்கு பிள்ள வெளிய வராம முக்கிட்டு நின்னுச்சு.. எடுத்துவுட்டு வாரேன்.." என்கிறாள். இதைக்கேட்ட மரியானின் ஈரம்பட்ட கை, மேலும் ஈரமாகிறது.  மனசு குளிர்கிறது. மெதுவாக வீட்டை விட்டு வெளியே வருகிறான்.ஏலிக்குடிசையை அடைகிறான். அந்த பக்கத்து வீட்டு மனுஷி " உனக்க சிங்க றால் பிறந்துருக்கு.." என்று வரவேற்கிறாள். அந்த பூஞ்சிசுவைப்பார்க்கிறான். தான் ஆத்தாதான் பிரசவம் பார்த்ததை நினைத்து கண்கலங்குகிறான். அதைப்பார்த்து ஏலி அழுகிறாள்.
"ஏனளுகா.. ! நாம கட்டிப்போம்... அழாத ஏலி.." என்று அவள் நெற்றியில் முத்தமிடுகிறான்.
எந்த இலக்கியத்திலும் , திரைப்படத்திலும் வராத காட்சி இது. என்னை உறைய வைத்தது.

****
கடற்புரத்தில் கல்வி என்பதே இல்லை. படித்தவர்கள் மேட்டுகுடியினர் என்ற மனப்பாங்கு அங்கு அதிகம் காணப்படுகிறது. இங்கிலீஸ் பேசும் நசரேன் பொண்டாட்டியைப் பார்த்து படிப்பு எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறான். தான் தம்பியை படிக்க வைக்க நினைக்கிறான். அவனும் பள்ளி பக்கமே போகாமல் கடல் மடிக்கு செல்ல ஆரம்பிக்கிறான்..
 மாதாவின் இருக்கும் பக்தியை விட கடலின் மேல் அவ்வளவு பக்தி வைத்திருக்கின்றனர் இம்மக்கள் . கடல் நாச்சி, கடலன்னை என்றே அழைக்கின்றனர்.
" நசரேனு  , கடலு மேல நின்னு பேசுறத மறந்துராத "என் று ஒரு வரி வரும். இதன் மூலம் இம்மக்கள் கடலை சத்தியத்துக்கு மேலாக மதிக்கின்றனர். தாய் மேல் சத்தியத்தை விட கடல் மேல் வைக்கும் சத்தியம் ஆழமானது.

****

இம்மக்கள் நாலு நூற்றாண்டுகளுக்கு மேலாக கிறிஸ்துவ மதத்தில் இருந்தாலும் மாய மந்திரங்களை நம்புகின்றனர். பக்கத்து ஊரு தொள்ளாளி (மந்திரவாதி) கட்டி கொடுக்கும் தாயத்தை படகில் கட்டினால் மீன் நல்லா மாட்டும் என்று நம்புகின்றனர்.
திருசெந்தூர் முருகனை மச்சான் என்றழைக்கின்றனர். தெய்வானை பரதவர் இனத்துப்பெண் என்று நம்புகின்றனர். சப்பரம் தூக்குகின்றனர். இவ்வாறு தன் மரபை இன்னும் மீட்டுக்கொண்டு இருக்கின்றனர்.


****
ஏலியின் குழந்தை நோய் வந்து இறக்கிறது. அந்த பிஞ்சுவை குழி தோண்டி புதைக்கின்றனர் மரியானும் ஏலியும்.
ஊர்க்கலவரம் ஏற்பட்டு போலீசு பாதுகாப்பு போட்டிருக்கும் போது ஏலி போலீசுகளின் இச்சைக்கு ஆளாகி தான் குடிசையில் அழுகி சாகிறாள். அழுகிய உடலோடு அவள் குடிசையை எரிக்கின்றனர். அவளின் பிரிவால் ஏங்குகிறான் மரியான். இந்துவாக மாறிய பின்பு புனிதாவை கட்டுகிறான். தன் இரண்டு மகன்களுக்கு கணேசு, முருகன் என்று பெயரிடுகிறான். குடும்ப பிரச்சினையில் ஆத்தா, அப்பன், தம்பி, தங்கை அனைவரையும் விட்டு பொண்டாட்டியுடன் தனியா இருக்கிறான்.
விசைப்படகுக்கும் நாட்டு படகு பிரச்சினை பெரிதாக கிளம்புகிறது. பல கடற்கரை கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மணப்பாட்டில்  நூறு விசைப்படகை கொளுத்துகின்றனர். பிரச்சினை பெரிதாகி போலீசு மரியான் தம்பி பீட்டறைக் கைது செய்கிறது.
இந்து மதம் மாறிய மரியானின் தந்தையின் இறுதிச்சடங்கு கிறிஸ்துவ முறைப்படி நடக்கிறது. ஃபாதர் செபம் செய்ய , அவரை மண்ணுக்குள் இறக்குகிறார்கள். மரியான் ஒரு பிடி மண்ணை எடுத்து போடுகிறான்.  விலகிய மதத்துக்கு மறுபடியும் வர  துடிப்பதாக இந்த முடிவு சொல்லப்படுகிறது.

****
கதை மரியானைச் சுற்றியே நிகழ்கிறது. அவனது ஏக்கங்களும் அவனது குடும்பச்சுழலும் நாவல் முழுவதும் கடல் மணல் போல் பரவியிருக்கிறது.  நாவலில் பல கதா மாந்தர்கள். மரியான் , அவனது அம்மை கத்தரினா, அப்பன் இருதயாராஜ், தங்கை மேரி, ஜெயமணி, தம்பி பீட்டர். நசரேன், அவனது தம்பி ஜான், பெஞ்சமின் என பல மனிதர்களை ரத்தமும் சதையுமாக படைத்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

இந் நாவலில் மற்றொரு சிறப்பு இதன் வட்டார மொழி.
 நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை மொழியில் தனியொரு சுவை உண்டு. அது நெல்லைத்தமிழ், மலையாளத்தமிழ், சிலோன் தமிழ், போர்ச்சுகீஸ் தமிழ்( திருச்சபையில் வரும் வார்த்தை எல்லாம் போர்ச்சுகீஸ் மொழியினை தமிழ்ப்படுத்தப்பட்டவை ) என  எல்லாம் கலந்தது. இம்மொழியை உள்வாங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும். இம்மூன்று மாவட்ட கடற்கரை மீனவர்களுக்கு மட்டுமே இயல்பாக உரியது.  இம்மொழியினை அச்சுபிசுறாமல் உபயோகப்படுத்தியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

ஆழி சூழ் உலகு நாவலுடன் ஒப்பிட்டு கூறுவது நன்றன்று. அதனதன் சாரசமத்தில் எதுவும் குறையில்லை. ஆழி சூழ் உலகு நாவலில் சொல்லப்படாத பல விசயங்கள் அலைவாய்க்கரையில் நாவலில் இடம்பெற்றுள்ளது. கவிச்ச வாடையை விரும்பாத ஒரு சமூகத்தில் இருந்து வந்த ராஜம் கிருஷ்ணன் இதனை படைத்திருப்பது மற்றொரு சிறப்பு.

****
அலையைக்கடந்து கடலுடன் சவால் விட்டு வலை வீசும் இந்த மீனவர்கள் தன் கரை வாழ்வில் தோற்றுவிடுகின்றனர்.  தன் கையிலும் ஒன்றும் வைத்திருப்பதில்லை. மனதிலும் வைத்திருப்பதில்லை. பிரச்சினை ஒன்று வந்தால் அன்றே முடித்துக்கொள்ள முயலுகின்றனர். மனிதகுலத்தின் முதல் வேட்டைத் தொழிலை தொடங்கி வைத்த காரணதினால் என்னவோ இந்த மீனவர் தன் இனத்துக்குள்ளே சண்டையிடுகின்றனர். கொலை செய்கின்றனர். கொலையுண்டு சாகின்றனர். நாவல் முடிவும் ஒரு கொலையுடனே முடிகிறது. அது முடிவு அல்ல. இக்கடற்கரை மண்னின் தொடர் கதை அவை. இந்தக்கடற்கரை சுடுமணல் மீன் ரத்தத்தை மட்டுமல்ல, மனித ரத்ததையும் தன்  மடியில் ஏந்திக்கொண்டிருக்கிறது....!!!

--- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி



துருக்கித்தொப்பி -- நாவல்

2012-07-30

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
துருக்கித்தொப்பி





கீரனூர் ஜாகிர் ராஜா




நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம்
குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு
குட்டி பையன் இருந்தான். மூத்த பெண்ணின் பெயர் ஃபாத்திமா, இவளும்
ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தாள். இரண்டாவது பெண் வஹிதா, மூன்றாவது
நிஷா. அந்த குட்டி பையனின் பெயர் மைதீன். அவனுக்கு அப்போது ஐந்து
வயதிருக்கும். துருதுருவென இருப்பான். எங்கள் காம்பவுண்டில் உள்ளவர்கள்
மைதீனிடம் விளையாடித்தான் நேரத்தை போக்கி கொள்வர். அவர்களது அப்பா
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இரும்பு கடை வைத்திருந்தார்கள். அவர்கள்
வீடு எப்பொழுதும் எனக்கு புதிராகவே இருக்கும். அந்த வீட்டில் இருந்து
மைதீன் மட்டுமே வந்து விளையாடுவான். காம்பவுண்டில் மற்ற பெண்பிள்ளைகள்
பாண்டி விளையாட்டோ மற்ற எந்த விளையாட்டோ விளையாடும்போது அம்மூவரும்
வெளியே வர மாட்டார்கள். தன் வீட்டு மாடிப்படிகளில் உட்கார்ந்து பாவம்போல்
முகத்தை வைத்துக்கொண்டு நாங்கள் விளையாடுவதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருப்பர். அவர்கள் வெளியே வந்து எங்களிடம் பேசினாலே
அவர்களின் பாட்டி திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த பாட்டி சேலையை ஒரு
விதமாக கட்டியிருக்கும். தலையில் எப்பொழுதும் முக்காடு போட்டிருக்கும்.
இந்த அடக்குமுறை எதனால் என்று நான் குழம்பியது உண்டு. அவர்களின் மதமும்
அதன் நெறிமுறைகளும் எப்பொழுதும் என்னை ஈர்த்துக்கொண்டே இருந்தன.
அவர்களின் வீட்டின் உள் அமைப்பு எப்பொழுதும் அமைதியை
தொழுதுக்கொண்டிருப்பதாக எனக்கு பட்டது.  பின்னர் அவர்கள் புது வீடு கட்டி
காம்பவுண்டை விட்டு சென்றுவிட்டனர். நான் அறிய  நினைத்த அந்த இஸ்லாமிய
வாழ்க்கை கடைசியில் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை என்ற நாவல்
மூலமாகவே நிறைவேறியது. ஒரு இஸ்லாமிய கிராமத்தின் வாழ்க்கையோட்டத்தை
அழ்காக சொல்லியிருப்பார் சல்மா. அதில் ராபியா என்ற சிறுமிக்கும்
அடக்குமுறை நிகழ்கிறது. எனக்கு அதை வாசிக்க வாசிக்க என் வீட்டருகில்
இருந்த அந்த முஸ்லீம் குடும்பத்தின் சிறுமிகள் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
இரண்டாம் ஜாமங்களிம் கதைக்கு பின்னர்தான் இஸ்லாமிய குடும்ப
சூழ்நிலைகளும், அவர்களின் வாழ்க்கை முறையை அறியமுடிந்தது. நாவல் என்றால்
என்ன..? இந்த கேள்வியை நீண்ட நாட்கள் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
கடைசியில் விடை தெரிந்தது.  நாம் வாழ்ந்து அனுபவிக்காத பல அனுபவத்தை ஒரு
நாவல் என்னுள் விதைக்கிறது. சிறு வயதில் நான் ஏங்கிய இஸ்லாமிய
வாழ்க்கைமுறை ஒரு நாவல் மூலமாக கொஞ்ச அறிய முடிந்தது. பின்னர் இஸ்லாமிய
நாவல்களான தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை, கீரனுர்
ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை போன்றவை மூலம் அவர்களின் ஒட்டுமொத்த
வாழ்க்கையை ஒரளவு உணர்ந்துக்கொண்டேன். இந்த நாவல்களில் நான் பார்க்கும்
ஒரு ஒற்றுமை. ஒரு வலிமையான வீழ்ச்சியைத்தான் இவை கட்டமைக்கின்றன. நம்
சமூகம் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுகிறது,  தோல்வியை ஒருவித குரூர
புத்தியுடன் எள்ளி நகையாடுகிறது.

இப்பொழுது வருகின்ற நாவல்களில்  வீழ்ச்சிதான் கதையின் கருவாக இருக்கிறது.
கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கித்தொப்பி நாவலும் அவ்வாறுதான்.
எட்டுக்கல் பதித்த வீட்டின் இறக்கத்தையும்,  கேபிஷேவின் வீழ்ச்சியும்தான்
ஜாகிர்ராஜா சொல்ல வருபவை.  காலமாற்றாத்தால் எட்டுக்கல்பதித்த வீட்டின்
சந்தோசங்கள் கலையப்படுகின்றன.  நாவலுக்கு நல்ல தலைப்பு,
துருக்கித்தொப்பி. துருக்கியிலிருந்து வந்தவர்களை துருக்கியர்கள் என்று
கூறி, பின்னர் அது துருக்கர்கள் என்று மருவி, பின்னர் துலுக்கர்கள்
என்றானது. இப்பொழுதும் நம் தமிழ்ச்சூழலில் இஸ்லாமியர்களை துலுக்கர்கள்
என்றே அழைத்து வருகிறோம்." துலுக்கன் திண்ணு கெடுத்தான்" என்ற பழமொழி
இன்றும் நம்மூரில் நடைமுறையில் உள்ளது.

நாவலினுள் ஒரு குழந்தை இலக்கியம் பொதிந்து கிடக்கிறது. அது ரகமத்துல்லா
வின் வாழ்க்கை. பிறை பார்க்க ஒடுவதும், தன் தம்பி பார்ப்பதற்குள் பிறையை
நாம் பார்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஒடி, பிறையை பார்த்தவுடன்
மனதுக்குள் இன்னைக்கே போய் வீட்ல நோம்புக்கஞ்சி சட்டியை கழுவி வைக்கனும்
என்று நினைத்துக்கொள்கிறான். இந்த வரியை வாசித்தவுடன் நான்
நோம்புகஞ்சிக்கு பள்ளிவாசலில் வரிசையில் நின்னதுதான் ஞாபகத்திற்கு
வந்தது. பள்ளிவாசல் எப்பொழுதும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. எங்க
வீட்டுக்கு வருடம் தோறும் பள்ளிவாசல் அட்டை கிடைக்கும். நோம்பு கஞ்சி
ஊற்றுகின்ற முதல் நாள் மட்டும் கறிவடை கொடுப்பார்கள். அது ருசியாக
இருக்கும். சின்ன கைலியும் தலையில் தொப்பியும் நிற்கிற பசங்களுக்கு
மத்தியில் டவுசருடன் நிக்க எனக்கு வெட்கமாக இருக்கும். அவர்களுக்கு
ஊற்றுவதை விட எனது தூக்குவாளிக்கு அதிக கஞ்சி ஊற்றி அனுப்புவார் அந்த
பள்ளிவாசல் தாத்தா...

குட்டி லெவை மகளாகிய பேரழகி நூர்ஜகான் எட்டுக்கல் வீட்டுக்கு மருமகளாக
வருகிறாள். எட்டுக்கல் வீட்டின் அதிகாரம் முழுவதும் மாமியார்
பட்டத்தாம்மள் கையில் இருக்கிறது. மாமானார் கேபிஷே எந்த அதிகாரம் இல்லாத
ஒரு பூச்சியாகத்தான் மாடியில் வசித்து வருகிறார். ஆர்மோனியம்
வாசிப்பதும், அரை நிர்வாண மர்லின் மண்றோ படத்தை ரசிப்பதுமாக அவர் உலகம்
இயங்குகிறது.  நூர்ஜகான் கணவனாகிய அத்தாவுல்லா பட்டபடிப்பு முடித்தவன்.
அதனால்தான் அழகின் சிலையான நூர்ஜகானை கருத்த அத்தாவுல்லாவுக்கு முடிச்சு
வைக்கிறார்கள்.

கேபிஷே துருக்கி தொப்பியை மதராஸில் போய் வாங்கிட்டு வந்ததிலிருந்து
அவரின் மரியாதை கூடுகிறது. அவரின் தலைமையிலே பல பிரச்சினைகளுக்கு தீர்வு
காணப்படுகிறது. சினிமா எடுக்க ஆசைப்பட்டு மதராஸில் போய் லட்ச பணத்தை
இழந்த கேபிஷேவை மனைவி இழக்காரமாக பார்க்கதுவங்கிலிருந்து அவரின் வீழ்ச்சி
தொடங்குகிறது. அவரின் கம்பீரமான வெல்வட் அரக்கு கலர் துருக்கித்தொப்பி
கடைசியில் வெறுமையாக வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தின் கொப்பில் தொங்கி
வெளறிக்கொண்டிருக்கிறது. இது வீழ்ந்ததன்  குறியீடாக ஜாகிர்ராஜ
வெளிப்படுத்துகிறார். தன் மருமகளை கள்ளத்தனமாக ரசிப்பதும், நூர்ஜகான்
குழந்தைக்கு பால் புகட்டும்போது ஜன்னலில் இருந்து பார்ப்பதும்  தனது
பேரன் ரகமத்துல்லாவை தனியே அழைத்து   கொஞ்சுவதுமாக தனது காம இச்சைகளுக்கு
இரை போடுகிறார்.
தனது பேரனின் குறியைப்பார்த்து " என்னடா, இவ்வளவு பெருசு " என்று
கேட்கும் பகுதிகள் தவிர்க்கப்படவேண்டியவை. இந்த மாதிரியான இலக்கிய
பதிவுகளில் பாலியல் வார்த்தை தேவையில்லாமல் திணிக்கப்படுவதாக தெரிகிறது.
ஆழிசூழ் உலகிலும் சூசைக்கும் டீச்சருக்கும் உள்ள உறவு கொஞ்சம்
மிகைப்படுத்தலாகத்தான் இருக்கும். இவை வலிய திணிக்கப்படுகிறதா இல்லை
கதையின் ஒட்டத்தினுள் எழுத்தாளனின் எண்ண பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.

ரகமத்துல்லா சிறு வயதிலே விளைந்து காணப்படுகிறான். சுய இன்பம் செய்யும்
பழக்த்தை கற்றுக்கொள்கிறான் .அம்மா நூர்ஜகான் தம்பிக்கு பால் கொடுப்பதை
வெறித்து பார்க்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து கட்டை பீடி அடிக்கிறான்.
தனது அத்தைப்பெண் மல்லிகாவை காதலிக்கிறான். அவள் இவனை விட ஐந்து வயது
மூத்தவள். தண்ணீர்த்தொட்டியில் அம்மணமாக குளிக்கிறான். மல்லிகாவுக்கு
முத்தம் கொடுக்கிறான். தனது இன்னொரு அத்தை மகள் ஆஸ்துமாவால் இறந்ததும்
தன்னை மறந்து அழுகிறான். மரணததை தத்துவமாக எதிர்கொள்கிறான். தாத்தாவின்
அறையில் நிர்வாண மர்லின் மண்றோ படத்தை தேடுகிறான். குன்னுர் சொந்தக்காரப்
பெண்ணை நினைத்துப்பார்த்துக்கொள்கிறான். தலை வலிதைலம் தடவும் போது அவள்
ஞாபகம் வந்து அவனை தொலைக்கிறது.

விருத்த சேதனம் என்ற சடங்கு பைபிளில் வரும். அதுதான் இன்னும் இஸ்லாமில்
செய்து வரும் சின்னத் விழா. பைபிளில் மோசே விருத்த சேதனம் பண்ணாமல்
இருப்பார். விருத்த சேதனம் பண்ணுவது தூய்மைப்படுத்துதல் என்று அர்த்தம்.
ஒரு ஆளில்லாத வனாந்தரத்தில் கடவுளின் வார்த்தைக்கிணங்க கல்லைக்கொண்டு
முன் தோலை அறுத்து விருத்த சேதனம் பண்ணிக்கொள்வார் மோசே. பின்னர் யேசு
ஞானஸ்தானம் எடுத்ததில் இருந்து விருத்தசேதனம் கிறிஸ்துவத்தில்
நீக்கப்பட்டது. ஆனால் யூத மதமும் இஸ்லாமும் இன்னும்
பின்பற்றிவருகின்றனர். ரகமத்துல்லாவுக்கும் சின்னத் நிகழ்ச்சி
நடைபெறுகிறது. அவன் கெந்தி கெந்தி நடப்பதைப்பார்த்து நண்பர்கள்
கிண்டலடிக்கிறார்கள்.  நாவலின் பாதிக்கு மேல் ரகமத்துல்லாவே பக்கம்
முழுவதுமாக வருகிறான்.

நூர்ஜகான் அழகு சிலையாக வந்து அத்தாவுல்லாவைப் பார்த்து முதன்முதலில்
திகைக்கிறாள். பட்டத்தாம்மாளே மருமகளின் அழகைப்பார்த்து தான் ஆணாக
பிறந்திருக்ககூடாதா என்று எங்குகிறாள்.  அந்த எட்டுக்கல் பதித்த வீடு பல
மர்மங்கள் அடங்கியதாக அவள் நினைக்கிறாள். அவளின் மாமன் அப்பாஸையும்
அத்தாவுல்லாவையும் ஒப்பிட்டு பார்க்கிறாள். முதல்இரவுக்கு மறுநாள் தான்
எமாந்துட்டமோ என்று கிணற்று தண்னீர் எடுத்து புதுப்புடவையினுடையே தன்னை
நனைக்கிறாள். பிறகு அத்தாவுல்லாவை ஏற்றுக்கொன்டு  ரகமத்துல்லா வயிற்றில்
உருவானதும் ஆனந்தம் அடைகிறாள். குழந்தை பிறந்து தன்னை சின்னம்மை கண்டதால்
பிள்ளையை பிரித்துவைத்துவிடுகின்றனர். பாசத்தால் உருகுகிறாள். தன்
பிள்ளையை அடையை நிர்வாணமாக நடமாடுகிறாள். இது தாய்மையின் ஏக்கம்.
எட்டுக்கல் வீட்டிலிருந்து கணவனை பிரித்து தனி வீட்டில் குடியேற
வைக்கிறாள். திருமணத்திற்கு பின் அம்மாவுடன் நாகூருக்கு
சென்றிருக்கும்போது தன்னை மறந்து அழுகிறாள். ஏன் என்ற கேட்பதற்கு
அப்பாஸின் ஞாபகம் வந்ததாக சொல்கிறாள்.


நாவலின் இடையே ஆரம்பகால திராவிட கட்சியின் வளர்ச்சியையும், காங்கிரஸின்
வீழ்ச்சியும் வருகிறது. மூனாகானாவை வைத்து மீட்டிங்க போடனும், சிஎனஏ
இறந்துவிட்டார், முகமதுஅலிஜின்னா தனி பாகிஸ்தான் கேட்கும்போது தனி தமிழ்
நாடு கேட்கவேண்டும் என ராமசாமி நாயக்கர் முடிவெடுத்ததாகவும் வரும்
செய்திகள் ஒரு வரலாறை நயமாக புனைவுக்கு மத்தியில் கொடுக்கிறார்
ஜாகிர்ராஜா. அதில் சில சமயம் எள்ளலும் விளையாடுகிறது. ஊரின் முக்கிய
கட்சிப்புள்ளியின் பிள்ளைகளுக்கு திராவிட ராணி, கருணாநிதி, நெடுஞ்செழியன்
என்று பெயர். அந்தக்காலக்கட்டத்தின் திராவிட கட்சியின் ஈர்ப்பை அங்கங்கே
குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகம்த்துல்லா பழனி சர்ச் முன்னாடி நின்று ஜீசஸிடம் பேசுகிறான். தனக்கு
பாட்டி சொன்ன கதைகளை ஞாபகம் படுத்துகிறான். முகமது நபிக்கு முன்னாள் வந்த
இறைத்தூதர்தான் ஈசா என்ற யேசு. மேலும் இஸ்லாமில் மூசா என்றால்
கிறிஸ்துவதில் மோசே. இங்கு சுலைமான், சாலமோன்.. இப்ராகிம், ஆபிரகாம்,
யூசப், யோசெப்பு.. இஸ்லாமும் கிறிஸ்துவமும் எல்லாம் ஒண்ணுதான் என்று
டீச்சர் பையன் ரூபன் அம்மா நூர்ஜகானிடம் சொல்லும்போது
முறைத்துப்பார்த்துக்கொள்கிறான்.

நாவலின் ஒரு வரி வரும்.. கேபிஷே வுக்கு கல்யாண ஊர்வலம் போகும் போது ஒரு
கூட்டத்தினர் முனங்குவர். அவர்கள் இந்துமக்கள்.
"எல்லாம் அந்த நாகூரால வந்தது..." என்று.. தமிழகத்தின் பல பகுதிகளில்
வசிக்கும் இஸ்லாமியர்கள் மதமாற்றம் அடைந்தே இம்மார்க்கத்தினுள்
வந்துள்ளனர் என்பதையும் நாவலில் பதிவு செய்துள்ளார். இந் நாவல்
இடம்பெறும் ஊரின் முன்னால் கவுண்டர்களின் ஆதிக்கமாக இருந்தது. ஆதனால்
கவுண்டர்களே இம்மதமாற்றம் அடைந்த முஸ்லீம்கள் என ஜாகீர்ராஜா கூறுகிறார்.


வீழ்ச்சியும் எழுச்சியும்தான் தமிழ் வாழ்க்கை. இங்கு அனைத்து  குடும்ப
கலாச்சாரமும் இப்படித்தான் இருக்கிறது. இதற்கு மதமும் ஜாதியும்
தடையில்லை.

எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சி, நூர்ஜகான் குடும்பத்தின்
வள்ர்ச்சியாக முன்னிருத்தப்படுகிறது...

****************************

ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி




கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்

2012-04-09

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


நாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்கியங்கள் வரவில்லை என்பது எனது கருத்து... அண்ணாவும், கலைஞரும் எழுதியுள்ளார்கள்.. பின்னர் நாடகம் என்பது சினிமாவுக்காக மட்டுமே எழுதப்பட்டது... ஆறாவது ஏழாவது படிக்கும்போது வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறும், வ.வு.சி செக்கிழுத்த வரலாறும் பாட புத்தகத்தில் இருக்கும். தேவையற்ற வர்ணணைகள் எதும் இருக்காது. சொல்ல வந்ததை அதன் கதாபாத்திரங்கள் கூர்மையாக சொல்வது என்பது நாடக இலக்கியத்தின் சிறப்பு.

சுமார் ஆறுவருடங்களுக்கு முன்பு நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது நண்பன் சிவா அப்போது இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தான். அவனது தமிழ் பேப்பரில் கோமல் சுவாமிநாதனின் "தண்ணீர் தண்ணீர்" நாடகம் ஒரு பாடமாக இருந்துள்ளது. அதன் தலைப்பு எனக்கு பிடிக்கவே அதை எடுத்துட்டுப் போய் படித்தேன். நாடகம் ஒரு தண்ணீர் பிரச்சினையைப் பற்றியது என்று மட்டும் அப்போது உள்ள என் மனநிலையில் புரிந்தது. அந்த புத்தகம் என் புத்தக அலமாரியை இந்த ஆறு வருடங்கள் அலங்கரித்து, இரண்டு நாடகளுக்கு முன்பு கையில் கிடைத்தது.  இப்போது படித்துப் பார்க்கலாம் என்ற நினைப்பில் எடுத்துக்கொண்டேன்.

நாடகம் ஒரு விதமான புரட்சி மனநிலையை என்னுள் விதைத்தது. தண்ணீர் பிரச்சினை மட்டுமல்ல, மூட நம்பிக்கைகள், சாதிய பிரச்சினைகள், அரசியல் சூழ்ச்சிகள், மனிதநேயம், வணிக வியாபாரம் போன்ற சமுதாய பிரச்சினைகள் அனைத்தும் அலசப்பட்ட ஒரு கரிசல் பதிவு..


1980ல் நாடகமாக போடப்பட்ட இந்தக் கதை பின்னர் வானதி பதிப்பகத்தின் மூலமாக புத்தகமாக வெளியீடப்பட்டுள்ளது.  நாவல்களிலும் சிறுகதையிலும் உள்ள உணர்ச்சிமிக்க வர்ணணைகள் இதில் இல்லை.. சொல்ல வந்த கருத்தை கதையை வெள்ளச்சாமி வாயிலாகவும், வாத்தியார் வாயிலாகவும் சொல்லியிருப்பார். இந்தக்கதையை ஒரு நாவலாக கோமல் எழுதியிருந்தாலும் இது இந்த அளவுக்கு வெற்றி பெற்றுருக்குமா என்று தெரியவில்லை.  இம்மூலக்கதையை கே.பாலசந்தர் திரைப்படமாக எடுத்து தேசிய விருது வாங்கி தந்தார்.

சில காட்சிகள் மனதில் நிற்கின்றன.  ஊருக்குள்ளே நுழையும் வெள்ளைச்சாமி தண்ணீருக்காக ஒவ்வொரு வீடாக ஏறும் போது யாரும் கொடுக்காமல் இருக்க, செவ்வந்தி மட்டும் தண்ணீர் கோரி கொடுப்பாள். அதை மாதிரி  மாட்டு வண்டி கட்டி பக்கத்து குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரும் ஐடியாவை வெள்ளச்சாமி சொன்னதும், எதுவும் கேட்காமல் மாடு வாங்கவும் வண்டி செய்யவும் செவ்வந்தி தன் பங்காக இரண்டு ரூபாய் எடுத்து நீட்டுவாள். அதன் பின்னரே வாத்தியாரும் மண்டையை தட்டிக்கொண்டு எடுத்துக்கொடுப்பார்.
மொழி நடை படிப்பதற்கு சுவாராஸ்யமாக இருக்கும்... படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.. மோகமுள் மாதிரி இருக்க கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

கதை நடைபெறும் கிராமமான அத்திப்பட்டி கோவில்பட்டி அருகே இருக்கிறதாக கதையில் வருகிறது..
கோவில்பட்டி பக்கம் இன்னும் கரிசல் பூமியாகத்தான் இருக்கிறது. அதனால் தான் கோவில்பட்டி இன்றும் தமிழக்த்தின் தொழில்துறையில் முன்னேறி வருகிறது. சாத்தான்குளம் , நாங்குனேரி பகுதிகளும் இன்னும் கரிசல்தான்.. இங்கும் பல கதைகள் கிடக்கும்.. தேட வேண்டும்..

வட்டார மொழியும், கிராமத்தின் யதார்த்தமும் கதை முழுவதும் கொட்டிகிடக்கும்... பூசாரி மூட நம்பிக்கைகளை அவிழ்த்துவிட அதை எதிர்ப்பது கோபால் என்ற ஒரு கம்யூனியுச குரல்..  வண்டிக்கடை நாயக்கரை எதிர்த்து ஊரே தேர்தலை புறக்கணிப்பது, இன்னும் பல ஊர்களில் நடந்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்குள்ள பிரச்சினைகளை அரசும் கண்டுகொள்ளுவதே இல்லை..

வெள்ளைசாமி கதாபாத்திரம் பொலியாவில் அந்நாட்டு மக்களுக்காக அடக்குமுறைக்கு எதிராக போரிட்டு அமெரிக்காவின் தந்திரத்தால் வீர மரணம் அடைந்த புரட்சியாளர் சேகுவேரா வை ஞாபகப்படுத்துகிறது.. தன் நாட்டுக்காக அல்லாமல் மற்ற நாட்டு எல்லாத்துக்கும் விடுதலை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது சேகுவேராவின் கொள்கையாக இருந்தது. அவரை வீழ்த்திவிட்டால் போதும் என்றிருந்த அமெரிக்கா, அவரை கொன்றதும் கொக்கரித்தது. ஆனால் வரலாறு தலை கீழாக திரும்பி இன்றும் உலகம் முழுவதும் புரட்சியின் சின்னமாக சே மாறிப் போனதுக்கு அமெரிக்காவும் ஒரு காரணமாகிவிட்டது...
நீங்கள் கம்யூனிஸ்டா என்ற கேள்விக்கு ,  "  எழைக்காக யார் உதவி செய்தாலும் அவர்கள் கம்யூனிஸ்ட்தான் " என்கிறார் சே.

வெள்ளைச்சாமியும் தன் அண்ட வந்த ஊருக்காக பாடுபடுகிறான், இறுதியில் ஊரின் நனமைக்காக நடக்கும் போராட்டத்தில் உயிர் விடுகிறான், அவன் உதட்டிலிருந்து கடைசியாக வந்த வார்த்தையே " தண்ணீர்.. தண்ணீர்...!!!"

நிழல் குறும்படப்பயிற்சி பட்டறை -- அனுபவம்

2012-02-22

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


மாற்றுசினிமாவுக்கான ஒரே களம் அது நிழல்தான்.
நிழல் குறும்படப் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மூன்று
வருடங்களுக்கு மேலாக இருந்துவந்தது. அந்த ஆசை இப்போது நாமக்கல் பரமத்தி
வேலூரில் நடைப் பெற்ற பட்டறை வகுப்பு நிஜமாக்கியது..
வகுப்புகள் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டிசம்பர் 24ம்
தேதியே மாலையே சென்றுவிட்டேன். நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசு
சிரித்தப்படியே வரவேற்றார். ஆகா எப்படியும் வகுப்புகள் நல்லாத்தான்
இருக்கும் என்று அப்பவே தெரிந்தது..
இரவு சாப்பாடு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.. அந்த இரவு சாப்பாடே இந்த ஏழு நாளும் பிரச்சினை இருக்காது என்று தெரிவித்தது..
பாதிபேர் அன்று இரவே வந்துவிட்டனர். அங்கேயே மண்டபத்திலே படுத்து உறங்கினோம்.
டிசம்பர் 25ம் தேதி முதல் நாள் வகுப்பு ஆரம்பானது. நிழல் ஆசிரியர்
திருநாவுக்கரசு அவர்கள் வகுப்பு எடுத்தார்.
சினிமாவின் வரலாறுகள், இந்திய சினிமா, தமிழ் சினிமா வரலாறுகள் பற்றி ஒரு
சின்ன குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பதுப் போல சொன்னார்.
சினிமா தன் முன்னால் உள்ள கலைகளான  ஒவியம், சிற்பம்,இசை,
நடனம்,இலக்கியம்,நாடகம் ஆகிய அனைத்து கலைகளையும் உள்ளடக்கியது என்றார்.
 1895 ம்  ஆண்டு டிசம்பர் 25ம் தேதி  லுமியன் பிரதர்ஸ் எடுத்த டிரெயின்
வருகை என்ற காட்சிதான் உலகத்தில் முதன்முதலில் எடுத்த சினிமா ஆகும்.
நமது வகுப்பின் முதல் நாள் தேதியும் டிசம்பர் 25, என்ன ஒரு ஒற்றுமை என்று
வியந்துக்கொண்டேன்.
உலகத்தில் எடுத்த முதன் முதலில் எடுத்த சினிமா அடுத்த வருடமே அதாவது 1896
ம் ஆண்டே பம்பாய் வந்துவிட்டது. 1897ல் சென்னை வந்துவிட்டது.
சினிமாவுக்கான அங்கிகாரம் ஐரோப்பாவிலே சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
உலகின் சிறந்த திரைப்பட விழா கேன்ஸ் திரைப்பட  விழா ஆகும். சினிமா என்பது
பிளாஸ்டிக் ஆர்ட், ஒரு வினாடியில் 24 ப்ரேம்ஸ் இருக்கிறது என்றும்,
உலகின் கொடுக்கப்படும் சினிமாவுக்கான விருதுகள் பற்றியும் சிறப்புடன்
எடுத்துரைத்தார். வின்செண்ட் சாமிகண்ணு என்ற தமிழர்தான் இந்த சினிமாவை
இந்தியா, பர்மா முழுவதும் எடுத்து சென்றார் என்பதை எடுத்து கூறும் போது
கொஞ்சம் கர்வம் வந்தது.  மேலும் சினிமாவின் கோட்பாடுகள், அதன்
சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் சுவைப்பட கூறினார். பின்னர் குறும்படம் என்றால்
என்ன? அதன் தேவைகள், அதன் கால அவகாசங்கள், வகைகள், புகழ்பெற்ற
குறும்படங்கள் போன்றவை கூறப்பட்டது. யதார்த்தை பதிவு செய்வதுதான்
ஆவணப்படம் என்று கூறி அதன் வகைகள் ஒவ்வொன்றையும் தெளிவுடன்
எடுத்துரைத்தார். அதன் ஒவ்வொரு வகையும் ஆவணமாக எடுத்தாலே வாழ் நாள்
முழுவதும் எடுக்கலாம் என்பது எனது கருத்து. அந்த அளவுக்கு அடர்த்தி
மிகுந்ததாக இருந்தது.
மேலும் குறும்படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள், நடத்தப்படும்
விழாக்கள் மேலும் இணையதளங்கள் என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மிக ஆர்வம்
தொற்றிக்கொண்டு வந்தது. அன்று இரவு புகழ்பெற்ற குறும்படங்களான பிளாக்
ரைடர், வாட் இஸ் தட், இஞ்சா, மிருககாட்சிசாலை  ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முதல் நாள் பல தேடல்களுடனே முடிவடைந்தது.

இரண்டாவது நாள் நடிப்பு பயிற்சி என்று சொன்னவுடனே மேடையில் கூப்பிட்டு
நடிக்க வைப்பார்கள் என்று எண்ணினேன். நான் நினைத்த விசயத்தை
தவிடுபொடியாக்கி நடிப்பு என்றால் என்ன? அது மனதுரீதியான விசயம் என்ற
நடிப்பின் தந்திரத்தை காலை வகுப்பு எடுத்த சுரேஸ்வரனும் மாலை வகுப்பு
எடுத்த தம்பி சோழனும் எங்களிடமிருந்து வெளிகொணர்ந்தனர். எங்களை
குழந்தைகளாகவும், பறவைகளாகவும். மிருகங்களாகவும் மாற்ற வைத்தனர். இரவு
டாம் டிக்மரின் " ரன் லோலா ரன் " என்ற ஜெர்மனிய படம் திரையிடப்பட்டது.
மேலும் குறும்படங்களான "சித்ரா" இது அ.முத்துலிங்கத்துடைய சிறுகதையை
தழுவி எடுக்கப்பட்டது. மேலும் "ஆழம் காத்து " என்ற படம் எங்கள் மொளனங்களை
உடைத்தது. என்னை வியப்பில் ஆழ்த்தியது.


மூன்றாம் நாள் திரைக்கதை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. கதை வேறு; திரைக்கதை
வேறு என்பதை ஆரம்பத்திலயே பாலுமணிவண்ணன் புரியவைத்துவிட்டார். அவரின்
எளியமையான சொற்றொடர்களால் திரைக்கதை கலை எங்கள் மூளைக்குள் பதிய
ஆரம்பித்தது. திரைக்கதை அடிப்படை என்ன?  அது எவ்வாறு இருக்கவேண்டும் ?
என்பதை எங்களுக்குள் விதைக்கப்பட்டது. பின்னர் எங்கள் அனைவருக்கும் ஒரு
வரியில் கதை சொல்லி அதற்கு திரைக்கதை எழுத வைத்தார். ஒரு சினிமாவுக்கு
திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வகுப்பில் நன்கு
கற்றுக்கொண்டோம்.


நான்காம் நாள் படத்தொகுப்பு பற்றி பொன்குமார் எளிமையாக புரிகிற முறையில்
கூறினார். ஒரு எடிட்டரின் பங்கு என்ன? பொன்குமார் படத்தொகுப்பு பற்றி
மட்டுமல்லாமல் ஒளிப்பதிவின் அம்சத்தை சொல்லி அதன் மூலம் படத்தொகுப்பை
விளக்கியது சிறப்பாக இருந்தது. பழைய முறை எடிட்டிங், அதன் மிஷின்
போன்றவைகளை காட்சிகள் மூலம் காட்டினார். பிலிம் சைஸ், அதன் ரெசொலுயுசன்,
இடிஎல், டைம்போர்டு, லினியர் எடிட்டிங் நான் லீனியர் எடிட்டிங்க அது
எங்கேயேல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது.  அதன் சாப்ட்வேர்கள், அதன்
தொழில்நூட்ப பார்மட்கள் என அனைத்தையும் சொல்லிகொடுத்தார். இன்னொரு நாளும்
இந்த வகுப்பு இருக்ககூடாதா என்று தோன்றுகிற அளவுக்கு இருந்தது.


ஐந்தாம் நாள் ஒளிப்பதிவு வகுப்பு எடுக்கப்பட்டது. கேமரா ஷாட்கள், கேமரா
கோணங்கள்,கேமரா நகர்தல் போன்றவை கற்றுகொண்டோம் அதன் ஒவ்வொரு விசயத்தையும்
எடுத்துகாட்டுடன் விளக்க்ப்பட்டது. அதன் பின்பு  நாங்கள் பார்த்த ஒவ்வொரு
திரைப்படத்தையும் இது இந்த ஷாட், இது டாப் அங்கிள் என பிரித்துபார்க்கும்
பக்குவத்தை இந்த வகுப்பு கற்றுகொடுத்தது.

பின்னர் சக்திவேல் அவர்கள் சினிமாவின் pre production,  post production
பற்றி அழகாக எடுத்து கூறினார். கதை தீர்மாணிப்பது, படம் தயாரித்து
முடித்ததும் அதை விளம்பரப்படுத்துவது, அதை விற்பது போன்ற நூணுக்களை
கூறினார். இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா என்று யோசிக்க வைத்தது.

                    

ஆறாவது நாள் நாங்கள் எற்கனவே பிரிக்கப்பட்ட குழுக்களாக படம் எடுக்க
கிளம்பினோம். இதுவரை படத்தை பார்க்க மட்டும் செய்த எங்களுக்கு இது ஒரு
புது அனுபவமாக இருந்தது. அதை அன்றிரவே எடிட்டிங் நாங்களே செய்தோம்.
மேலும் அன்று செந்தில் அவர்களின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வகுப்பு
எடுக்கப்பட்டது. அதன் தேவைகளையும், வருங்கால வாய்ப்புகளையும்
விளக்கினார்.
                                         
எழாவது நாள் நடைபெற்ற அனுபவ பகிர்வு உண்மையிலே மனம் நெகிழவைத்தது. ஒரு
வார எப்படி போனதென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு எங்கள் நட்பு
மறக்கமுடியாதிருந்தது.
இறுதியில் டைரக்டர் களஞ்சியம் அவர்கள் சான்றிதழகளையும் நாங்கள் எடுத்த
குறும்பட சிடிக்களையும் வழங்கினார். இனிதாக நிறைவடைந்தது  நாமக்கல்
பயிற்சி பட்டறை.
    





இந்த நல்ல வாய்ப்பை அமைத்துக்கொடுத்த நிழல் திருநாவுக்கரசுக்கு என்
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வசன தேவதை - - சிறுகதை

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



திருநெல்வேலி பஸ் மேற்கே போனதும் வாயில பல் தெரிய சிரிச்சான் பிச்சை. கையில் நூறு ரூபாயை நோட்டை தொடடுப் பார்த்தான். அம்மாவ பஸ் ஏற்றிவிட வந்தவனுக்கு நூறு ரூபாயை கையில் திணிச்சுட்டு போயிட்டா. நூறு ரூபாயை தடவிப்பார்த்துட்டு டிக்கெட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். வீட்டில் செவனென்னு ஆதித்யா டிவி பார்த்துட்டு இருந்தான்.  பிச்சைக்கு காமெடின்னா ரொம்ப பிடிக்கும். அவசரமாய் திருநெல்வேலிக்கு கிளம்பிட்டு இருந்தவள். பிச்சையை பஸ் ஏற்றிவிட கூவி கூவிப்பார்த்தாள். இவன் காதுக்கு ஏறுகிற மாதிரி தெரியல. " ஏல மூதி.. நானும் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன்.. நீயும் அந்த டிவியைப்பார்த்துட்டு கெக்க பிக்கன்னு சிரிச்சிட்டு இருக்க..வால... இந்த மூட்டையை என்னால எப்படி தூக்கிட்டு போக முடியும்... எல்லாம் உங்க அக்காவுக்குத்தான் போகுது.. நீ கொண்டு கொடுன்னா.. பெரிய இவன் கணக்கா போக மாட்டுங்க.. " என்று புலம்பிக்கொண்டே வாசல் வரை வந்துட்டு திரும்பி பார்த்து
" பஸ் ஸ்டாண்டுக்கு வந்தா காசு தாரேன்... " என்றாள். உடனே துள்ளிகுதிச்சு டிவியைக்கூட அணைக்காமல் ஒடிவந்துட்டான்.
காசை கூடுக்கும்போது "  மத்தியானம் மட்டும் செவுடி அக்காட்ட உனக்கு சாப்பாடு கொடுக்க சொல்லிருக்கேன்.. மத்த நேரத்துக்கு கடையில சாப்பிட்டுக்கோ.. அதுக்குத்தான் இந்த ரூபாய்.. செலவு பண்ணித் தொலைச்சுக்காத... ரெண்டு நாளுல திரும்பிருவேன்.. "

நேரா சவுந்திரநாடார் கடைக்கு முன்னால் போய் நின்னான். வெளிய இருந்து இம்மானுவேலுக்கு மிஸ்டு கால்  கொடுத்தான். எதுக்குலன்னு முகத்தில் படிந்திருக்கும் மைதா மாவை துடைச்சுக் கொண்டே வந்தான் இம்மானுவேல்.
" சீக்கிரம் சொல்லு... பெரியவரு வர்ற நேரம்..."
"எப்ப வருவ... போரடிக்குது.. "
" போரடிக்குதுன்னா..ஒரு வேலைக்கு போகாத.. இப்படி ஊரு சுத்திட்டு இருந்தா..அடிக்கத்தான் செய்யும்... மூணு மணிக்கு மேல வாரேன்.. "
"சரி சரி அட்வைஸ்லாம் பண்ணாத.. எங்க மாமா பாம்பேல எனக்கு வேலை பார்த்துட்டு இருக்காரு.. வந்தவுடனே உங்க மூஞ்சில கரியைப் பூசிட்டுப் போயிருவேன்.. மிக்கேல் எங்க இருப்பான்...?"
"அவன் எங்கிருப்பான், வெல்டிங்க பட்டறையில்தான் இருப்பான்.. நீ வேணா அவன் கூடப் போய் கதை பேசிட்டு இரு... ஆனாலும் உன்க்கு இந்தப் பெருமை ஆகாதுடா.. பாம்பே மையிருன்னு... சாயங்காலம் பார்க்கலாம்..." என்று சோப்பு படம் போட்டிருந்த பனியனால் முகத்தை துடைத்துவிட்டு போயிட்டான். 
வெயில் மண்டையை பிளந்தது. பண்ணிரண்டு மணிக்கு மேல் கரெண்ட் போயிரும். வீட்டில் போய் ஒண்ணும் பண்ண முடியாது. செவுடி அக்கா எப்படியும் இரண்டு மணிக்கு மேல்தான் சாப்பாடு ரெடி பண்ணும். மிக்கேல் கடைக்கு போலாமா என்ற யோசனையிலே வெங்கடேசபுரம் பஸ்டாண்டை வட்டம் அடித்தான். ஒருவழியா முடிவுக்கு வந்து ஒரு தம் போட  பவுல் அண்ணன் கடைக்குப் போனான்.
பவுல் அண்ணனுக்கு ஊரு பக்கத்துல சாலைப்புதுர். வெங்கடேசபுரம் ஊரு பஜார்லாம் வச்சு பெரிய ஊரா இருந்தாலும் இங்க ஸ்கூலு கிடையாது. இங்க உள்ளங்க அங்கேப் போய்த்தான் படிக்கனும். இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். போற வழியில வரிசையா ஓடை மராமாத்தான் இருக்கும். ஸ்கூலுக்கு போறதுக்கு இன்னொரு வழியும் உண்டு .அது வாய்க்கால் ஒரமா வரும். அதுலத்தான் பிச்சை நடந்துப் போவான். அந்த வழியிலே பெரிய பெரிய ஓட மரமா இருக்கும் . அதன் பொந்துக்குள்ள கண்ட கண்ட புக்கெல்லாம் சொருகி வச்சுருப்பாங்க. அதைப் படிக்கிறதுக்கே பிச்சை அவன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அந்த வழியே போவாங்க. அந்த ஓடைக்காடு ஒரு திகில் பயணமா இருக்கும். அந்த வழியாத்தான் பவுல் அண்ணன் சைக்கிளில் வருவாரு. ஸ்கூலு முடிஞ்சு வருகிற பசங்கள எப்படியும் ஏற்றிக்கிட்டு வருவாரு. இப்பல்லாம் பைக் வாங்கிட்டாரு இப்பவும் ஏற்றிட்டு வருவாரா தெரியல. பவுல் அண்ணன் கடையில் ஒரு சிகரெட்டும் பாக்கும் வாங்கி கொண்டான். பக்கத்துல  கம்ப்யூட்டர் செண்டர் இருந்த இடத்தைப் பார்த்தான். ஜான்ஸி ஞாபகம் வந்தது. ஜான்ஸி கருங்கடல்காரி.. அப்பத்தான் புதுசா வெங்கடசேபுரத்தில் கம்ப்யூட்டர் செண்டர் தொடங்குனாங்க. பனகுளம் மெர்ஸி டெய்லர் தம்பி கில்பர்ட்தான் அதுக்கு ஒனர். பிச்சைக்கு கில்பர்ட்ட நல்லா தெரியும். செண்டர் ஒப்பன் பண்ணினதுல இருந்து அங்கயேத்தான் கிடப்பான். பிச்சைக்கு கம்ப்யூட்டரில் ஓண்ணும் தெரியாதுனாலும் அங்க போய் கொஞ்சம் கத்துகிட்டான். பிச்சை பத்து வரைக்கு படிச்சுட்டு பேட்டை .டி. க்கு படிக்கப் போயிட்டான். கம்ப்யூட்டர் செண்டரில் பெஞ்சை துடைக்கிற வேலைத்தான். இருந்தாலும் கம்ப்யூட்டரில் வேலை பார்க்காண்டான்னு எல்லாரும் அவன் மேல பொறாமை பட்டார்கள். முக்கியமா மளிகை கடை இம்மானுவேலும், வெல்டிங்க்டை மிக்கேலும். அங்க வச்சுதான் ஜான்ஸியைப் பார்த்தான். அவ வந்த அன்னைக்கு இவன் மட்டும்தான் கடையில இருந்தான். இவன்தான் டீச்சர்னு நினைச்சுட்டு குட் மார்னிங்க சார்னுலாம் சொல்லிச்சு. இவன் ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டான். ஜான்ஸி அன்னைக்கு வெள்ளை கலர் சுடிதாரில் வந்திருந்தாள். கையில காதுல கழுத்துல ஒன்னும் இல்லை. மொட்டையா இருந்தாள். அவளுடைய அப்பா சர்ச் பாஸ்டராம். அதான் முதல் நாளுல வெள்ளை கலரில் ஜொலித்தாள். அவளைப்பற்றி எல்லாம் விசாரிச்சு முடிக்கவும் கில்பர்ட் உள்ளே வந்தான். பிச்சை சேரில் இருந்து எழுந்ததும் கில்பர்ட் உட்கார்ந்தான். ஜான்ஸி பிச்சையை முறைச்சுப் பார்த்தாள்.  பிச்சைட்ட என்ன சொன்னாளோ அதை மறுபடியும் கில்பர்ட்டிடம் சொன்னாள்.
"என் பேரு ஜான்ஸி. எங்க அப்பா பேரு திரவியம். எங்க அப்பா சர்ச் பாஸ்டரா இருக்காரு. ஊரு கருங்கடல். எனக்கு ஒரு அக்கா. அவ பேரு மெஸ்ஸி. அவளை பழனியப்பபுரத்தில கட்டிகொடுத்துருக்கு.."
"ஏய்.. ஏய்..  நிறுத்து.. இதலாம் எதுக்கு சொல்லுற.."
"அந்த சாருதான் இப்படி சொல்லனும்னு சொன்னாரு.. " என்று பிச்சையை கையைக் காட்டினாள்.
"அவனே ஒரு எடுபிடி..நீ அவனைப் போய் சாருங்குர.." என்று கில்பர்ட் பிச்சையை தாழ்த்திபேசி ஜான்ஸிட்ட நல்ல பேர் வாங்க பார்த்தான். அடுத்த நாளுல இருந்து ஜான்ஸியைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். ஒருநாள் அவளிடம்
"எப்படிங்க இப்படி கழுத்துலயும், காதுலயும் ஒன்னு போடாம இருக்கிங்க.. அசிங்கமா இருக்காது...?"
"நான் அசிங்கமா இருக்கனா..." பிச்சை கண்ணைப் பார்த்து கேட்டாள்.
"நீங்க இல்லைங்க.. இங்க நிறைய பேரு இப்படித்தான் சுற்றிட்டு இருக்காங்க.. நீங்க தேவதைங்க.. தேவதைங்க எப்போதும் இப்படித்தான் மொட்டையா அழகா இருக்கும்... நீங்க சிரிச்சாலும் அழகா இருக்கிங்க..." என்று வழிந்தான்.
" ஒவரா பேசாதிங்க.. எங்க அக்கா என்னை விட நல்லா இருப்பா..அவளை நீங்க பார்க்கனும்.. எங்க ஊர் சர்ச்சுக்கு ஒரு நாள் வாரீங்களா.. நல்லா இருக்கும்..இந்த ஞாயிற்றுகிழமை.."
இவன் தலையை ஆட்டிட்டு வந்துட்டான். ராத்திரி பூராவும் அவள் நினைப்புதுதான்.. அம்மாட்ட கேட்டான்.
" அம்மா .. உனக்கு ஒரு மொட்டச்சி மருமகளா வந்தா ஏத்துக்கிடுவியா... "
"அடி செருப்பால..." என்ற  குரலோடு செருப்பும் பறந்து வந்தது.

கல்லறைதோட்டத்தில் வச்சு பீர் அடிச்சுட்டு இருந்தாங்க மூணு பேரும்.
" ஞாயிற்றுகிழமை படத்துக்கு போவாம..."
"நான் வரல.. எனக்கு வேலை இருக்கு..." என்று படபடத்தான் பிச்சை.
"அப்படி என்ன வேலை.."
"எனக்கு கருங்கடலுக்கு ஒரு வேலை விசயமா போகனும்.. நீங்கத்தான் எனக்கு வண்டி கொடுக்கனும்.. மிக்கேலு கொடுடா.. ப்ளீஸ்.."
"கருங்கடலுக்கு எதுக்குடா.." மிக்கேல் கேட்டான்.
" அதாண்டா.. அந்த கருங்கடலுகாரியைப் பார்க்க போறாண்டா.. " இம்மானுவேல் எடுத்துக்கொடுத்தான்.
"டேய் அவளா.. நல்ல பிகருதான்.. ஆனா அவ அப்ப பாஸ்டருடா.. வசனகர்த்தாடா... செத்தான் பிச்சை இனிமேல்.. ஹோசன்னா பாடுவோம்... யேசுவின் நாமமே.. இப்படி பாட்டு பாடிக்கிட்டு திரிவாண்டா.. " என்று மிக்கேலும் இம்மானுவேலும் சேர்ந்து கிண்டல் பண்ண, பிச்சை கோபத்துடன் எழுந்துப் போயிட்டான். போகும் போது
"அப்பாலே போ சாத்தானே.." என்று அவர்கள் இருவரையும் பார்த்து சொல்லிட்டுப் போனான்.
சொன்னமாதிரி ஞாயிற்றுகிழமை அவனால் போக முடியவில்லை. அடுத்த நாள் கோபத்துடன் வருவாள்னு பார்த்தா சிரிச்சிக்கிட்டேதான் வந்தா.
"என்ன பிச்சை.. ஒரு மாதிரி இருக்கிங்க..இந்தாங்க..."  என்று தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு வசனத்தை எடுத்து நீட்டினாள்.
"எங்க அம்மா, அப்பாட்ட நீங்க வருவிங்கன்னு சொன்னேன்..அவ்வியளும்  நீங்க வருவிங்கன்னு பார்த்தாங்க.."
வசனத்தை எடுத்துப் பார்த்தான். "  இனிமேலும் நான் எந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.  ஏசாயா 46:4 "
"என்னங்க...இது.."
"வசனம்..!!"
"அது எனக்கு தெரியும்... இதுக்கு அர்த்தம் என்ன...?" பிச்சை வேற அர்த்தத்தில் கேட்டான்.
"அதுக்கு.. கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்குவாருன்னு அர்த்தம்,, போதுமா.."
"அவ்வளவுத்தானா..." என்ற எமாற்றத்துடன் வந்தான். அந்த வசனத்தை வீட்டின் கதவில் ஒட்டினான். அம்மாவுக்கு அந்த வசனம் பிடிச்சிருந்தது. " நீ உருப்புடுவடா.. எப்படியோ பைபிள்லாம் வாசிக்க ஆரம்பிச்சிட்ட.. இந்த வீடு இரட்சிக்கப்பட்ட வீடா மாறிரும்.." என்று சந்தோசத்தில் பொங்கிப்போனாள்



ஜான்ஸி அடிக்கடி வசனம் கொடுத்துட்டு இருந்தாள்.  " உன் துக்கம் சந்தோசமா மாறும், வாதை உன் கூடாரத்தை நெருங்காது.." என பல வசனங்கள் இவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது. அதுக்குள்ள கில்பர்ட் அண்ணனுக்கு நாசரேத்துல வாத்தியார் வேலை கிடைச்சதால் கம்ப்யூட்டர் செண்டரை மூடிட்டாங்க.  ஜான்ஸி பிரிவின் வலியில்லாமல் பிரிந்துப் போனாள். இவன் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டான்.
" உன் முள் என்னை காயப்படுத்தாமல் காயப்படுத்தியது " என்று இவனா ஒரு வசனங்கள் சொல்லிகொண்டு திரிந்தான். ஒரு மாசம்தான் ஆகுது அவளை பிர்ந்து அதுக்குள்ள பல வருசம் ஆன மாதிரி இருக்கு. 

பவுல் அண்ணன் கடையில் வாங்குன சிகரெட் முடிஞ்சுட்டு. தீடிரென்று ஜான்ஸி ஞாபகம் வந்து இவனை நிலைக்குள்ளாக்கியது. பேசாம கருங்கடல் போயிரலாமான்னு யோசிச்சுட்டு மறுபடியும் ஒரு தம் பற்றவச்சுகிட்டு மிக்கேல் பட்டறைக்கு நடந்தான்.
மிக்கேலிடம் வண்டி வாங்கி வச்சுகிட்டான். கருங்கடல் ஒரு உள்காடு. பஸ்லாம் கிடையாது.  ஜான்ஸியை அவங்க மாமாதான் கொண்டு விட்டுட்டுப் போவார். நேரா வீட்டுக்கு போய் செவுடி அக்கா வீட்டுல சாப்பிட்டான். சாயங்காலம் வண்டியை எடுத்துட்டு கருங்கடலுக்கு போயிட்டான். இப்பத்தான் அந்த ஊருக்கு முதல் தடவையா போறான். நேரா சர்ச்சுக்கு பக்கத்தில் உள்ள திண்டில்  போய் உட்கார்ந்தான். அங்குள்ள நல்ல தண்ணிர் பைப்புல தண்ணிகுடித்தான். ஒரு பெட்டிகடைக்குப் போய் " இங்க பாஸ்டர் வீடு எங்க இருக்கு.." என்றான்.
"அது கடைசி தெருவுலா..   நேரா போயி இடது பக்கம் திரும்புங்கன்னு" கையை ஆட்டிகீட்டி சொன்னார். ஜான்ஸி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த தெருவுல கடைசி வீடாக அது இருந்தது. வீட்டுனுள் சிரிப்பு சத்தம் அதிகமா கேட்டது. இவன் நிக்குற சத்தம் கேட்டு ஒரு பொண்ணு வெளியவந்துட்டு உள்ளே போய் ஜான்ஸியை கூட்டிட்டு வந்துச்சு.
வெளியவந்து பிச்சையைப் பார்த்ததும் " எப்படி இருக்கிங்க பிச்சை"  படியில் இருந்து இறங்கி வந்தாள். உள்ளே திரும்பி அப்பா இங்க கொஞ்சம் வாங்கன்னு சத்தம் கொடுத்தாள்.
" சும்மா. இந்த பக்கம்.. சவேரியார்குளம் வரைக்கும் வந்தேன்.. அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.. எப்படி இருக்கிங்க.."
என்றான் பிச்சை. பேச பேச வாய் நடுங்கியது.
அதுக்குள்ள அவங்க அப்பா திரவியம் வர, ஜான்ஸி பிச்சைக்கு அறிமுகம் செய்தாள்.
" நீங்க நல்ல நேரத்துக்குத்தான் வந்துருக்கிங்க... நாளான்னைக்கு எனக்கு மேரேஜ்.. எப்படிடா உங்களை கண்டுபிடிக்கலாம்னு இருந்தேன்.. நீங்களே வந்துட்டிங்க.. ஒரு நிமிசம்.." உள்ளேப் போய் பத்திரிகை எடுத்துட்டு வந்தாள்.  உங்க முழுபேரே பிச்சையா என்று கேட்டுக்கொண்டே பேனாவால் எழுதப் போனாள்.
"இல்லை.. அந்தோணி பிச்சை.."
இந்தாங்க கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்தரனும் நான் ரொம்ப எதிர்பார்ப்பேன். கொடுத்துட்டு
"இருங்க டீ சாப்பிட்டுட்டு போலாம்.. "
"இல்ல.. பரவாயில்லைங்க.. நான் வாரேங்க.." என்று சொல்லிவிட்டு தோத்த மாடு மாதிரி வண்டியை எடுத்துட்டு ஊர் வந்து சேர்ந்தான்.
வரும்போது அவள் நினைப்பாத்தான் இருந்தது. இந்தப் பிள்ளை இப்படி எமாத்திட்டே.. வசனம் கொடுத்து வசனம் கொடுத்து நம்மளை இப்படி புலம்ப வச்சுட்டாளேன்னு டிக்கெட் பாக்கெட்டில் இருந்த ரூபாயைக் கொண்டு டாஸ்மாக்கில் செலவழித்தான்.

ஜான்ஸி கல்யாணத்துக்கு போகவேண்டாமுன்னு முடிவெடுத்து வீட்டிலே கிடந்தான். அம்மா வேற போன் பண்ணி நான் வர இன்னும் இரண்டு நாளு ஆகும்  நீ மேரி அக்கா கடையில சாப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டாள். பிச்சைக்கு வீட்டில் ஒட்டிவச்சிருந்த வசனத்தை பார்க்கும்போது ஜான்ஸி ஞாபகமா வந்தது. கடைசியில் கல்யாணத்துக்கு போலாம்னு முடிவெடுத்து பாக்கெட்டை தடவிப் பார்த்தால் பத்து ரூபாய் தாள் மட்டும் மிச்சம் இருந்தது. திசையன்விளையில் கல்யாணம் எப்படியும் போயிட்டு வருவதற்கு ஐம்பதாவது வேணும். மிக்கேலிடம் கெஞ்சி கூத்தாடி ஐம்பது ரூபாய் வாங்கிட்டு பஸ் ஏறினான். தீடிரென்று எதாவது கிப்ட் கொடுக்கனுமே என்று ஞாபகம் வந்தது. கையில் காசில்லை. என்ன பண்ணுவது என்று சுற்றி சுற்றிப் பார்த்தான். பஸ்ஸில் கூட்டம் அவ்வளாவா இல்லை. பக்கத்தில் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். தான் மொபைலில் உள்ள மெமரி கார்டை கழற்றினான். ஆபத்துக்கு பாவமில்லை..!
"தம்பி... 2ஜிபி மெமரி கார்டு வெளிய வாங்குனா, 400ரூபாய்..எங்கிட்ட 150ரூபாய்க்கு வாங்குதுயா.. எல்லா புது சாங்கும் இருக்கு.. "என்றான்.
அவன் பிச்சையை ஒரு மாதிரி பார்த்துவிட்டு எழுந்து வேற இடத்துக்கு சென்றான். மறுபடியும் இன்னொரு ஆளிடம் சென்று இதே புராணம் பாடினான். அவர் நூறு ரூபாய் எடுத்துகொடுத்து வாங்கிகொண்டான். தன் நிலைமையை நினைத்து நொந்துக்கொண்டான்.

திசையன்விளையில் இறங்கி கிப்ட் செண்டர் போனான். என்ன வாங்கலாம் என்று அலசி ஆராய்ந்து ஒரு கிப்ட் வாங்கினான். கல்யாண மண்டபம் ரொம்ப கூட்டமாக இருந்தது. ஜான்ஸி கல்யாண கோலத்திலும் கழுத்திலும் கையிலும் ஒன்றும் போடாமல் இருந்தாள்.  ஜான்ஸியை பார்க்கும்போது அழகிய கடற்கன்னி மாதிரி இருந்தது பிச்சைக்கு. ஒரு அலங்காரம் இல்லாமல் வெற்றுடலாக இருந்தாள். மேடை ஏறி கிப்டை கொடுத்துவிட்டு இறங்கினான். தன் முதுகை ஜான்ஸி பார்ப்பதாக உணர்ந்து திரும்பி பார்த்தான். அவள் போட்டாவுக்கு போஸ் கொடுத்து சிரித்துகொண்டிருந்தாள். கொஞ்சம் கண்ணீர் வந்தது. துடைத்துகொண்டு சாப்பிடாமல் மண்டபத்தை வெளிய வந்து வெங்கடேசபுரத்துக்கு பஸ் ஏறினான். அந்த கிப்டை எப்ப திறந்துப் பார்ப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அதில் " நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்...! ஆதியாகம் 12:2 " என்று பொன்னிற எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும். கண்டிப்பா அதை ஜான்ஸி பார்ப்பாள்...!!!


--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி